திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பணமாக வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, சாதுக்கள் அமைப்புகளுடன் சந்திப்பு நிகழ்த்தினார். அப்போது நிவேதா பண்பாட்டு மையம் என்கிற பெயரில் அமைப்பு நடத்தும் சங்கத்தின் ஒரு பெண்மணி, அண்ணாமலையார் கோவிலைச் சுற்றியும், கிரிவலப் பாதையில் அசைவ உணவகங்கள் உள்ளன. இதனை மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் வைத்திருந்தார்.
கவர்னர் ஆர்.என்.ரவியும், பக்தர்கள் கோரிக்கை வைத்தார்கள். கிரிவலப் பாதையில் அசைவ உணவகம் மூடப்பட வேண்டும் எனப் பேசினார். அதனையே அறிக்கையாகவும் வெளியிட்டார். கவர்னரின் இந்த உணவு குறித்த பேச்சு திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநரின் அசைவ உணவு பேச்சு குறித்து நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களைச் சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “உணவு என்பது தனிமனிதர்களின் விருப்பத்துக்கு உரியது. யாரும் இந்த உணவைத்தான் சாப்பிட வேண்டும் எனச் சொல்ல முடியாது. இது ஆன்மீக நகரம், அதிகளவில் பக்தர்கள் வருகிறார்கள் அப்படி வருபவர்கள் அசைவத்தை விரும்பமாட்டார்கள் என அவர்களாகவே தவிர்க்க வேண்டும். இதற்கு அரசாங்கத்தை பயன்படுத்தியோ, நேரடியாகவோ சென்று அசைவத்தை சமைக்கக்கூடாது எனச் சொல்ல முடியாது. அவர்களாகவே நிறுத்திக்கொண்டால் நன்றி.
பௌர்மணி தினத்தன்று யாரும் அசைவ உணவுகள் விற்பதில்லை. மீதி நாட்களில் விற்பனை செய்கிறார்கள். அதனை சிலர் விரும்புகிறார்கள். ஒரு ஹோட்டல் இருக்கிறது மக்கள் விரும்பினால்தான் வியாபாரம் நடக்கும். வியாபாரமே நடக்காமல் யாரும் தினமும் செய்து வைத்து நட்டம் அடையமாட்டார்கள்” என்றார்.