Skip to main content

முழு கடையடைப்பு போராட்டத்தில் பால் முகவர்கள் சங்கம் திட்டமிட்டபடி பங்கேற்பதாக அறிவிப்பு

Published on 01/04/2018 | Edited on 01/04/2018

 

milk

 

ஏப்ரல் -3ம் தேதி நடைபெறும் முழு கடையடைப்பு போராட்டத்தில்  பால் முகவர்கள் சங்கம் திட்டமிட்டபடி பங்கேற்கும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது.   இது குறித்து அச்சங்கத்தின் அறிக்கை:

’’காவேரி விவகாரத்தில் ஆறு வார காலத்தில் "காவேரி மேலாண்மை வாரியம்" அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கர்நாடக சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு அமுல்படுத்தாமல் காலம் தாழ்த்தி தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்திக் கொண்டிருக்கும் மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் வருகின்ற ஏப்ரல் -3ம் தேதி தமிழகத்தில் மாநிலம் தழுவிய முழு கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

 

இந்த சூழ்நிலையில் இன்று காலை சென்னையில் அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்திய திமுகவின் செயல் தலைவர்  மு.க.ஸ்டாலின்  ஏப்ரல் -5ம் தேதி தமிழகத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

 

மேலும் இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்த "தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவை" தலைவர்  த.வெள்ளையன்   ஏப்ரல் -11ம் தேதி தமிழகத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

 

திமுக மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவை அறிவித்துள்ள இந்த முழு கடையடைப்பு போராட்டமானது வணிகர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி ஏப்ரல் -3ம் தேதி நடைபெற இருக்கும் போராட்டத்தை நீர்த்துப் போக செய்யும் நடவடிக்கையாக அமைந்து போவதோடு மத்தியில் ஆளுகின்ற பாஜகவுக்கு ஆதரவான சூழலை ஏற்படுத்தி விடும். 

 

"ஒரு சிங்கத்தை நான்கு பசுக்கள் ஒன்று சேர்ந்து முட்டி துரத்திய போது குள்ளநரி ஒன்றின் சூழ்ச்சியால் தனித்தனியாக பிரிந்த நான்கு பசுக்களும் இறுதியில் அந்த சிங்கத்தின் பசிக்கு இரையாகிப் போன கதை"யை நாம் ஆரம்ப பள்ளியிலேயே படித்திருக்கிறோம்.

 

அந்த வகையில் மத்தியில் ஆளுகின்ற பாஜகவின் குள்ளநரித்தனத்திற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவையும் தெரிந்தோ, தெரியாமலோ துணை போய் தமிழர்களுடைய போராட்டத்தின் வீரியத்தை குறைத்து விட வேண்டாம் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.

 

எனவே தமிழகத்தில் வரும் ஏப்ரல் -3ம் தேதி மத்திய அரசுக்கு எதிராக நடைபெறும் முழு கடையடைப்பு போராட்டம் மற்றும் விவசாய பெருமக்களின் அறவழிப் போராட்டங்கள் வெற்றி பெற திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவை ஈகோ பாராமல் அறிவித்துள்ள தங்களின் போராட்ட அறிவிப்பை ஏப்ரல் -3ம் தேதிக்கு மாற்றி அமைத்து ஒன்றுபட்ட தமிழர்களின் ஒற்றுமையை வீரியத்தோடு டெல்லிக்கு எடுத்துரைக்க வேண்டுகிறோம்.

 

"கட்சிகள், அமைப்புகள் என பல்வேறு பிரிவுகளாக பிரிந்திருந்து இழப்பதை விட, தமிழர்களாக இணைந்திருந்து சாதிப்போம்" என்பதை வலியுறுத்தி ஏப்ரல் -3ம் தேதி நடைபெறும் முழு கடையடைப்பு போராட்டத்தில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் திட்டமிட்டபடி பங்கேற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.’’

