Skip to main content

தாமிரபரணியில் வெள்ளம்... மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்! (படங்கள்)

Published on 03/12/2019 | Edited on 03/12/2019

தென்மேற்குத் தொடர்ச்சி மலையின் அம்பை பகுதி மலையின் சுமார் 6500 அடி உயரத்திலிருக்கும் அகத்தியர் மெட்டு மலைப்பள்ளத்தாக்கின் பின்புறமிருக்கும் சதுப்பு நிலக்காடுகள் எப்போதும் நீர்ப்பிடிப்புகளைக் கொண்டவை. கோடைகாலம், மழைக்காலம் என்றில்லாமல் மிகவும் உயர் குளிர்நிலையிலிருப்பதால், அந்தச் சதுப்பு நிலக்காடுகள் வருடம் முழுக்க தண்ணீரை உள்வாங்கி வெளியேற்றும் பகுதி. இதிலிருந்து உற்பத்தியாகும் தண்ணீர்தான் அருவியாகத் தரையிறங்கி பாபநாசம், மணிமுத்தாறு வழியாகப் பாய்வதால் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியாகிறது.


கோடைக்காலத்தில் சுமாரான மழை பெய்தாலும் நீர்பிடிப்பு வெள்ளமாக வெளியேறும், அதுவே மழைக்காலம் என்றால் தாமிரபரணி பொங்கிவிடும்.
 

கடந்த அக்டோபரில் வடகிழக்குப் பருவமழை ஆரம்பித்த உடனேயே வறண்டிருந்த பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் நீர்மட்டம் உயரத் தொடங்கியது. நேற்று முன்தினம் அடைமழையாய் நீர்பிடிப்பு என்றில்லாமல் மாவட்டம் முழுவதும் 19 செ.மீ. மழை பெய்ததால் மேற்குத் தொடர்ச்சி மழையிலுள்ள குற்றாலம் நகரின் அனைத்து அருவிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. மிகப்பெரிய அணையான மணிமுத்தாறு தவிர பாபநாசம் முழுக்கொள்ளளவான 141.65 அடியை எட்டியது. சேர்வலாறின் அணைமட்டம் 148.16 என கொள்ளளவானது. மணிமுத்தாறு 92.40 அடியானது.
 

மேலும் அணைகளுக்கு வரும் தண்ணீர் இங்கிருந்து, உபரி நீர் 9280 கனஅடி வெளியேற்றப்பட்டதால் அம்பை, பாபநாசம், கல்லிடைக்குறிச்சிப் பகுதிகளில் வெள்ளமாக கரை புரண்டது. மேலும் மாவட்டத்தின் பச்சையாறு, ராமநதி, கடனாநதி போன்ற அணைகள் நிரம்பியதால் அதன் உபரி நீர் தனி ரூட்டில் பயணித்து தாமிரபரணி ஓடும் முக்கடலான முக்கூடலில் சங்கமித்து மொத்த வெள்ளம் பெருக்கெடுத்தது. அங்கிருந்து நிமிடத்திற்கு பத்தாயிரம் கன அடிகளுக்கும் மேற்பட்ட நீர், வெள்ளமாக நெல்லை வழியாக பெருக்கெடுத்து ஓடுகிறது. வீணாகச் ஸ்ரீவைகுண்டம் வழியாகக் கடலில் கலக்கிறது.
 

இதனால் பாபநாசம் காரையாறு முண்டன்துரை செல்லும் பாலம் துண்டிக்கப்பட்டது. இவைகள் வெள்ளத்தால் மூழ்கின. நெல்லை கொக்கிரகுளம் பகுதியின் தைப்பூச மண்டபத்தின் வாசல்படிகளைத் தொட்டபடி வெள்ளம் எட்ட, ஆற்றிலிருக்கும் குருக்குத்துறை, கருப்பந்துறை சிந்துப்பூந்துறை, மணிமுத்தீஸ்வரம், படித்துறைகள் உட்பட அந்தப்பகுதியின் 10- க்கும் மேற்பட்ட கல்மண்டபங்கள் வெள்ளத்தால் மூழ்கின. மேலும் குருக்குத் துறையின் முருகன் கோவில் மண்டபம் வெள்ளம் காரணமாகத் துண்டிக்கப்பட்டதால் கோவில் மண்டபம், மற்றும் கோபுரத்தைத் தொட்டபடி வெள்ளநீர் செல்வதால் பக்தர்களால் ஆலயம் செல்ல முடியவில்லை.
 

இதனிடையே தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம் பகுதியில் ஒரே நாள் இரவில் 19 செ.மீ. மழை கொட்டித்தீர்த்ததால் அந்தப் பகுதியிலுள்ள விஜய அச்சம்பாடு கிராமத்திற்குள் வெள்ளம் புகுந்து வீடுகளைச் சுற்றிக் கொண்டதால் மக்கள் பாதுகாப்பாக வெளியுற்றப்பட்டனர். தூத்துக்குடியின், திரு.வி.க.நகர், அமுதா நகர், எம்.ஜி.ஆர்.நகர், மினிசகாயபுரம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கைகளும் முடக்கப்பட்டன.



 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sudden landslide in Arunachal Pradesh

அருணாச்சலப் பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டி திபெங் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள திபெங் பள்ளத்தாக்கில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை எண் 33 அமைந்துள்ளது. இத்தகைய சூழலில் அருணாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக இந்த தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் ரோயிங் - அனினி இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாவடடங்களில் இருந்து திபெங் மாவட்டம் தனியாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவு காரணமாக சீன எல்லையையொட்டிய இந்திய ராணுவ முகாம்களுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலை சீரமைக்கப்படும் வரை அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைய 3 நாட்கள் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், இந்த வழித்தடத்தில் பயணங்களை தவிர்க்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.