Skip to main content

அதிமுக என்ன செய்ய வேண்டும் என சொல்ல சி.டி.ரவி யார்? - கொதிக்கும் அதிமுக நிர்வாகி

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

admk

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் மறுபுறம் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு தேர்தல் களத்தில் அதிமுகவை பின்னடைய செய்துள்ளதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன.

 

இந்த நிலையில், அதிமுகவின் எடப்பாடி தரப்பு மற்றும் ஓபிஎஸ் தரப்பை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் சந்தித்திருந்தனர். தமிழக நலன் கருதி அதிமுக அணிகள் இணைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த சந்திப்பினை அவர்கள் நிகழ்த்தி இருந்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய சி.டி.ரவி, ''அதிமுக 1972 ஆம் ஆண்டு துவங்கப்பட்டபோது எம்ஜிஆர் திமுகவை தீயசக்தி என்று சொன்னார். அந்த வார்த்தை தற்பொழுது வரை பொருந்துகிறது. தற்பொழுது வரை திமுக தீயசக்தியாகத்தான் இருக்கிறது. எனவே, திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால், அதிமுக அணிகள் ஒன்றிணைய வேண்டும். அதற்காகத்தான் அதிமுகவின் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்புகளைச் சந்தித்தோம்' எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில், பாஜக கருத்துக்கு அதிமுக நிர்வாகி எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் சிங்கை ஜீ.ராமச்சந்திரன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அதில் 'சி.டி.ரவி யார்? அதிமுக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுவதற்கு. தேசியக் கட்சி என்பதாலேயே என்ன வேண்டுமானாலும் சொல்லலாமா? இங்கு சி.டி.ரவி அறிவுரை வழங்கியது போல கர்நாடக பாஜக எவ்வாறு செயல்பட வேண்டும் என்று நாங்களும் அறிவுரை வழங்கலாமா?' எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.