Skip to main content

நக்கீரன் இணையச் செய்தி எதிரொலி! - மதுரை சிறையிலிருந்து மாற்றலான வார்டர்! 

Published on 26/03/2021 | Edited on 26/03/2021

 

madurai central prison warden transfer

 

கடந்த 22.04.2019-ல், ‘சிறைத்துறை ஒழுங்கீனங்கள்!- மத்திய சிறை ஒன்றில் மட்டமான செயல்கள்!’ என்னும் தலைப்பில் நக்கீரன் இணையத்தில் வெளியான செய்தியில், மதுரை மத்திய சிறையில் வார்டனாகப் பணிபுரியும் சுந்தரபாண்டியன் குறித்து கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தோம்.

 

‘பெண் கைதிகளைப் பார்ப்பதற்கு வரும் உறவுக்காரப் பெண்களை ‘மதினி’ என்றழைக்கும் சுந்தரமான ஒரு வார்டனின் தவறான தொடர்புகளால் அவ்வப்போது பிரச்சனைகள் எழுவதுண்டு. இரவு நேரங்களில் மகளிர் சிறைகளுக்குப் ஃபோன் செய்து, இரட்டை அர்த்தத்தில் பேசி அவர் ஜொள்ளு விடுவது வாடிக்கையாக நடப்பதுதான். மாவட்டச் சிறைகளில் இருந்து மாமூல் பெறுவதிலும் இவர் கில்லாடி.’

 

தற்போது, மதுரை மத்திய சிறை விஜிலன்ஸ் பிரிவு, முதன்மை தலைமை வார்டன் சுந்தரபாண்டியன், மாற்றுப் பணி அடிப்படையில் பணிபுரிந்து வந்ததற்கான உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரை உளவுப் பிரிவிலிருந்து விடுவித்து, வேலூர் சிறையில் பணி செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

madurai central prison warden transfer

 

மதுரை மத்திய சிறை வட்டாரத்திலோ “உத்தரவில், என்ன காரணத்துக்காக சுந்தரபாண்டியன் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்படவில்லை. ஆனாலும், நக்கீரன் சுட்டிக்காட்டிய குற்றச்சாட்டுகளின் நீட்சியாக, சமீபத்திலும் ஒரு பெண் காவலரிடம் டபுள் மீனிங்கில் பேசி, அது டி.ஐ.ஜி. வரை புகாராகச் சென்றது. மேலும், மேலூர் – வெள்ளாளப்பட்டி புதூர் மந்தை திடல் அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட தேவர் சிலையை அகற்றுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியபோது, தாக்குதல் நடத்தியவர்கள் கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சிறையில் பார்ப்பதற்கு, முக்கியப் பிரமுகர் ஒருவருக்கு ‘ஏற்பாடு’ செய்தார் என்ற புகாரும் போனது. வேறு சில காரணங்களும் உண்டு” என்கிறார்கள்.

 

ஒழுங்கீனங்களில் ஈடுபடுவோர் மீது சிறைத்துறை எடுக்கும் நடவடிக்கைகளால், சிறைகள் சுத்தமானால் சரிதான்! 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.