அதிமுகவின் கோட்டை என்று அக்கட்சியினரால் கூறப்பட்டு வந்த கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாநகராட்சிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்திலும் திமுக கூட்டணி அதிக வார்டுகளில் முன்னிலை வகித்து வருகிறது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக முன்னிலையில் உள்ளது. 138 நகராட்சிகளில் திமுக கூட்டணி 112 இடங்களிலும், அதிமுக 7 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பேரூராட்சிகளை பொறுத்தவரையில் திமுக கூட்டணி 280 இடங்களில் திமுகவும், 31 இடங்களில் அதிமுகவும் முன்னிலை வகிக்கிறது.
கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களிலும் திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் மேற்கு மாவட்டங்களில் திமுக அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. குறிப்பாக கோவை மாநகராட்சி, வால்பாறை நகராட்சி, ஈரோடு மாநகராட்சி, திருப்பூர் மாநகராட்சி, காங்கேயம் நகராட்சி, பல்லடம் நகராட்சி என அதிமுக நீண்ட காலமாக கோலோச்சி வந்த இடங்களை இந்த முறை திமுகவிடம் பறிகொடுத்துள்ளது. தேர்தல் முடிவு முழுமையாக வந்த பிறகே அதிமுக எத்தனை இடங்களில் வெற்றிபெற்றுள்ளது எனத் தெரிய வரும்.