Skip to main content

அமைச்சர் எங்களை ஏமாற்றிவிட்டார்... உள்ளே அவர் கால் வைக்கக் கூடாது... அமைச்சரால் டென்ஷனில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்! 

Published on 22/06/2020 | Edited on 22/06/2020

 

admk


கரோனா காலம் முடியும்போது தேர்தல் காலம் நெருங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. அரசியலில் கோஷ்டிப் பூசல்கள் வலுத்து வருகின்றன. மாவட்டத்தில் மொத்தமுள்ள எட்டு சட்டமன்றத் தொகுதியிலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்தான். இதில் இரண்டு அமைச்சர்கள் உள்ளார்கள். சீனியர் அமைச்சர் செங்கோட்டையன், மற்றொருவர் பவானி கருப்பணன்.

 

அ.தி.மு.க. அமைப்பு நிலையில் ஈரோடு மாநகர் மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்டம் என இரண்டு பிரிவுகள் உள்ளன. மாநகர் மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் ஈரோடு மேற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.வி.ராமலிங்கம் மா.செ.வாக உள்ளார். புறநகர் மாவட்டத்திற்கு அமைச்சர் கருப்பணன் மாவட்டச் செயலாளராக இருக்கிறார்.

 

இதில் மாநகர் மாவட்ட கட்சிப் பொறுப்பு அமைச்சர் கருப்பணன் வசம்தான் இருந்து வருகிறது. பெருந்துறை தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாசலம் முன்பு ஈரோடு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்தார். அவர் வகித்த பதவியைத்தான் தற்போது கருப்பணன் வகித்து வருகிறார்.

 

அதனால் புறநகர் மாவட்டத்தில் கருப்பணனுக்கும் எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலத்திற்கும் அரசியல் மோதல் தொடர்ந்து இருந்து வருகிறது.

 

admk

 

மாநகர் மாவட்ட அ.தி.மு.க.-வுக்கு அமைச்சர் பொறுப்பு வகிக்கும் கருப்பணனை தற்போது ஈரோடு நகரத்திலேயே கால் வைக்கக் கூடாது என மாநகர் மா.செ.வான எம்.எல்.ஏ. கே.வி.ராமலிங்கமும், கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ தென்னரசுவும் தடை போட்டுள்ளார்கள். கடந்த ஆறு மாத காலமாக ஈரோடு பகுதியில் நடக்கும் கட்சிக் கூட்டங்கள் அரசு விழாக்களில் கருப்பணன் கலந்துகொள்ளாதபடி இந்த இரண்டு எம்.எல்.ஏ.க்களும் பார்த்து வருகிறார்கள். இதுபற்றி கருப்பணன் அமைச்சர் செங்கோட்டையனிடம், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கமும் தென்னரசுவும் சர்வாதிகார தனமாக நடந்துகொள்வது எப்படிச் சரியாகும் என நியாயம் கேட்டுள்ளார்.

 

அந்த இரண்டு எம்.எல்.ஏ.-க்களிடம் செங்கோட்டையன், "கட்சியின் தலைமை உங்க மாநகருக்கு அமைச்சர் பொறுப்பு கருப்பணனுக்குத் தான் கொடுத்துள்ளது. அப்படி இருக்கும் போது அமைச்சர் ஏன் ஈரோட்டுக்கு வரக்கூடாது என கூறுகிறீர்கள்?'' எனக் கேட்டுள்ளார் அதற்கு அவர்கள், "கருப்பண்ணன் எங்களுக்கு வரவேண்டியவற்றை ஏமாற்றிவிட்டார். அதேபோல் நாங்கள் சுயமாக இங்கு எதுவும் செய்ய முடியாத அளவுக்கு நடந்துகொள்கிறார்.

 

ஆகவே அவர் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் நாங்கள் அந்த நிகழ்ச்சிக்கு வரமாட்டோம். எங்கள் பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ளக்கூடாது. முதலமைச்சருடன் ஏற்கனவே நாங்கள் நேரடியாக புகார் கூறியுள்ளோம். இதுவரை எந்தத் தீர்வும் ஏற்படவில்லை. ஆகவேதான் கருப்பணன் எங்கள் தொகுதிக்குள் வரக்கூடாது எனக் கூறுகிறோம். நீங்கள் சீனியர் அமைச்சர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம். உங்களோடு கருப்பணன் வந்தால் நாங்கள் கலந்துகொள்ள மாட்டோம்'' எனக் கறாராக கூறி இருக்கிறார்கள்.

