Skip to main content

எந்தக் கேள்விக்கும் உருப்படியான பதில்  பள்ளிக் கல்வித்துறையிடம் இல்லை... தங்கம் தென்னரசு கண்டனம்

Published on 15/05/2020 | Edited on 15/05/2020
Thangam Thennarasu dmk mla



ஜுன் மாதம் மூன்றாம் வாரத்தில் நிபுணர்களுடன் ஆலோசித்து பின்னர் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்று சொன்ன பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், திடீரென தன் முடிவை மாற்றி ஜுன் முதல் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்க வேண்டிய அழுத்தம் எங்கே இருந்து வந்தது? என கேள்வி எழுப்பியுள்ளார் திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு. 


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய திருநாடு கரோனா நோய் தொற்றின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட ஏழை மக்களின் அவலக் குரல் எங்கும் எதிரொலிக்கத் துவங்கி இருக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசின் செயலற்ற தன்மையாலும், தவறான முடிவுகளாலும் இந்த நோய்த்தொற்று தமிழகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி இன்று தமிழகம் இந்தியாவிலேயே மூன்றாவது இடத்திற்கு முன்னேறி அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கின்றது.

 

அங்கொன்றும் இங்கொன்றுமாகத் துவங்கி இன்று தமிழகம் முழுமையும் சமூக பரவலாகவே மாறியுள்ள இந்த கொடிய நோய் தொற்றைத் தடுத்திட உரிய வழிவகைகளை உடனே காணாமல் தன் பொறுப்பை எளிதாகத் துறந்து பழியை மக்களின் மீது போட்டுத் தப்பித்துக் கொள்ள முதலமைச்சரே முயலும்போது, அவருக்குக் கீழே இருக்கின்ற அமைச்சர் பெருமக்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?. கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தொடப்போகும் நிலையில், வரும் நாட்களில் அந்த எண்ணிக்கை எல்லா மாவட்டங்களிலும் 'கிடுகிடு' உயர்வை சந்திக்கக்கூடும் என்ற அச்ச உணர்வு அனைவரின் மனதிலும் ஆழப் பதிந்துள்ள நிலையில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பள்ளிகளைத் திறப்பது குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு செய்துள்ளார்.

“கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் திண்ணையில் இருப்பதை தூக்கி மனையில் வை” என்பதை போல கரோனா நோய் தொற்று சிறிதும் தணியாத சூழலில் குறிப்பாக, வரக்கூடிய ஓரிரு மாதங்களில் நோய் தொற்றின் விகிதம் பெருமளவு அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பள்ளிகளை இப்போது அவசரமாக திறந்து மாணவர்களையும், ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் சார்புடைய பணியாளர்களையும் தெரிந்தே அபாயத்திற்கு உள்ளாக்கும் வகையில் அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். அப்படி அமைக்கப்படும் குழுவில் கூட, ஒவ்வொரு நாளும் பள்ளிகளில் கண்ணுக்குத் தெரியாத நோய்க் கிருமியை எதிர்நோக்க வேண்டிய மாணவர்களின் சார்பாக அவர்தம் பெற்றோர்களையோ, ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளையோ, நாடறிந்த நல்ல கல்வியாளர்களையோ, பள்ளி மேலாண்மைக் குழு  உறுப்பினர்களையோ இடம் பெறச் செய்யாது பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரிகளையும், உயர்கல்விக் கூட தொழில்நுட்ப நிபுணர்களையும் மட்டுமே இடம்பெறச் செய்திருப்பது எந்த வகையில் நியாயம் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
 

 

உண்மையையும் உள்ள நிலைமைகளையும் உரத்துச் சொல்வதற்கான உரிய வழிகளை அடைத்துவிட்டு, அமைச்சரின் எண்ணத்திற்கு வெறுமனே தலையசைக்கும் அதிகாரிகளை மட்டும் கொண்ட குழுவினை அவசரமாக அமைத்துள்ளது ஏன்?
 

ஊரடங்கு நான்காம் கட்டமாக நீடிக்கப்படக் கூடும் என்று நம்பத்தகுந்த வகையில் செய்திகள் வந்து கொண்டிருக்கும் போது அவசரமாகப் பள்ளிகளைத் திறக்கும் அமைச்சரின் முயற்சிகளுக்குப் பின்னால் இருக்கும் நிர்பந்தம் என்ன?
 

