Skip to main content

“ஆட்சி மாற்றம்; அரசியல் மாற்றம்...” -ரஜினிகாந்த்

Published on 03/12/2020 | Edited on 03/12/2020

 

actor rajinikanth press meet at poes garden in chennai

 

 

ஜனவரியில் அரசியல் கட்சித் தொடங்குவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார்.

 

அதன் தொடர்ச்சியாக, சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், "கடந்த 2017- ஆம் ஆண்டு டிசம்பர் 31-ல் அரசியலுக்கு வருவது உறுதி என கூறியிருந்தேன். கரோனாவால் என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல முடியவில்லை. தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி; நான் தோற்றாலும் அது மக்களின் தோல்வி. அரசியல் மாற்றம் கட்டாயம்; காலத்தின் தேவை. ஆட்சி மாற்றம் நடக்கும்; அரசியல் மாற்றம் நடக்கும். இப்ப இல்லேன்னா எப்பவும் இல்ல.

 

நான் ஒரு சின்ன கருவி தான்; மக்கள் நீங்கள் தான் எல்லாத்தையும் முடிவு செய்ய வேண்டும். கொடுத்த வாக்கில் இருந்து நான் என்றைக்கும் தவற மாட்டேன். ‘அண்ணாத்த’ படத்தை முடித்துக்கொடுப்பது எனது கடமை; அதை முடித்து விட்டு கட்சிப் பணியில் ஈடுபடுவேன். தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் என்னை விட சந்தோஷப்படக்கூடிய ஆள் வேறு யாருமில்லை" இவ்வாறு அவர் கூறினார்.

 

அதைத்தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் அறிவித்துள்ளார்.

 

இதனிடையே, ரஜினியின் அரசியல் கட்சி அறிவிப்பை சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றன. மேலும் பல்வேறு பிரபலங்களும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் ரஜினியின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.