போதையில் டாக்டர் ஓட்டி வந்த கார்
மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வாலிபர் படுகாயம்
சென்னை அண்ணா நகர், 6வது அவென்யூவை சேர்ந்தவர் குமரன் (47). டாக்டரான இவர், அப்பகுதியில் தனியே கிளினிக் நடத்தி வருகிறார். இந்நிலையில், உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் நள்ளிரவு தனது வீட்டுக்கு சொகுசு காரில் குமரன் திரும்பிக் கொண்டிருந்தார். அண்ணாநகர் ஆர்ச் அருகே வரும்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள சென்டர் மீடியனில் வேகமாக மோதியது. அத்துடன், அதே வேகத்தில் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வியாசர்பாடியை சேர்ந்த சத்யராஜ் (20) என்பவர் மீது பலமாக மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
தகவலறிந்ததும் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தலையில் படுகாயம் அடைந்த சத்யராஜை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின்பேரில் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாக்டர் குமரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.