Skip to main content

போஸ்டர்களால் மதுரை ஸ்மார்ட் சிட்டி அலங்கோலம்! - வேடிக்கை பார்க்கும் காவல்துறை! 

Published on 06/04/2022 | Edited on 06/04/2022

 

‘காவல்துறை எச்சரிக்கை! நோட்டீஸ் ஒட்டக்கூடாது! அச்சு பதிக்கக்கூடாது!’ என்ற வாசகங்களை அரசு சுவர்களிலும், பாலங்களிலும், தூண்களிலும் பார்க்கிறோம். அந்த எச்சரிக்கையை, சம்பந்தப்பட்ட யாரும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பதற்குச் சான்றாக, அன்றாடம் நம் கண்ணில்படும் சுவரொட்டிகள் உள்ளன. ஒருவழிப்பாதை என்பதைக் காட்டும் குறியீடுகளும்கூட, சுவரொட்டிகளால் மறைக்கப்படுகின்றன.

 
‘சிறிதும் சிந்திக்காமல், எச்சரிக்கை பலகைகளில்கூட போஸ்டர் ஒட்டுகின்றனர். இந்த அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது?’ என ஒரு வழக்கில் உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது. 


சென்னையில், மெட்ரோ ரயில் திட்ட வளாகங்கள், கட்டுமானங்களில் அனுமதியின்றி போஸ்டர்கள், துண்டுப் பிரசுரங்கள் ஒட்டினால் ஆறு மாதம் சிறைத்தண்டனை அல்லது ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என, மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்ததும் நடந்தது. தூய்மையைப் பராமரிக்கும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 24,384 இடங்களில் 1,00,420 சுவரொட்டிகளை மாநகராட்சி பணியாளர்கள் கிழிக்கவும் செய்தனர்.

  
மதுரை உட்பட, தமிழகத்தின் முக்கிய மாநகராட்சிகளில் மத்திய அரசு அறிவித்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ரூ.345 கோடி மதிப்பிலான இத்திட்டத்தின் வாயிலாக, மதுரை நகரம் சீர்மிகு நகரமாக மாற்றப்பட்டு வருகிறது. ஆனாலும், அரசு செலவில் பாலங்களில் பெயின்ட் அடிக்கும் பணி ஒருபுறம் நடந்தாலும், இன்னொருபுறம் போஸ்டர்கள் கன்னாபின்னாவென்று ஒட்டப்படுகின்றன. விதிமீறலாகச் சுவர் விளம்பரங்களும் செய்யப்படுகின்றன. இதனால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்துகள் ஏற்படுகின்றன. விதிமீறலாகப் போஸ்டர் ஒட்டுவோருக்கு, அதிகபட்சம் 3 மாத சிறை அல்லது அபராதம், அல்லது இரண்டும் சேர்ந்து வழங்கமுடியும்.  வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டிய காவல்துறையோ வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. 


சட்டம் ஏட்டில் மட்டுமே இருப்பதால் யாருக்கென்ன பயன்?

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.