Skip to main content

நள்ளிரவில் வனத்திற்குள் சுற்றித்திரிந்த டாக்டர் உள்ளிட்ட 3 பேர் கைது; இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல்!

Published on 06/10/2022 | Edited on 06/10/2022

 

3 people, including a doctor, were arrested for roaming in the forest in the middle of the night; Two guns confiscated!

 

தமிழக, கர்நாடக மாநில எல்லையோர வனப்பகுதிக்குள் நள்ளிரவு நேரத்தில் துப்பாக்கிகளுடன் சுற்றித்திரிந்த மருத்துவர் உள்ளிட்ட மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி, ஏர்கன் ஆகிய இரு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

 

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான ஒகேனக்கல், கர்நாடகா & தமிழக எல்லையில் அமைந்துள்ளது. ஒகேனக்கல்லின் மேற்கு கரை கர்நாடகா மாநிலத்தின் ஆலம்பாடி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வனப்பகுதியில் ஏராளமான மான், கரடி, யானை உள்ளிட்ட விலங்குகள் சுற்றித் திரிகின்றன. தடை செய்யப்பட்ட இந்தப் பகுதியில், கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் வன விலங்குகளை வேட்டையாடி வருவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

வன விலங்குகளை வேட்டையாடுவதை தடுப்பதற்காக கர்நாடகா வனத்துறை சார்பில் ஆலம்பாடி வனப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அந்த கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்தபோது, அக். 3ம் தேதி, மர்ம நபர்கள் மூன்று பேர், வனப்பகுதிக்குள் துப்பாக்கிகளுடன் சுற்றித்திரிவது தெரிய வந்தது.

 

விசாரணையில் அவர்கள், ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலையைச் சேர்ந்த பச்சியண்ணன் மகன் மாரிமுத்து, பென்னாகரம் அருகே உள்ள நல்லாம்பட்டியைச் சேர்ந்த மருத்துவர் கவின்குமார், அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் விக்னேஷ் என்பது தெரிய வந்தது.,

 

இதையடுத்து கர்நாடகா மாநிலம் கோபிநத்தம் வனத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (அக். 4) மாரிமுத்துவை கைது செய்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி மற்றும் காற்று அழுத்தத்தால் இயங்கும் 'ஏர் கன்' ஆகிய இரண்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். அவர் அளித்த தகவலின்படி, அவருடன் காட்டுக்குள் சென்ற கவின்குமார், விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்கள் நள்ளிரவு நேரங்களில் வனப்பகுதிக்குள் மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாட வந்ததாக கூறியுள்ளனர். இதையடுத்து மூவரையும் கொள்ளோகால் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

உண்மையில், அவர்கள் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காகத்தான் வனப்பகுதிக்குள் சுற்றித்திரிந்தார்களா? அல்லது வேறு ஏதாவது நாச வேலைகளைச் செய்வதற்காக நுழைந்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

 

இந்த சம்பவம் தமிழகம், கர்நாடகா மாநில வனத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.