Skip to main content

ஐ.பி.எல். போட்டியை நடத்தினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் - சீமான் எச்சரிக்கை

Published on 09/04/2018 | Edited on 09/04/2018
Seeman


 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளைச் சென்னையில் நடத்தினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை கூறியுள்ளார். 
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

பன்னெடுங்காலமாக இந்திய அரசால் வஞ்சகம் செய்யப்பட்டு அதன்மூலம் தமிழக நிலவியல் மீது போர் தொடுக்கப்பட்டு இருப்பதன் விளைவாகத் தமிழகமே கொந்தளித்துக் கிடக்கிறச் சூழலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், நியூட்ரினோ திட்டத்தைக் கைவிடக்கோரியும் மிகப்பெரும் போராட்டங்கள் வெடித்து தமிழர் நிலமே போர்க்கோலம் பூண்டிருக்கிற இச்சூழலில் சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நடத்திட முனைவது தமிழர்களின் போராட்டத்தைத் திசைதிருப்பி நீர்க்கச் செய்ய நடக்கும் சதித்திட்டமாகும். இச்செயலை இனமானத் தமிழர்கள் யாவரும் ஒருபோதும் அனுமதித்திடக் கூடாது.
 

காவிரி நதிநீர் சிக்கலென்பது காவிரிப்படுகை விவசாயிகளின் சிக்கல் மட்டுமன்று. அது ஒட்டுமொத்தத் தமிழகத்தின் உயிர்நாடிச் சிக்கல். தமிழகத்தில் 20 மாவட்டங்கள் குடிநீரையும், 12 மாவட்டங்கள் நீர்ப்பாசனத்தையும் காவிரி நதிமூலம்தான் பெற்றுக் கொள்கின்றன. 2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் காவிரி நதிநீரையையே முழுமையாகச் சார்ந்திருக்கிறார்கள். அத்தகைய அதிமுக்கியத்துவம் வாய்ந்த காவிரிச் சிக்கலில் மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகளும், இயக்கங்களும், பலதரப்பட்ட அமைப்புகளும், இளைஞர்களும், மாணவர்களும், பொது மக்களும் கிளர்ந்தெழுந்து போராடிக் கொண்டிருக்கிற தற்காலச் சூழலில் ஐ.பி.எல். போட்டிகள் சென்னையில் நடத்துவது துளியளவும் ஏற்புடையதல்ல. சோறுக்கும், நீருக்குமே ஆபத்து நேர்கிற இக்கட்டான நெருக்கடிக்காலக் கட்டத்தில் கேளிக்கை கொண்டாட்டங்களும், விளையாட்டுப் போட்டிகளும் தேவையற்றது.
 

இன்றைக்கு நாம் விவசாயிகளுக்காகப் போராடாவிட்டால் நாளை நாம் சோற்றுக்காகப் போராட வேண்டி வரும் என்கிற நுட்ப அரசியலை உள்வாங்கிக் கொண்டு ஒவ்வொருவரும் போராட்டக் களத்திற்கு வர வேண்டும். இன்றைக்கு ஒரு விவசாயி சாகிறாரென்றால் நாளை நாம் உணவின்றிச் சாகப்போகிறோம் என்பதற்கான முன்னெச்சரிக்கை என்பதனை உணர வேண்டும். இன்றைக்குக் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்துகொண்டு நாம் உண்ணுகிற உணவானது, எங்கோ ஒரு மூலையில் வெயிலிலும், மழையிலும் ஒரு ஏழை விவசாயி மாடாய் உழைத்துதான் நமது தட்டுகளுக்கு வந்திருக்கிறது என்பதை நன்றிப்பெருக்கோடு நினைத்துப் பார்க்க வேண்டும். காவிரி நதிநீர் உரிமை கேட்டு விவசாயிகள் கண்ணீரோடு களத்தில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிற இச்சூழலில், நாம் அவர்களுக்காகப் போராடாது கிரிக்கெட் போட்டிகளிலேயே லயித்துக் கொண்டு இருக்க விளைவது மனிதத்தன்மையேயற்ற துரோகச்செயலாகும். அச்செயலினை தமிழின இளையோர்களும், மாணவர்களும் முழுதுமாய் புறக்கணித்திட வேண்டுமாய் உங்களது உடன்பிறந்தவன் உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.
 

