Skip to main content

குறையை சுட்டிக் காட்டினால் வழக்கா...? - இளைஞர் மீது புகார் தந்த அரசு நிர்வாகம்

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

government officer filed complaint against youth thiruvannamalai

 

திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது இந்திர வனம் கிராமம். இந்த கிராமத்தில் ஒன்றிய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கான நிதியை ஒன்றிய அரசு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நவம்பர் 10 ஆம் தேதி வாக்கில் நடந்துள்ளது. 36 லட்ச ரூபாய் பணியை எடுத்த சேத்பட் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் குழாய் பைப் மற்றும் குழாய் பைப் நிற்பதற்கான சிமெண்ட்டால் ஆன ஸ்டெம்ப் நட்டுள்ளார். அப்படி நட்டவர் சரியாகப் பள்ளம் எடுத்து நடாமல் மேம்போக்காக நட்டுள்ளார் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 

 

இது குறித்து அதே கிராம மக்கள் சிலர் கேள்வி கேட்க, அது அவ்வளவுதான் என ஒப்பந்ததாரர் சொன்னதாகக் கூறப்படுகிறது. இந்தப் பணியின் அவலத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த முரளி கிருஷ்ணா என்கிற படித்த பட்டதாரி இளைஞர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது வைரலானதையடுத்து தமிழகத்தில் அதிகாரிகள் செய்யும் பணியின் லட்சணத்தைப் பாருங்கள் என பலரும் விமர்சிக்க தொடங்கினர்.

 

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர் மீது சேத்பட் ஊராட்சி ஒன்றிய அலுவலர்(பி.டி.ஓ) ரேணுகோபால் புகார் தந்துள்ளார். புகாரில் இன்னமும் பணியே முடியவில்லை. அதற்குள் இந்த அவலத்தைப் பார் என வீடியோ வெளியிட்டுள்ளார்கள். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளதாகத் தெரிகிறது. புகார் வரப்பெற்றது தொடர்பாக சேத்பட் காவல் நிலையத்திலிருந்து சி.எஸ்.ஆர் தரப்பட்டுள்ளது. இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தங்களது மேலிடத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர் காவல்துறையினர்.

 

தங்களது கிராமத்தில் இப்படியொரு தரமற்ற பணி நடப்பது தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி நந்தகுமாரிடம் இளைஞர்கள் முறையிட்டுள்ளனர். அவர் அதனை கண்டுகொள்ளவில்லையாம். ஊராட்சி மன்றத் தலைவரின் மாமனார் ஏழுமலை அதிமுகவின் சேத்பட் ஒன்றிய துணைச் செயலாளராக உள்ளாராம். அவர் இதையெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது எனச் சொன்னார், அதனாலேயே வீடியோ வெளியிட்டுள்ளார்கள். குறைகளை சுட்டிக் காட்டினால் அதனைத் திருத்திக் கொள்ளாமல், வழக்கு போட்டு உள்ளே தள்ளுவேன் என்பது என்ன நியாயம் எனக் கேட்கிறார்கள் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மண்ணுக்குள் போதைப் பொருள்; தோண்டி அழிக்கும் காவல்துறை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
police discovered and destroyed the wine cellars hidden in the liquor

வேலூர் மாவட்டத்தில்  கள்ளச்சாராயம்  காய்ச்சுபவர்களைத் தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி வனப்பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக பெரிய வகை பேரல்களில் ஊரல்கள் பதுக்கிவைக்கப்பட்டு சட்டத்துக்கு விரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட காவல்துறை, கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து வனப்பகுதிக்குள் பத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது,  கள்ளச்சாராயம் காய்ச்சி  லாரி டியூப்கள் மூலமாக நிரப்பி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக முள் புதர்களில்  மறைத்து வைத்துள்ளனர். இதனைக் கண்டுபிடித்த போலீசார் சாராய டியூப்புகளை தோண்டி எடுத்து, அதைக் கீழே கொட்டி அழித்தனர்.

அதேபோல் பேரணாம்பட்டு அருகே சாக்கர் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 2900 லிட்டர் சாராய ஊரல்களைக் கண்டுபிடித்து கொட்டி அழித்தனர் . இதனால் நடுக்காட்டில் சாராயம் ஆறாக ஓடியது. வழக்கமாக சாராய ஊரல்கள்தான் ட்ரம்களின் ஊரல் போட்டு அதனை மண்ணுக்கு கீழே புதைத்து வைப்பார்கள். போலீஸில் மாட்டக்கூடாது என்பதற்காக இதுபோன்று செய்வார்கள். ஆனால் இப்பொழுது காய்ச்சப்பட்ட சாராயத்தை அதேபோல் செய்கிறார்கள். அதனையும் போலீசார் கண்டறிந்து மண்ணுக்குள் இருந்ததை தோண்டி எடுத்து கீழே போட்டு அழித்தனர்.

காவல் துறையினர் நடத்திய இந்த அதிரடி ரெய்டில், வனப்பகுதிகளில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 2900 லிட்டர் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஊரல்களைக் கண்டுபிடித்து நடுக்காட்டில் கீழே கொட்டி அழித்தனர் காவல்துறையினர்.

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.