சார்ந்த செய்திகள்

Next Story

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் லிட்டர் பால் வழங்கிய நிறுவனம்

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
 company provided 5000 liters of milk to the people affected by the storm

மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப்போட்டது. காற்றின் வேகம் குறைவு என்றாலும், கடும் மழை சென்னை வாழ் மக்களை நிலைகுழையச் செய்துவிட்டது. நகரில் ஆள் உயரத்திற்கு தண்ணீர் சென்றது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குடிசை வீடுகளிலும், மாடிவீட்டு கீழ்தளங்களிலும் குடியிருந்தவர்களின் வீட்டில் உள்ள அத்தனை உடமைகளும் நாசமானது. இதனை உணர்ந்தவர்கள் தமிழ்நாடு முழுவதும் இருந்து சென்னைவாழ் மக்களுக்கு உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் உள்ள அனவயல் பாரத் பால் நிறுவனம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னைவாழ் மக்களுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள 5 ஆயிரம் லிட்டர் பாக்கெட் பாலுடன், பாரத் பால் நிறுவன இயக்குநர்கள், ஊழியர்கள் சென்னை சென்று பெரும்பாக்கம் பகுதி மக்களுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில், பொதுமக்களுக்கு பால் பாக்கெட் வழங்கியதுடன் பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டனர்.

5 ஆயிரம் லிட்டர் பாக்கெட் பால் வழங்கிய பாரத்பால் நிறுவனத்தினர் நம்மிடம், புயலின் தாக்கத்தால் பொதுமக்கள் எப்படி எல்லாம் அவதிப்படுவார்கள், கஷ்டப்படுவார்கள் என்பதை 2018 கஜா புயலின் தாக்கத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டு உணர்ந்தவர்கள் நாங்கள். பல நாட்கள் குடிதண்ணீர், மின்சாரம் கூட கிடைக்காமல் அவதிப்பட்டோம். ஆனால் சென்னையில் அதெல்லாம் சில நாட்களிலேயே கிடைத்துவிட்டது. எங்கள் மக்களுக்கு எங்கிருந்தெல்லாமோ நிவாரணம் கொண்டு வந்து கொடுத்தார்கள். ஆனால் மக்கள் உடனே வேலைக்கு போகவோ அத்தியாவசியப் பொருட்கள் வாங்கவோ முடியாத நிலையில் இருப்பார்கள் என்பதால், எங்கள் பாரத் பால் நிறுவனம் சார்பில் 5 லட்சம் லிட்டர் பால் கொண்டு வந்து அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் பொதுமக்களிடம் நேரடியாக வழங்கி இருக்கிறோம் என்றனர்.

Next Story

“நாளை பால் விநியோகம் முழுமையாக சீரடையும்” - அமைச்சர் மனோ தங்கராஜ்

Published on 05/12/2023 | Edited on 05/12/2023

 

Tomorrow milk supply will be fully restored Minister Mano Thangaraj
கோப்புப்படம்

 

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியது. இந்த புயல் காரணமாகத் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்தது. அதனைத் தொடர்ந்து தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ள பாபட்லாவிற்கு அருகே தீவிரப் புயலாக இன்று (05.12.2023) மாலை 4 மணியளவில் மிக்ஜாம் புயல் கரையைக் கடந்தது.

 

அதே சமயம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் புயல் காரணமாகத் தொடர்ந்து பெய்து வந்த வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. அது மட்டுமின்றி இந்த மாவட்டங்களில் இந்த புயல் மழையின் தாக்கம் மிக அதிகமாக ஏற்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மேற்பார்வையில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உடனடியான தேவையான நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி சீரமைப்புப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும், ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கென தலா ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும் நியமிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் களத்தில் பணியாற்றி வருகின்றனர். இருப்பினும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலருக்கும் இன்று அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றான பால் பாக்கெட்கள் கிடைக்காததால் பொது மக்கள் பெரிதும் தவித்து வந்தனர்.

 

இந்நிலையில் இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், “சென்னையில் நாளை (06.12.2023) காலை முதல் பால் விநியோகம் முழுமையாக சீரடையும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா கூறுகையில், “சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாளையும் இலவசமாக ஆவின் பால் வழங்கப்படும். மழைநீர் தேங்கிய பகுதிகளில் மக்களை மீட்பதற்காக அதிகளவில் மீனவர்களின் படகுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.