Skip to main content

''என்ன ஸ்விட்ச் ரிமோட் கண்ட்ரோலா... பட்டனை தட்டியவுடனே போய்ப் பார்ப்பதற்கு'' - முதல்வர் பழனிசாமி ஆவேசம்!

Published on 26/11/2020 | Edited on 26/11/2020

 

Chief Edappadi Palanisamy press meet cuddalore

 

கடலூர் மாவட்டம், ரெட்டி சாவடி குமாரமங்கலத்தில், 'நிவர்' புயலால் பாதிக்கப்பட்ட விளைநிலத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, புயலால் பாதிக்கப்பட்டுள்ள வாழை விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமுரி விளக்கினார்.   

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளின் இழப்பீடுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். நிவர் புயலின் பாதிப்பைத் தடுக்க அரசு கொடுத்த அறிவுறுத்தலின்படி, செயல்பட்ட ஊழியர்கள், அதிகாரிகளைப் பாராட்டுகிறேன். அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கரும்பு, வாழைப் பயிர்கள் அதிகம் சேதமடைந்துள்ளது, அதற்கான நிவாரணம் வழங்கப்படும் என்றார்.

 

மின்சாரம் நிறுத்தப்பட்டது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த முதல்வர், மின்சாரத்தை நிறுத்தவில்லை என்றால் எதாவது ஒரு இடத்தில் மரம் சாய்ந்து உயிர்ச் சேதம் ஏற்பட்டுவிடுமோ என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் அடிப்படையில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. எல்லா இடத்திலும் அல்ல, எங்கெல்லாம் புயலால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதோ, அங்கெல்லாம் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்த பிறகுதான் மின்சாரத்தைக் கொடுக்கமுடியும். இல்லையென்றால் எந்த இடத்தில் மின்கம்பம் விழுந்தது என யாருக்குத் தெரியும். எனவே நகர்ப் பகுதியாக இருந்தாலும் சரி, கிராமப் பகுதியாக இருந்தாலும் சரி மின்கம்பங்கள் சாயவில்லை, கம்பிகள் அறுந்துவிழவில்லை என ஆய்வு செய்து உறுதிப்படுத்திய பிறகு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதெல்லாம் மக்களின் நலனுக்காகதான் என்றார்.

 

1,000 மின்பணியாளர்கள் வரவழைக்கப்பட்ட நிலையில், காலையே இயல்பு நிலை திரும்பியும் இதுவரை சீரமைப்புப் பணிகள் நடைபெறவில்லை என்ற கேள்விக்கு, ''ஆமாம் ஒன்று ஒன்றாகத் தானே பார்க்கமுடியும். என்ன ஸ்விட்ச் ரிமோட் கண்ட்ரோலா  பட்டனைத் தட்டியவுடனே போய்ப் பார்ப்பதற்கு. ஒரு கம்பத்தை எடுத்து நிறுத்திப் பாருங்க... உழைச்சாத்தான் அதன் உழைப்பு தெரியும்'' என ஆவேசமானார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.