Skip to main content

காட்டு முயல்களை வேட்டையாடி டிக்டாக்கில் பதிவிட்ட 6 பேருக்கு ரூ. 90 ஆயிரம் அபராதம்!

Published on 04/05/2020 | Edited on 04/05/2020

 

forest six students forest officers


காட்டு முயல்களை வேட்டையாடி, அவற்றைச் சமைத்துச் சாப்பிட்டு அதனை டிக்டாக்கில் பதிவேற்றம் செய்த 6 பேரை பிடித்த வனத்துறையினர், அவர்களுக்கு ரூ 90 ஆயிரம் அபராதம் விதித்தனர். 

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள எட்டுப்புலிக்காடு கிராமத்தைச் சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட பள்ளியில் படித்து வரும் 6 மாணவர்கள், கரோனா ஊரடங்கு சமயத்தில், அங்கிருந்த வனப்பகுதியில் வலை விரித்து காட்டு முயல்களை வேட்டையாடி உள்ளனர். பின்னர், அங்குள்ள வயல்காட்டில் அதனைச் சமைத்து விருந்து நடத்தி உள்ளனர். இதனை வீடியோ படம் பிடித்து டிக்டாக் செயலியில் பதிவேற்றம் செய்துள்ளனர். 


இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் இக்பால், வனவர் ராமதாஸ் மற்றும் வனத்துறை ஊழியர்கள், மாணவர்கள் 6 பேரையும் பிடித்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முயல்களை வேட்டையாடியதை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். 

அதைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் குருசாமி உத்தரவின் பேரில், 6 பேரும் சிறுவர்கள் என்பதாலும், பள்ளி மாணவர்கள் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பதாலும், சிறைக்கு அனுப்பாமல், வழக்குப் பதிவு செய்து, தலா ரூ 15 ஆயிரம் வீதம் 6 பேருக்கும் ரூ 90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, அதனை வசூலித்து, வனத்துறையினர் விடுவித்துள்ளனர். 
 

http://onelink.to/nknapp


இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் குருசாமி கூறுகையில், "பட்டுக்கோட்டையில் சிக்கிய 6 பேரும் பள்ளிச் சிறுவர்கள் என்பதாலும், அவர்கள் எதிர்காலம் பாதிக்கக்கூடாது என்பதாலும் அபராதம் விதித்து, விடுவிக்கப்பட்டனர். கரோனா ஊரடங்கு சமயத்தில் பலரும் விளையாட்டாக வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இது சட்டப்படியான குற்றம். இதில் ஈடுபடுவோர் அபராதம், சிறைத் தண்டனை ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடும். மான், காட்டுப்பன்றி, கிளி, அணில், உடும்பு, கொக்கு எனச் சிறிய, பெரிய விலங்குகள், பறவைகள் எதையும் வேட்டையாடுவது சட்டப்படி குற்றம். நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும். வனவிலங்குகளை வேட்டையாடுவோர் மீது இனிவரும் காலங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.