Skip to main content

கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 26 பேருக்கு கரோனா! எல்லைகளில் சோதனை தீவிரம்! ஆட்சியர் எச்சரிக்கை!

Published on 16/06/2020 | Edited on 16/06/2020

 

cuddalore district


கரோனோ நோய்ப் பரவலைத் தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கு ஜூன் 30-ஆம் தேதி வரை நீடிக்கிறது. கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 531ஆக இருந்தது. ஆனால் நேற்று குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த 48 வயது கணவர், 43 வயது மனைவி, 9 வயது மகன், 4 வயது மகள் என 4 பேர் உட்பட நேற்று ஒரே நாளில் 26 உயர்ந்து 557 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மாவட்டத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் 467 பேர் குணமடைந்துள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். 88 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

 



கடலூர் மாவட்டத்தில் மீண்டும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்குக் கடலூர் மாவட்ட எல்லைகளில் சின்னகங்கணாங்குப்பம், பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டை, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொழுதூர், வேப்பூர், சிறுபாக்கம், மங்கலம்பேட்டை ஆகிய இடங்களில் செக்போஸ்ட் அமைத்து மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படுகின்றன. அப்படி வருபவர்களுக்கு அதே இடத்தில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுவதுடன், கரோனா பரிசோதனைக்கான மாதிரிகளும் எடுக்கப்படுகின்றன.

இ- பாஸ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். கரோனா மாதிரி முடிவுகள் வரும் வரை தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் "கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அலட்சியமாக உள்ளனர். முகக் கவசம் அணிவதில்லை, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில்லை. தவறான தகவல் கொடுத்து இ-பாஸ் பெற்று இங்கு வருகின்றனர். போலியான திருமண அழைப்பிதழ் கூட அச்சடித்துக் கொடுத்து வருகின்றனர். இ-பாஸ் பெற்று வருபவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும், பரிசோதனை செய்து கொள்ளவும் முன் வருவதிவில்லை.  

கிராமப்புற பகுதிகள் வழியாக ஊருக்குச் சென்று விடுகின்றனர். அவர்கள் அரசை ஏமாற்றுவதாக நினைத்துத் தங்களின் குடும்பத்தினருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் அவர்களுக்கு ஞானோதயம் வருகிறது. கடலூர் நகரில் 45 வார்டுகளில் ஐந்து வார்டுக்கு ஒரு துணை-கலெக்டர் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. வீடு வீடாகச் சென்று காய்ச்சல், சளி உள்ளிட்ட உடல் உபாதைகள் யாருக்காவது உள்ளதா என ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். கிராமப்புறங்களிலும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தலைமையிலான குழுவினர் கண்காணித்துத் தகவல்கள் அளிக்கின்றனர். முகக் கவசம் இல்லாமல் வெளியில் வருபவர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும்" எனக் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.  
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகள் குறைவு; ஆட்சியரின் உத்தரவால் பரபரப்பு

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Nutrient organizer suspended due to shortage of eggs in student rations

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி அரக்கோணம் அடுத்த கும்பினிபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு நடத்தினார். அப்போது பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு சாப்பாடு மற்றும் முட்டை வழங்குவதை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது 7 மாணவர்களுக்கு முட்டை கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து முட்டைகள் இருப்பு வைக்கும் அறை மற்றும் அரிசி, பருப்பு வைக்கும் அறையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் சத்துணவு முட்டைகள் போதுமான அளவு இருப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டது. இது குறித்து சத்துணவு அமைப்பாளர் மலர் என்பவரிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டதற்கு வேறு பள்ளியில் முட்டைகள் இறக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் பதிவேடுகளை முறையாக பராமரிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சத்துணவு அமைப்பாளர் மலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டார். மேலும் சத்துணவு அமைப்பாளர் மலர் பணியில் சேர்ந்த நாளிலிருந்து இதுநாள் வரை பதிவேடுகள் முறையாக பராமரித்துள்ளாரா? அந்த பதிவேடுகளில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால் அதற்கு உண்டான அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் அதிரடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.