Skip to main content

15 கோடி ரூபாய் செல்போன் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது! 

Published on 26/11/2020 | Edited on 26/11/2020

 

krishnagiri mobiles truck madhya pradesh police arrested person


கிருஷ்ணகிரி அருகே, கடந்த மாதம் 15 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்த சம்பவத்தில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் இருந்து, மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு 15 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை ஏற்றிக்கொண்டு கடந்த அக். 21- ஆம் தேதி அதிகாலையில் ஒரு கண்டெய்னர் லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வழியாக சென்று கொண்டிருந்தது.

 

மேலுமலை என்ற இடத்தில் லாரி சென்றபோது, மர்ம நபர்கள் லாரியுடன் செல்போன்களை கடத்திச்சென்றனர். பின்னர் லாரியை ஓரிடத்தில் ஒதுக்குப்புறமாக நிறுத்திவிட்டு, அதில் இருந்த செல்போன்களை கொள்ளை அடித்துச்சென்றனர். 

 

கடும் சவாலாக விளங்கிய இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து துப்புத்துலக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர விசாரணையில், மத்தியபிரதேச மாநிலம் இண்டூர் பகுதியைச் சேர்ந்த பரத் தேஜ்வானி (37) என்ற முக்கிய குற்றவாளியை தனிப்படையினர் கைது செய்தனர். 

 

கைதான கொள்ளையனை காவல்துறையினர் நவ.24- ஆம் தேதியன்று கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்தனர். ஓசூர் அரசு மருத்துவமனையில் கொள்ளையனுக்கு கரோனா தொற்று பரிசோதனை நடந்தது. இதையடுத்து, அவரை ஓசூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், பரத் தேஜ்வானியை 13 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

 

மனுவை விசாரித்த நீதிபதி தாமோதரன், 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து கொள்ளையனை காவலில் எடுத்த காவல்துறையினர், அவரை ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

மண்ணுக்குள் போதைப் பொருள்; தோண்டி அழிக்கும் காவல்துறை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
police discovered and destroyed the wine cellars hidden in the liquor

வேலூர் மாவட்டத்தில்  கள்ளச்சாராயம்  காய்ச்சுபவர்களைத் தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி வனப்பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக பெரிய வகை பேரல்களில் ஊரல்கள் பதுக்கிவைக்கப்பட்டு சட்டத்துக்கு விரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட காவல்துறை, கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து வனப்பகுதிக்குள் பத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது,  கள்ளச்சாராயம் காய்ச்சி  லாரி டியூப்கள் மூலமாக நிரப்பி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக முள் புதர்களில்  மறைத்து வைத்துள்ளனர். இதனைக் கண்டுபிடித்த போலீசார் சாராய டியூப்புகளை தோண்டி எடுத்து, அதைக் கீழே கொட்டி அழித்தனர்.

அதேபோல் பேரணாம்பட்டு அருகே சாக்கர் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 2900 லிட்டர் சாராய ஊரல்களைக் கண்டுபிடித்து கொட்டி அழித்தனர் . இதனால் நடுக்காட்டில் சாராயம் ஆறாக ஓடியது. வழக்கமாக சாராய ஊரல்கள்தான் ட்ரம்களின் ஊரல் போட்டு அதனை மண்ணுக்கு கீழே புதைத்து வைப்பார்கள். போலீஸில் மாட்டக்கூடாது என்பதற்காக இதுபோன்று செய்வார்கள். ஆனால் இப்பொழுது காய்ச்சப்பட்ட சாராயத்தை அதேபோல் செய்கிறார்கள். அதனையும் போலீசார் கண்டறிந்து மண்ணுக்குள் இருந்ததை தோண்டி எடுத்து கீழே போட்டு அழித்தனர்.

காவல் துறையினர் நடத்திய இந்த அதிரடி ரெய்டில், வனப்பகுதிகளில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 2900 லிட்டர் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஊரல்களைக் கண்டுபிடித்து நடுக்காட்டில் கீழே கொட்டி அழித்தனர் காவல்துறையினர்.