Skip to main content

விபத்து ஏற்படுத்திவிட்டு போலி ஆவணம் தாக்கல்; லாரி உரிமையாளர் மீது இன்சூரன்ஸ் நிறுவனம் புகார்

Published on 23/02/2023 | Edited on 23/02/2023

 

insurance company filed a complaint against lorry owner filing fake document

 

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் நெடுவாசல் மேற்கு பகுதியைச் சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் முருகேசன் கடந்த 2021 பிப்ரவரி 23ம் தேதி இரவு கைகாட்டி - பேராவூரணி சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது அந்த வழியாகச் சென்ற டி.என். 55 யூ 6161 எண்ணுள்ள லாரி மோதி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வடகாடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போது விபத்து ஏற்படுத்திய லாரிக்கான காப்பீடு உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் முருகேசன் உறவினர்கள் புதுக்கோட்டை மோட்டார் வாகன விபத்து உரிமை நீதிமன்றத்தில் காப்பீட்டு நிறுவனம் ரூ. 50 லட்சம் எங்களுக்கு தரவேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளனர். இது சம்பந்தமாக நீதிமன்றம் சம்மந்தப்பட்ட 'கோ டிஜிட் சென்ட்ரல் இன்சூரன்ஸ்' கம்பெனிக்கு சம்மன் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் கோ டிஜிட் சென்ட்ரல் இன்சூரன்ஸ் கம்பெனி சென்னை, தேனாம்பேட்டை  அலுவலகத்தில் சட்டம் மற்றும் புலனாய்வுப் பிரிவு மேலாளர் விஜயலெட்சுமி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வழியாக வடகாடு காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். 

 

அந்த புகாரில் கடந்த 2021 பிப்ரவரி 23ம் தேதி பேராவூரணி - கைகாட்டி சாலையில் நடந்த விபத்தில் முருகேசன் என்பவர் உயிரிழந்துள்ளார். அதனால் விபத்து ஏற்படுத்திய லாரி காப்பீடு செய்துள்ள கோ டிஜிட் நிறுவனம் ரூ.50 லட்சம் இழப்பீடு தர கேட்டுள்ளனர். ஆனால் கோப்புகளை ஆய்வு செய்தபோது விபத்து ஏற்படுத்திய டி.என். 55 யூ 6161 லாரி எங்கள் நிறுவனத்தில் காப்பீடு செய்யவில்லை என்பது தெரிய வந்துள்ளது. ஆகவே நீதிமன்றத்திற்கு போலி ஆவணங்களை தாக்கல் செய்த லாரி உரிமையாளர் அஞ்சலை மீது எங்கள் நிறுவனத்தின் பெயரில் போலியான காப்பீட்டு ஆவணம் தயாரித்து வழங்கியதற்காகவும் எங்கள் நிறுவன பெயர் மற்றும் முத்திரையை தவறாகப் பயன்படுத்தியமைக்காகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த புகார் குறித்து வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

நீண்ட காலமாகவே பல புரோக்கர்கள் வாகனங்களுக்கு குறைந்த கட்டணத்தில் இன்சூரன்ஸ் செய்வதாகக் கூறி வாகன உரிமையாளர்களிடம் பணம் பறித்துக் கொண்டு போலி இன்சூரன்ஸ் ஆவணங்களை வழங்கி வருவது இதுபோன்ற விபத்து காலங்களில் கண்டறியப்படுகிறது. ஆகவே இந்த வழக்கின் மூலம் போலி காப்பீடு ஆவணங்கள் தயாரித்தவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் வாகன உரிமையாளர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.