Skip to main content

தவணை செலுத்த விலக்களித்த காலத்தை நீட்டிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ்!

Published on 24/04/2020 | Edited on 24/04/2020


தவணைத் தொகை செலுத்த விலக்களித்த காலத்தை ஜூலை வரை நீட்டிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், நாட்டில் பல கோடி பேர் தற்காலிகமாக வருமானம் இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த மார்ச் 27- இல்  ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களிடம் மக்கள் வாங்கியிருக்கும் கடனுக்கான மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களுக்கான தவணையைச் செலுத்தாமல், மூன்று மாத காலம் கழித்துச் செலுத்தலாம் என்று அறிவித்திருந்தது. 


அதேபோல், கடன் தவணையைக் கேட்டு மக்களுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாதென்று நிதி நிறுவனங்களையும் அறிவுறுத்தியிருந்தது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். 

அந்த மனுவில், ஊரடங்கு உத்தரவினால் தெரு வியாபாரிகள் தொடங்கி பெரிய தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் வரை, சுமார் 90 சதவீதத்தினர் வருமானம் இன்றி தவிப்பதாகவும், மத்திய மாநில அரசுகள் அளிக்கும் நிதி உதவிகளோ, பொருள் உதவிகளோ போதுமானதாக இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். உரிய மாத வருமானம் இருந்தபொழுது வாங்கிய கடன்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான தவணை முறையைச் செலுத்த முடியாமல் தவித்து வரும் நிலையில், தவணையை மூன்று மாதங்கள் காலதாமதமாகச் செலுத்தலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்தது ஆறுதலாக இருந்தாலும், ஊரடங்கு காரணமாக இயல்புநிலை திரும்பாத நிலையில், அதன் தாக்கம் மேலும் நீடிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறி வருவதால்,  தவணை செலுத்தும் சலுகையை மேலும் இரண்டு மாதங்களான ஜூன், ஜூலை மாதங்களுக்கான தவணையைச் செலுத்துவதற்கும் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். 
 

 

 

chennai high court banks emi lockdown time


ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள தவணை செலுத்தும் சலுகையைப் பயன்படுத்தினால் கூடுதல் வட்டி செலுத்தும் வகையில் வங்கிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பையும் சுட்டிக்காட்டியுள்ளார். முறையான மாத வருமானம் இருப்பவர்களுக்கு மார்ச் மாதத்திற்கான சம்பளம் கணக்குகளில் செலுத்தப்பட்டவுடன், ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டு இருந்த இசிஎஸ் முறைப்படி அவர்கள் கடனுக்கான தொகை பலரது கணக்கிலிருந்து எடுக்கப்பட்டதாகவும், அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
 

http://onelink.to/nknapp


தவணை மற்றும் வட்டி செலுத்த விலக்களிக்க காலத்தை ஜூலை 31- ஆம் தேதி வரை நீட்டித்து புதிய அறிவிப்பை வெளியிடும் படி மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் பிரதான கோரிக்கை வைத்துள்ளார் அதேபோல் இசிஎஸ் தொகையை வசூலிப்பதற்கான  உத்தரவுகளை (standing instructions) நிறுத்திவைக்க வேண்டும் எனவும், வங்கிகள் மற்றும் வங்கியைச் சாராத நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். குறிப்பாக ஊரடங்கு காலத்தில் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட அபராதத் தொகையை வட்டியுடன் மீண்டும் கணக்கில் செலுத்த வேண்டும் எனவும் வங்கிகளுக்கு உத்தரவிட கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, உரிய ஆய்வுகளை மேற்கொள்ளாமல் இந்த பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செவ்வண்ணன் மோகன் தெரிவித்தார். பின்னர் உரிய மனுவைத் தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். 

அதனைத் தொடர்ந்து, மனுதாரர் ராம்குமார் ஆதித்தன் தரப்பில் வழக்கை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. 

Next Story

 ரூ.4 கோடி பறிமுதல்; அமலாக்கத்துறை விசாரணை கோரிய மனுவுக்கு நீதிமன்றம் அதிரடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The court is acting on the petition requested by the enforcement department to investigateon Rs.4 crore confiscated

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. 

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாகச் சென்று கொண்டிருந்த நேரத்தில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், இந்தச் சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. 

The court is acting on the petition requested by the enforcement department to investigateon Rs.4 crore confiscated

இந்த நிலையில், நெல்லை சுயேட்சை வேட்பாளர் ராகவன், பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (24-04-24) நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், ‘பணம் பறிமுதல் வழக்கு, சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட குற்றமாக கருத முடியாது’ என்று கூறியது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், சுயேட்சை வேட்பாளர் ராகவன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.