 

இது ஒருபுறமிருக்க புறநகர்ப் பகுதியில் உள்ள பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ. ஈஸ்வரன் இப்போது அமைச்சர் கருப்பணனுக்கு எதிராக மாறி உள்ளார். அந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் பகுதியில் தி.மு.க.-வைச் சேர்ந்த சிலரை அ.தி.மு.க.-வுக்கு ஈஸ்வரன் கொண்டு வந்திருக்கிறார். அப்போது மாவட்டச் செயலாளர் அமைச்சர் கருப்பணன் முன்னிலையில் அவர்களை அ.தி.மு.க.-வில் இணைக்காமல் அமைச்சர் செங்கோட்டையனின் குள்ளம்பாளையம் பண்ணை வீட்டுக்கு அவர்களைக் கூட்டிச் சென்று அ.தி.மு.க.-வில் இணைத்துள்ளார். ஒரு மாவட்டச் செயலாளருக்குத் தெரியாமல் அல்லது மாவட்டச் செயலாளரை மதிக்காமல் இந்த நிகழ்ச்சியை எப்படி நடத்தினீர்கள் என செங்கோட்டையனிடம் கருப்பணன் தனது அதிருப்தியைக் கூறியிருக்கிறார். இதனால் செங்கோட்டையனுக்கும் கருப்பணனுக்கும் உரசல் ஏற்பட்டுள்ளது.

 

http://onelink.to/nknapp

 

இது பற்றி கருப்பணன் ஆதரவாளர்கள் கூறும்போது, "அமைச்சர் கருப்பணன், மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாக பேசக்கூடியவர் அவ்வளவுதான். ஈரோடு எம்.எல்.ஏ.-க்களுக்கு அமைச்சர் கருப்பணன் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் செலவு செய்ததாக அவர்கள் ஒரு போலி கணக்குக் காட்டுகிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் அதற்கு மேல் வசூல் செய்து விட்டார்கள் இதுதான் பிரச்சனை. ஆகவே அவர்கள் பிளாக்மெயில் செய்வது அமைச்சருக்குப் பிடிக்கவில்லை. அதேபோல் பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ. ஈஸ்வரன் அமைச்சரை மதிக்காமல் நடக்கிறார். அமைச்சர் ஒரு மாவட்டச் செயலாளராக இருந்து சுயமாகச் செயல்படவிடாமல் இப்படி எம்.எல்.ஏ.-க்கள் சுற்றிச்சுற்றி விரட்டுவது எந்த வகையில் நியாயம்? எனக் கேள்வி எழுப்புகிறார்கள். ஈரோடு அ.தி.மு.க. அரசியல் கொதிநிலையில் சென்று கொண்டு இருக்கிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“கேப்டன் உங்களுக்காகத்தான் என்னை விட்டுட்டுப் போயிருக்காரு...” - விஜய பிரபாகரன் உருக்கம்!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Vijayaprabhakaran campaigned in Virudhunagar

சிவகாசியில் அஇஅதிமுக, தேமுதிக, புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில், விருதுநகர் பாராளுமன்றத் தொகுதிக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றிய இந்தக் கூட்டத்தில், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பேசினார்.

“இவ்ளோ சீக்கிரம் நான் அரசியலுக்கு வருவேன்னு எனக்குத் தெரியாது. இது காலத்தின் கட்டாயம்.  எங்க அப்பா கேப்டன்,  விருதுநகர்ல பிறந்து மதுரைக்கு போய்,  இன்னைக்கு சென்னைல இருக்காரு. கேப்டன் இறந்ததுக்கு அப்புறம் ஒருநாள் நான் மதுரைக்கு வந்தேன். அன்னைக்கு மதுரைல இருந்தப்ப.. எனக்குள்ள ஏதோ ஒரு பந்தம். எனக்கும் மதுரைக்கும் விருதுநகர்க்கும் ஒரு பந்தம் விட்டுபோச்சோன்னு அன்னைக்கு ரொம்ப ஃபீல் பண்ணி அழுதுட்டு வந்த மாதிரி இருந்துச்சு. அப்போ இது யாரோட ஆசை, கேப்டனோட ஆசையான்னு தெரியல. நான் சென்னைல இருந்து மதுரைக்கு வந்து இன்னைக்கு விருதுநகர்க்கு வந்து போட்டியிடுறேன். நிச்சயம் இந்த பந்தம் என்னைக்கும் விட்டுப் போகாதுன்னு ஆண்டவர் சொல்லிருக்காரு போல.