அண்மையில் முதல்வரைச் சந்தித்துள்ள மருத்துவர்குழு பள்ளிகளைத் திறப்பது குறித்து ஏதேனும் இது குறித்த ஆலோசனைகளை அரசுக்கு வழங்கி இருக்கின்றதா?
 

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் 'ஆதர்ஷ புருஷர்களாக' விளங்கும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தில் கீழ் இயங்கும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியமே (CBSE) பத்தாம் வகுப்புத் தேர்வுகளை ஜுலை மாதத்தில் நடத்த உத்தேசித்திருக்கும் போது, தமிழ்நாட்டில் மட்டுமே அவசரம் அவசரமாகத் தேர்வுகளை ஜுன் முதல் நாளே துவக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது?
 

ஜுன் மாதம் மூன்றாம் வாரத்தில் நிபுணர்களுடன் ஆலோசித்து பின்னர் தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்படும் என்று சொன்ன பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், திடீரெனத் தன் முடிவை மாற்றி ஜுன் முதல் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்க வேண்டிய அழுத்தம் எங்கே இருந்து வந்தது?
 

பொதுப் போக்குவரத்துத் தொடங்கப்படுவதற்கான எந்த அறிவிப்பும் - முன்னேற்பாடுகளும் இல்லாதபோது பல இலட்சக்கணக்கான மாணவர்களைத் தேர்வு மையங்களுக்கு இன்றைய ஊரடங்கு சூழலில் எவ்வாறு அழைத்து வர முடியும்?
 

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் கடந்த இரு மாதங்களாக மாணவர்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் ஆங்காங்கே இருந்து குறிப்பாக மலைக் கிராமங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு அவர்கள் எப்படி வந்து தங்கி தேர்வு எழுத முடியும்?
 

விடுதிகள் திறக்கப்பட்டு தங்குமிடமும், உணவு வழங்கலும் உறுதிப்படுத்தப்படுவதற்கான ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
 

கொரோனா அச்சத்தில் உறைந்து கிடக்கும் மாணவர்கள் உளவியல் ரீதியாகத் தேர்வுகளை எதிர்கொள்ளும் மனநிலையில் இப்போது உள்ளார்களா?.
 

nakkheeran app


 

மேற்கண்ட கேள்விகளுக்கு மட்டுமல்ல, எந்தக் கேள்விக்கும் உருப்படியான பதில்  பள்ளிக் கல்வித்துறையிடம் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை!
 

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கரோனா ஓரளவு கட்டுக்குள் வந்து, மருத்துவ ரீதியான இயல்பு வாழ்க்கை திரும்பியதாக உறுதிப்படுத்திய பின்னரே தேர்வு நடத்துவது சரியானது முறையானது என அறிக்கை வாயிலாகத் தெரிவித்து இருந்தார். அவரது கோரிக்கையை அரசு ஏற்பதே அறிவுடைய செயலாக இருக்கும். ஆனால், இப்போது எரிகின்ற தீயில் எண்ணெய் வார்ப்பது போன்று, நிலைமையின் தீவிரத்தை உணராது பத்தாம் வகுப்புத் தேர்வை ஜுன் மாதம் முதல் வாரத்தில் நடத்த முயல்வதும்  பள்ளிகளை அவசர அவசரமாக திறக்க முயற்சிப்பதும் தமிழ்நாட்டு மாணவர்களை ஆபத்தை நோக்கி அழைத்துச் செல்லும் வழிகளாகும். “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்” என்ற குறளின் பொருளை உணர்ந்து, மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் அவர்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு தனது அறிக்கை வாயிலாக வழங்கியுள்ள ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் நலனையும் ஏனையோரின் நலனையும் காக்க பள்ளிக் கல்வித்துறை உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், கொரோனா தொற்றிலிருந்து தமிழகம் விடுபட்ட நல்ல சூழல் உருவாகும்போது தேர்வுகளை நடத்துவது குறித்தும் - பள்ளிகளைத் திறப்பது குறித்தும் ஆலோசிக்கலாம் எனவும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.