Skip to main content

ஆந்திரத்தில் 5 தமிழர்கள் காவல்துறையினரால் கொலையா? சிபிஐ விசாரணை வேண்டும்! ராமதாஸ்

Published on 19/02/2018 | Edited on 19/02/2018


ஆந்திரத்தில் 5 தமிழர்கள் காவல்துறையினரால் கொலையா? சிபிஐ விசாரணை வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டா ஏரியில் 5 தமிழர்களின் உடல்கள் மிதந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும், வருத்தமும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களில் இருவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்கள் உள்ளிட்ட அனைவரின் குடும்பங்களுக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் கடப்பா மாவட்டங்களில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் கைது செய்யப்படுவதும், என்கவுண்டர் உள்ளிட்ட முறைகளில் காவல்துறையினரால் படுகொலை செய்யப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேரின் உடல்கள் ஒண்டிமிட்டா ஏரியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் தவிர மேலும் சிலரின் உடல்கள் ஏரியில் கிடக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஐவரும் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பதை இதுவரை உறுதி செய்ய முடியவில்லை. காவல்துறையினர் இவர்களை விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்தியிருக்கலாம்; அதில் இறந்தவர்களின் உடல்களை ஏரியில் வீசியிருக்கலாம் என்றும் மனித உரிமை அமைப்புகளின் சார்பில் குற்றம்சாட்டப்படுவதை எளிதில் ஒதுக்கிவிட முடியாது.

அதே நேரத்தில், தமிழகத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்ததுதொடர்பாக ஆந்திர காவல்துறையினர் அளித்துள்ள விளக்கம் ஏற்கத்தக்கதல்ல. சனிக்கிழமை இரவு ஒண்டிமிட்டா பகுதியில் காவல்துறையினர் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், அப்போது செம்மரங்களை வெட்டுவதற்காக சரக்குந்தில் வந்த ஒரு கும்பலை தடுத்து நிறுத்தியபோது, அவர்கள் தப்பியோடியதாகவும், அவர்களில் சிலர் ஏரியில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்றும் ஆந்திர காவல்துறை சார்பில் கூறப்படுகிறது. ஆனால், இதை நம்பமுடியவில்லை. காவல்துறையினரால் துரத்தப்பட்டவர்கள் ஏரியில் குதித்து உயிரிழந்தார்கள் என வைத்துக்கொண்டால்கூட, அவர்களுடன் வந்த மற்றவர்கள் ஒருவர்கூட தப்பியிருக்க மாட்டார்களா? என்ற வினா எழுகிறது. அதுமட்டுமின்றி, ஏரியில் பிணமாகக் கிடந்தவர்களின் உடல்களில் காயங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. காவல்துறையினர் சித்ரவதை செய்ததால் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், இந்த வினாக்களுக்கு ஆந்திர காவல்துறையால் பதிலளிக்க முடியவில்லை.

இறந்தவர்களின் உடலில் காயங்கள் இருப்பது உறுதியானதால், அவர்கள் செம்மரங்களை கடத்தி வந்திருக்கலாம் என்றும், அவற்றை அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கும் முயற்சியில் வேறு ஏதேனும் கும்பல் அவர்களை கொலை செய்து ஏரியில் வீசியிருக்கலாம் என்றும் புதிய காரணத்தை காவல்துறை பரப்பி வருகிறது. இது காவல்துறை மீதான ஐயத்தை அதிகப்படுத்துகிறது. தங்களின் குற்றத்தை மறைக்க புதுப்புது கதைகளை ஆந்திர காவல்துறை ஜோடிக்கிறதோ என்ற சந்தேகம் அதிகரிக்கிறது.

தமிழகத்தின் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களை அவர்களின் வறுமையைப் பயன்படுத்தி, ஆந்திராவைச் சேர்ந்த செம்மரக்கடத்தல் கும்பல்கள் அழைத்துச் செல்வது வாடிக்கையாக உள்ளது. இவ்வாறு அழைத்துச் செல்லும் கடத்தல் கும்பல்களின் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத ஆந்திர காவல்துறை அப்பாவித் தொழிலாளர்களை படுகொலை செய்வது கண்டிக்கத்தக்கது. யாராக இருந்தாலும், செம்மரக் கடத்தலில் ஈடுபடுவதை நியாயப்படுத்த முடியாது. இதற்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமே தவிர, அவர்களை கொலை செய்வதை சகிக்க முடியாது.

ஒண்டிமிட்டா ஏரியில் 5 தமிழர்கள் மர்மமான முறையில் இறந்துகிடந்தது தொடர்பான வழக்கை ஆந்திர காவல்துறை விசாரித்தால் நீதி கிடைக்காது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு  மாற்றவேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
PMK Ramdas campaign supporting the candidate

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இத்தகைய சூழலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதற்கிடையே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - செளமியா அன்புமணி, விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ்  காஞ்சிபுரம் - ஜோதி வெங்கடேஷ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து கோவடி கிராமத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு நல்ல வேட்பாளரான முரளி சங்கர் நிறைய படித்துள்ளார். 6 மொழிகளில் சரளமாக பேசுவார். மக்களை பற்றி சிந்திக்க கூடியவர். மக்களுக்காக பாடுபடக்கூடியவர். சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார்” எனத் தெரிவித்தார். 

Next Story

பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் - அன்புமணி பங்கேற்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Ramdas, Anbumani participate in the BJP public meeting

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இத்தகைய சூழலில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் இன்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் கூட்டத்தின் போது பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்க பா.ம.க. முக்கிய பங்காற்றும் என்று அன்புமணி பேசியதாகவும் கூறப்பட்டது.

இதனையடுத்து பா.ம.க. பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் நாடாளுமன்ற மக்களைவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து தெரிவிக்கையில், “பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. முடிவு செய்துள்ளது. இந்த முடிவை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சேர்ந்து எடுத்த முடிவு ஆகும். எந்தெந்த தொகுதிகள், வேட்பாளர்கள் விபரங்களை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பார். சேலத்தில் நடைபெற உள்ள பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை அன்புமணி ராமதாஸ் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி என்ற அறிவிப்பை நாளை (19.03.2024) காலை செய்தியாளர் சந்திப்பின் போது ராமதாஸ் அறிவிக்க உள்ளார். அதே சமயம் பா.ஜ.க. கூட்டணியில், பா.ம.க.வுக்கு தர்மபுரி, கடலூர், விழுப்புரம், சிதம்பரம், ஆரணி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், சேலம் மற்றும் மத்திய சென்னை உள்ளிட்ட 10 மக்களவைத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடத்தை வழங்க பாஜக முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் நாளை (19.03.2024) பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பா.ம.க. சார்பில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்களான ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜி.கே. வாசன், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.