நிறைய பேர் சொன்னாங்க. விஜய பிரபாகரன் சென்னைல இருக்காரு. விருதுநகர்ல எதுக்கு வந்து போட்டியிடுறாருன்னு? பூர்வீகமா இது எங்களோட மண்ணு. இது எங்க தாத்தாவோட மண்ணு . ராமானுஜபுரத்துல தான் எங்க தாத்தா இருந்தாரு. எங்க அப்பா பிறந்தாரு. இங்க இருக்கிற எல்லாரும் எங்க அங்காளி பங்காளி. எல்லாரும் எங்க சொந்தகாரங்க தான். உங்க எல்லாரையும் இங்க சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம். ரொம்பப் பெருமையா நினைக்கிறேன். கேப்டன் உங்களுக்காகத்தான் என்னை விட்டுச் சென்றிருக்காரு.  என் பணி முழுவதும் உங்களுக்காக மட்டும்தான். ஏதோ விஜயகாந்த் பையன் சென்னைல இருக்கான், வர மாட்டான் அப்படி எல்லாம் நினைக்காதீங்க. எங்க அப்பா சின்ன வயசுல இருந்து சராசரியா ஒரு பையன் எப்படி கஷ்டப்படணும், 3 வேளை சாப்பாடு கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம்னு சொல்லி சொல்லி வளர்த்திருக்காரு. நிச்சயம் அதே மாதிரிதான் எங்கள் பணி தொடரும். இன்னைக்கு முதல் முறையா விருதுநகர் தொகுதிக்குள்ள வரும்போது,  அதிமுக எல்லா தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்திச்சேன். எனக்கு மனப்பூர்வமா ரொம்ப சந்தோசம் உங்களை எல்லாம் சந்திச்சதுல.  ஏன்னா எடப்பாடி அண்ணே எப்பவும் அழகா சிரிப்பாரு. தலைமை அழகா சிரிச்சாதான்,  கீழ இருக்கிற தொண்டர்கள் வரைக்கும் சிரிப்பாங்க. அதே மாதிரி  அதிமுகவுல எல்லாருமே என்னை அரவணைச்சி உங்க வீட்டுப் பிள்ளையா என்ன நீங்க பார்த்துக்கிறீங்க. எனக்கு உள்ள வரும்போது தேமுதிக, அதிமுக எந்த வேறுபாடும் தெரியல. நாம எல்லாரும் ஒரே மாதிரிதான் இருக்கோம். அதனால தான் எம்.ஜி.ஆர், கருப்பு எம்.ஜி.ஆர் பேர் வந்ததான்னு கூட தெரியல. இனி என்னோட பிரச்சாரம் ஆரம்பிக்கிற எல்லா ஊருக்கும் வந்து நான் டீடெய்லா பேசுறேன்.

இன்னைக்கு விருதுநகர் மாவட்டம் முழுக்க பட்டாசு தொழிலாளர்கள் தான் ஜாஸ்தி.  இங்க சிவகாசில பேசுறோம். எங்க பெரியப்பா சொன்னாரு, 2018ல கேப்டன் இதே இடத்துல பேசிட்டு போனாருன்னு. அன்னைக்கு அவர் விட்டுட்டுப் போன அதே இடத்துல,  அதே மாதிரி நான் இன்னைக்கு ஒரு வேட்பாளரா உங்க முன்னாடி பேசும் போது ரொம்ப சந்தோஷம் அடையறேன். இன்னைக்கு சிவகாசி என்பது குட்டி ஜப்பான்னு சொல்லுவாங்க. இந்த வார்த்தை தாயகம் படத்துல கேப்டன் தீவிரவாதிகளை ஒரு பாம் பிளாஸ்ட் பண்ணும்போது சொல்லுவாரு. நான் சின்ன ஜப்பான்ல இருந்து எல்லா பொருளும் கொண்டு வந்துருக்கேன்னு.  அந்த தீவிரவாதிகள் கிட்ட டயலாக் பேசிருப்பாரு தாயகம் படத்துல. அதனால அந்த வார்த்தை தெரியும்,  சிவகாசிதான் சின்ன ஜப்பான்னு. ஏன் அந்த டயலாக் அவ்ளோ ஸ்டிராங்கா இருக்குன்னா.. அவ்ளோ திறமைசாலிகள் வல்லுநர்கள் இங்க சிவகாசி பட்டாசு தொழில்ல இருக்கிறாங்க. அதுக்காகத்தான் இத சின்ன ஜப்பான்னு சொல்லிட்டு இருக்காங்க.

இன்னைக்கு சைனா ப்ராடக்ட் எல்லாம் உள்ள வருதுன்னு நம்மளோட வேலைகள் வெளிய வரலன்னு உங்களோட மனக்குமுறல் எல்லாத்துக்குமே தீர்வு காண முடியும். அதிமுக - தேமுதிக கூட்டணி முரசு சின்னத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. நிச்சயம் கேப்டன் மகனா,  எடப்பாடி அண்ணன் ஆசைப்பட்ட வேட்பாளரா, நிச்சயம் டெல்லில போய் உங்களுக்காக நான் போராடுவேன். உங்களுக்காக நான் குரல் கொடுப்பேன்.” எனப் பேசி சைகையால் முரசு கொட்டினார் விஜய பிரபாகரன்.

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.