கேளிக்கைகளிலும், பொழுதுபோக்குகளிலும் நாட்டம் கொண்டிருக்கிற ஒரு இன மக்களைப் புரட்சிக்குத் தயார் செய்ய முடியாது என்பது வரலாறு நமக்குத் தந்திருக்கிற படிப்பினைச் செய்தியாகும். தங்களது வாழ்வாதார உரிமைகளுக்காகத் தமிழகமே ஒற்றைக் குரலெடுத்து போராடிக்கொண்டிருக்கும்போது தமிழகத்தின் தலைநகரில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நடத்திட முனைவது தமிழர்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் அவமதிக்கிறக் கொடுஞ்செயலாகும். ஆகவே, அதனைத் தடுத்து நிறுத்தித் தமிழர்களின் உணர்வினையும், உள்ளக்குமுறலையும் உலகுக்குத் தெரிவித்திட முனைவது வரலாற்றுப் பெருங்கடமையாகிறது.
 

ஆகவே, வரும் ஏப்ரல் 10 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருக்கும் ஐ.பி.எல். போட்டியினை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும், தமிழர்களின் சிக்கல்களுக்குத் தீர்வு எட்டும்வரை ஐ.பி.எல்.போட்டிகளை வேறு மாநிலத்தில் நடத்திக் கொள்ள வேண்டும் எனவும் பி.சி.சி.ஐ., ஐ.பி.எல். நிர்வாகத்தினைக் கேட்டுக்கொள்கிறேன். இதற்குத் தமிழக அரசானது உரிய அழுத்தம் கொடுத்து அப்போட்டிகளை இடமாற்றம் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
 

தமிழர்களின் உரிமைப் போராட்டங்களையும், உணர்வெழுச்சியினையும் துளியும் பொருட்படுத்தாது ஐ.பி.எல். போட்டிகளை தமிழகத்தில் நடத்திட முற்பட்டால் அதற்குப் பிறகு மைதானத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு அவர்களே பொருட்பேற்க நேரிடும் என்றும், போட்டி நடக்கவிருக்கிற அன்றே மிகப்பெரும் பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கை செய்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

தமன்னாவிற்கு சைபர் கிரைம் சம்மன்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
tamanna summoned by maharashtra cyber crime for ipl telecast issue

கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியது. அதன்படி அந்நிறுவனத்தின் செயலியான ஜியோ சினிமா செயலியில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வந்தது. 2023 முதல் அடுத்த ஐந்தாண்டிற்கு ஐபில் தொடரின் டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஃபேர்பிளே என்கிற சூதாட்ட செயலியில் சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதாக கூறி வியாகாம் நிறுவனம் மகாராஷ்ட்ரா சைபர் கிரைமில் புகார் அளித்தது. அந்த புகாரில், ஃபேர்பிளே செயலில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதால் தங்கள் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஃபேர்பிளே செயலியின் ஊழியர் ஒருவரை கைது செய்தனர். மேலும் அச்செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களை விசாரணை செய்ய முடிவெடுத்தனர். அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பாட்ஷா, சஞ்சய் தத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா உள்ளிட்ட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.  

கடந்த 23 ஆம் தேதி சஞ்சய் தத்துக்கு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால், தான் இந்தியாவில் இல்லாத காரணத்தால் தன்னால் ஆஜராக முடியவில்லை என சஞ்சய் தத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது தமன்னாவிற்கு வருகிற 29ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

Next Story

சென்னைக்கு மீண்டும் தோல்வி; தனி ஒருவனாக வெற்றியைத் தேடித்தந்த ஸ்டாய்னிஸ்!

Published on 23/04/2024 | Edited on 24/04/2024
Chennai super kings again lost to Lucknow team

ஐபிஎல் 2024இன் 39 ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் ரகானேவும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே ரகானே 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து வந்த டாரியல் மிட்செல் 11 ரன்களும் ஜடேஜா 17 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 60 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை சென்னை அணியினர் எடுத்தனர்.

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி. லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குவிண்டன் டி காக்கும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். 3 பந்துகளில் ரன் எடுக்காமல் குவிண்டன் டி காக் ஆட்டம் இழக்க, அவரைத் தொடர்ந்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் மறுமுனையில் 14 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுல் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த படிக்கல் 19 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் நின்று அபாரமாக, ஆடி 63 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஸ்டாய்னிஸ் லக்னோ அணியை வெற்றி பெறச் செய்தார். லக்னோ அணி இறுதியாக 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து வெற்றியைத் தனதாக்கிக்கொண்டனர். கடந்த போட்டியிலும் லக்னோ அணி சென்னை அணியை தோற்கடித்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாகவும் சென்னை அணியை லக்னோ அணி தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.