இ-பாஸ் பெறும் முறையை எளிமையாக்கும் வகையில் கூடுதல் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்து, நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக இன்று மதுரைக்குச் சென்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், "இந்தியாவிலேயே அதிக கரோனா பரிசோதனை செய்த மாநிலம் தமிழகம் தான். கரோனா தடுப்புக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் நம்மிடம் தேவையான அளவு இருப்பு உள்ளன. சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சித் துறையின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் கரோனா குறைந்துள்ளது. மேலும், இ பாஸ் முறையை எளிமையாக்கக் கூடுதலாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவை அல்லாமல் இன்னும் ஒரு மாதத்தில் 103 கோடி ரூபாய் செலவில் 500 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்ட உள்ளன" எனத் தெரிவித்தார்.