Skip to main content

கரோனாவின் கோரப் பிடியில் சிக்கி தவிக்கும் சென்னை, கவலைப்படாத சுகாதாரத்துறை அமைச்சர்! கே.எஸ்.அழகிரி கண்டனம் 

Published on 29/05/2020 | Edited on 29/05/2020
K S Alagiri



சென்னை மாநகராட்சி செய்த இமாலய தவறு போன்ற காரணங்களால் சென்னை மாநகரம் கரோனாவின் கோரப் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்தியாவிலேயே தொற்று நோயால் பாதிக்கப்பட்ட முதன்மை மாநிலமாக இருக்கிற மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகம் இருந்து வருகிறது. எண்ணிக்கை கூடுவதை பற்றி கவலைப்படாத சுகாதாரத்துறை அமைச்சர், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இறப்பு விகிதம் குறைந்திருக்கிறது என அடிக்கடி கூறி ‘முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது’ என்று கூறியுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா தொற்று நோயை பொறுத்தவரை, மத்திய - மாநில அரசுகளின் தவறான அணுகுமுறைகளின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஏப்ரல் 1 ஆம் தேதி தொற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 234 ஆக இருந்தது. ஆனால், மே 3 ஆம் தேதி 3 ஆயிரமாக உயர்ந்து மே 29 ஆம் தேதி 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  இதற்கு அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளே காரணமாகும்.

தொடக்கத்திலிருந்தே பரிசோதனை கருவிகள் வாங்குவதில் பல்வேறு குளறுபடிகள், கோயம்பேடு மொத்த காய்கறி வியாபார சந்தையில் ஆயிரக்கணக்கான பொதுமக்களை அனுமதித்ததில் சென்னை மாநகராட்சி செய்த இமாலய தவறு போன்ற காரணங்களால் சென்னை மாநகரம் கரோனாவின் கோரப் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. 

கரோனா வைரஸ் பாதிப்பினால் வியாழக்கிழமை 15 பேர், வெள்ளிக்கிழமை 22 பேர் பலியாகியிருக்கிறார்கள் என்ற செய்தி கடும் அதிர்ச்சியை தருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னையில் 60-க்கும் மேற்பட்டவர்கள் பலியானது மக்களிடையே அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை வரை தமிழகத்தில் நிகழ்ந்த 50 சதவிகித இறப்புகள், தொற்று ஏற்பட்டு 48 மணி நேரத்துக்குள் நிகழ்ந்துள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனரக தரவுகள் தெரிவிக்கின்றன. இதுவரை தினசரி நிகழ்ந்த இறப்புகளில் இதுவே அதிகபட்சமாகும்.

தமிழகத்தில் கரோனாவினால் இதுவரை 145 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார். 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு 24 மணி நேரத்தில் இறந்துள்ளனர். இத்தகைய இறப்புகளால் சுகாதாரத்துறையே அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது.

 

 


கரோனாவினால் தேசிய அளவில் 3 சதவிகித இறப்பு நிகழும் நிலையில், தமிழகத்தில் இறப்பு விகிதம் 0.7 சதவிகிதம் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அடிக்கடி பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி மகிழ்ச்சி அடைவது மிகுந்த வேதனையை தருகிறது. ஆனால்;, மேலும் பலர் இறக்க வாய்ப்பு இருப்பதாகவும், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கவலைப்படுவதாக தெரியவில்லை. மாறாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று கூறி வருவது மிகுந்த வியப்பை தருகிறது.

தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும், வரும் ஜுன் மாத இறுதியில் சென்னையில் மட்டும் கரோனா தொற்று 2 லட்சத்தை தாண்டும் என்றும், 1,400 பேர் உயிரிழக்கக் கூடும் என்றும் தொற்று நோயியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதுகுறித்து ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட சுகாதாரத்துறை தயாராக இல்லை.

விரைவான பரிசோதனைகள், விரைந்து நோயை கண்டறிதல் மூலமே இறப்புகளை தடுத்து நிறுத்த முடியும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் நடுத்தர வயதினர் உட்பட ஏராளமானோர் இறக்கிறார்கள். நோயை கண்டறிவதில் ஏற்படும் தாமதமே இந்த இறப்புகளுக்கு காரணம். 

 

C. Vijayabaskar



மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் இறக்கிறார்கள் என்றால், கரோனா பரிசோதனை முடிவுகள் மருத்துவர்கள் கைக்கு வரும் முன்பே நோயாளிகள் இறந்து போகிற அவலநிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எவரும் கவலைப்படாமல் இருக்க முடியாது. இத்தகைய பரிதாப நிலைக்கு தமிழக அரசே பொறுப்பாகும்.

பொதுவாக, கரோனா இறப்புகள் குறைவாக கணக்கிடப்படுவதாகவே தெரிகிறது. இறப்பு எண்ணிக்கையில், பெரிதும் பாதிக்கப்படக் கூடிய முதியவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பது இத்தகைய சந்தேகத்தை உறுதிபடுத்துகிறது. அநேகமாக அவர்களது நோயை கண்டறிய தவறிவிட்டதாகவே தோன்றுகிறது. போதுமான பரிசோதனைகள் செய்யாத நிலையில், பல கரோனா நோய் இறப்புகள் மாரடைப்பு என பதிவு செய்யப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிமிடம் வரை, வைரஸின் தன்மை குறித்து மாநில அரசு அறியவில்லை. கரோனா வைரஸால் உண்மையிலேயே எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் நமக்கு தெரியாது. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் நாம் பரிசோதிக்கவில்லை. இதனால் உண்மையான இறப்புகளை அறிய நமக்கு வாய்ப்பில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், மே 29 ஆம் தேதி வரை தமிழகத்தில் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 34 ஆயிரத்து 625. இதன்படி 10 லட்சம் பேருக்கு, 5841 பேருக்கு தான் சோதனை செய்கிற வசதி தமிழக அரசிடம் இருக்கிறது. இதனால், தமிழகத்தில் எத்தனை பேரை கரோனா பாதித்திருக்கிறது என்பதை அறியாமல் அந்த நோயை ஒழிக்க முடியாது.

 

nakkheeran app




இதை மூடி மறைப்பதற்காகத்தான் பொது ஊரடங்கை 66 நாட்கள் கழித்தும் மேலும் நீட்டிப்பதற்கான முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமானால், அதற்குரிய கட்டமைப்பு மருத்துவ வசதிகள் தமிழக அரசிடம் இல்லை. 

இந்தியாவிலேயே தொற்று நோயால் பாதிக்கப்பட்ட முதன்மை மாநிலமாக இருக்கிற மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகம் இருந்து வருகிறது. எண்ணிக்கை கூடுவதைப் பற்றி கவலைப்படாத சுகாதாரத்துறை அமைச்சர், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இறப்பு விகிதம் குறைந்திருக்கிறது என அடிக்கடி கூறி ‘முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிப்பது’ மிகுந்த கண்டனத்திற்குரியது.

இத்தகைய செயல்களின் மூலமாக வேகமாக பரவி வரும் கரோனாவை தமிழக அரசால் எதிர்கொள்ள முடியுமா என்கிற மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அச்சம், பதற்றத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய அவலநிலையில் இருப்பதை உணர்ந்து போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.