Tenkasi Police arrested woman in her husband case

Advertisment

தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகாவின் பண்பொழி திருமலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் முருகன் (42), கொத்தனார் வேலை பார்ப்பார். இவரது மனைவி நாச்சியார் (36). இந்த தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், தனது கணவன் முருகனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பிருக்கிறது என்ற சந்தேகத்திலிருந்திருக்கிறார் நாச்சியார். இந்தச் சூழலில் நேற்று முருகன் தனது வீட்டிற்கு இன்னொரு பெண்ணை அழைத்து வந்திருக்கிறார்.

இதனால், கோபமடைந்த முருகனின் மனைவி நாச்சியாருக்கும் அவரது கணவர் முருகனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், முருகன் அழைத்து வந்த பெண்ணுக்கும், நாச்சியாருக்கும் இடையேயும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து நாச்சியாரைச் சமாதானப்படுத்தி அந்தப் பெண்ணை அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு முருகன் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து தன் மனைவி நாச்சியாரிடம் தகராறில் ஈடுபட, அடி தடியாகியிருக்கிறது.

இருவருக்கும் தகராறு முற்றவே அத்திரத்தின் உச்சிக்குப் போன நாச்சியார், திடீரென்று வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து முருகனின் கண்ணில் தூவிவிட்டு அருகே கிடந்த உருட்டு கட்டையால் முருகனை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முருகன் ரத்த வெள்ளத்தில் கீழே சரியவே பதட்டத்தில் நாச்சியார் கூச்சலிட்டு உள்ளார்.

Advertisment

உடனே அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து முருகனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த செங்கோட்டை போலீசார் முருகனை கட்டையால் அடித்துக் கொலை செய்த நாச்சியாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.