சென்னை வில்லிவாக்கத்தில் குழந்தைகளுக்கென மழலையர் பள்ளியை ஒன்றை நடத்தி வந்தவர் பாஜகவை சேர்ந்த பெண் நிர்வாகி மீனாட்சி. இவர் பாஜகவின் மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவின் செயலாளராக உள்ளார். இவர் நடத்தும் மழலையர் பள்ளியில் சரண்யா என்பவர் ஆட்டிசம் உள்ள தனது 7 வயது மகனை சேர்த்துள்ளார். இந்நிலையில் மீனாட்சி, சரண்யாவின் 7 வயது மகனை தொடர்ந்து துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
7 வயது குழந்தையை மீனாட்சி கட்டி வைத்து துன்புறுத்துவதும் அடிப்பதுமான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து அங்கு பணிபுரியும் ஊழியர்கள் குழந்தையின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பெற்றோர் வில்லிவாக்கம் காவல்துறையில் புகாரளித்துள்ளனர்.
காவல்துறையினரின் விசாரணையில் பாஜகவின் பெண் நிர்வாகியான மீனாட்சி 7 வயது சிறுவனைத் துன்புறுத்தியது உறுதியாகியுள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர்களின் சாட்சியங்களை அடிப்படையாக வைத்து பாஜக மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞரான மீனாட்சியை காவல்துறையினர் கைது செய்தனர். 7 வயதுடைய ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தையைத் துன்புறுத்தியதில் மீனாட்சி மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.