கீரமங்கலத்தில் காய்ச்சல் அதிகரித்துள்ளதால் பள்ளி மாணவ,
மாணவிகள் தேர்வு எழுத வர முடியாமல் பாதிப்பு
கீரமங்கலம், செப், 12. கீரமங்கலம் பகுதியில் காய்ச்சல் நோய் அதகரித்துள்ளதால் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு எழுத கூட பள்ளிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
காய்ச்சல் அதிகரிப்பு :
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், செரியலூர், பனங்குளம், மேற்பனைக்காடு, மாங்காடு, குளமங்கலம், கொத்தமங்கலம், சேந்தன்குடி, நகரம், பாண்டிக்குடி, நெய்வத்தளி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த ஒரு மாதமாக காய்ச்சல் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதில் குழந்தைகள் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மேலும் அதிகமானோர் காய்ச்சல் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர்.
நிரம்பியது தனியார் மருத்துவமனை :
கீரமங்கலம், மேற்பனைக்காடு பகுதியில் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை மேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, திருச்சி போன்ற ஊர்களுக்கு செல்கின்றனர். இந்த நிலையில் திருச்சியில் குழந்தைகளுக்காக சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனையில் அதிகமாக குழந்தைகள் சிகிச்சைக்கு வருவதால் அங்கு படுக்கை வசதி இல்லை என்று வெளியே அனுப்பக்கூடிய நிலை உருவாகி உள்ளது. மேலும் ஒரே படுக்கையில் 2 போநாளிகளை தங்க வைத்துள்ள நிலையும் உள்ளது.
தேர்வுக்கு வராத மாணவர்கள் :
இந்த நிலையில் திங்கள் கிழமை காலை முதல் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்கி உள்ளது. கீரமங்கலம் கொத்தமங்கலம் பகுதியில் தேர்வு தொடங்கிய முதல் நாளில் சுமார் 40 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுதவில்லை. அந்த மாணவ, மாணவிகள் அனைவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அறந்தாங்கி, திருச்சி போன்ற பல ஊர்களிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கூறப்படுகிறது. நாளுக்கு நாள் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் கீரமங்கலம் பகுதியில் உள்ள கிராமங்களில் சிறப்பு மருத்துவமுகாம் நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-இரா. பகத்சிங்