Skip to main content

யாருக்கும் தெரியாமல் தங்க தமிழ்செல்வனோடு பழகுகின்ற வாய்ப்பு... ஸ்டாலின் பேச்சு

Published on 22/07/2019 | Edited on 22/07/2019

 

சென்னையில் கடந்த மாதம் தங்க தமிழ்செல்வன் தி.மு.க.வில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து தேனி அருகே உள்ள வீரபாண்டியில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க. வில் இணையும் விழா மற்றும் தி.மு.க. பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது.

 

Thanga Tamil Selvan - mkstalin


 

இதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,
 

நம்முடைய தங்க தமிழ்ச்செல்வன் அவர்களைப் பற்றி உங்களுக்கு நான் அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் "கொல்லன் தெருவில் ஊசி விற்ற கதை". எனவே அவரைப் பற்றி அறிந்தவர்கள் நீங்கள் புரிந்தவர்கள் நீங்கள். அவரைப்பற்றி எங்களைவிட உங்களுக்குத் தான் அதிகம் தெரியும். சட்டமன்றத்தில் தான் நாங்கள் அவரோடு பார்க்கின்ற நேரத்தில் மட்டுமல்ல சில நேரங்களில் யாருக்கும் தெரியாமல் அவரோடு பழகுகின்ற வாய்ப்பையும் பெற்றதுண்டு.
 

அவரிடத்தில் எனக்கு மிக மிக பிடித்த விஷயம் என்னவென்று கேட்டீர்கள் என்றால். எப்பொழுதும் சிரித்த முகமாக இருப்பார். நான் தொலைக்காட்சிகளில் அடிக்கடி பார்க்கிறதுண்டு. ஊடகங்களில் அவர் விவாதங்களில் பங்கேற்று பேசுகின்ற அந்த காட்சிகள், பத்திரிகையாளர்களிடத்தில் அவர் தரக்கூடிய பேட்டி இவற்றை எல்லாம் பார்க்கின்ற வாய்ப்பு எனக்கு பல நேரங்களில் கிடைப்பதுண்டு. எதற்கும் சலித்துக்கொள்ள மாட்டார். கோவப்படுகின்ற அளவிற்கு - கிண்டல் செய்து - கொச்சைப்படுத்தும் விதமாக கேள்வி கேட்பார்கள் அவற்றையெல்லாம் அவர் சட்டை செய்யாமல் அப்படியே சிரித்துக்கொண்டே அதற்கு பதில் சொல்லக்கூடிய காட்சியைப் பார்த்து அவரை உள்ளபடியே நான் இந்த நேரத்தில் பாராட்ட விரும்புகின்றேன். 


 

ஒரு பழமொழி உள்ளது "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பார்கள். அதுபோல் அவருடைய சிரிப்பு கள்ளம் கபடம் இல்லாத ஒன்று. சட்டமன்றத்தில், நாங்கள் ஆளும் கட்சியாகவும், அவர்கள் எதிர்க்கட்சியாகவும் உட்கார்ந்து இருக்கின்றார்கள். அதன் பிறகு, அவர்கள் ஆளும் கட்சியாகவும் நாங்கள் எதிர்க்கட்சியாகவும் உட்கார்ந்து இருக்கக்கூடிய காட்சிகள் சட்டமன்றத்தில் இருப்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும். அவரும் சட்டமன்றத்தின் ஆளும் கட்சி உறுப்பினராக உட்கார்ந்திருக்கின்றார்.


 

அம்மையார் அவர்கள் இருந்த நேரத்திலும், அதற்குப் பிறகு அவர் மறைந்த நேரத்திலும், எப்பொழுதும் ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் எதிர்க்கட்சியினரை பார்த்து விமர்சனம் செய்வார்கள். அதேபோல் எதிர்க்கட்சியில் இருக்கக்கூடிய நாங்களும் சில நேரங்களில் ஆளும் கட்சியைப் பார்த்து விமர்சிக்கின்ற, அந்த வாய்ப்பையும் பெறுகின்றோம் அதுதான் சட்டமன்றத்தின் மரபு, அதற்குரிய விளக்கத்தை சொல்வது.  சில நேரங்களில் ஆளும் கட்சியில் இருக்கக்கூடிய அமைச்சர்களோ அல்லது சட்டமன்ற உறுப்பினர்களோ வரம்பு மீறி கூட எதிர்க்கட்சியை பார்த்து விமர்சனம் செய்வதுண்டு. ஆனால், தங்க தமிழ்ச்செல்வன் அவர்களை நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றேன் அவர் கேள்விகளைக் கேட்பார், விமர்சனம் செய்ததுண்டு ஆனால் தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்கின்ற அந்த வழக்கத்தை அவர் பெற்றதில்லை. எதையும் நாகரிகத்தோடு பேசுவார். 

 

mkstalin


 

நான் சில நேரங்களில் சட்டமன்றத்தில் பேசிவிட்டு வெளியில் வருகின்ற பொழுது எதிரில் பார்த்ததுண்டு. பார்த்ததும் அருகில் வந்து "அண்ணே சூப்பரா பேசினீங்க" என்று சொல்லிவிட்டுப் போவதுண்டு. சபையில் சொல்ல முடியாது சொன்னால் அவருக்கு ஆபத்து வந்துவிடும். எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வெளியில் வந்து அதை சொல்லி விட்டுப் போவார். அது மட்டுமல்ல, சட்டமன்ற உறுப்பினராக இருந்த நேரத்தில் அவர் ஆளும் கட்சி உறுப்பினர். அவரே சபாநாயகரை எதிர்த்து வெளிநடப்பு செய்திருக்கின்றார். ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்றெல்லாம் பார்க்காமல் எல்லோரிடத்திலும் சகஜமாக அன்போடு பழகக்கூடிய ஒரு நல்ல உள்ளம் படைத்திருக்கக்கூடியவர், தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள்.
 

அதனால்தான், நாங்கள் இப்பொழுது மட்டுமல்ல ரொம்ப நாட்களாகவே எப்படியாவது தூண்டில் போட்டு இழுக்க வேண்டும் என்று நாங்கள் அந்த முயற்சியில் ஈடுபட்டதுண்டு அவர் மாட்டவில்லை. ஆனால், இப்பொழுது மாட்டிவிட்டார். கொஞ்சம் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறார் அதுதான் உண்மை. இவ்வாறு பேசினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கோடை வெப்பம்; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Tamil Nadu Chief Minister M. K. Stalin's instructions for summer heat

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்க்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, “வெப்ப நிலை அதிகரிக்கும். வெப்ப அலை வீசும், என்பது போன்ற செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் கவனத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பொதுவாக கோடை காலம் என்பது வெப்பம் அதிகம் உள்ள மாதங்களாக இருந்தாலும், நாளுக்கு நாள் வெப்ப அளவு அதிகமாகி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அதனால்தான் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் அரசுத் துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன். இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மருத்துவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆலோசனையை அரசு அதிகாரிகள் கேட்டுத் தெரிந்து கொண்டதன் அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கையை வெளியிடுவது மிக மிக அவசியமானதாகக் கருதுகிறேன். வெப்பநிலை அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், வயதானவர்கள். கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படலாம். இவர்களை மிகக் கவனமாக பாதுக்காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது. உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை தொடர்ந்து பருகவேண்டும். அதிக அளவில் மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சைப் பழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களில் மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

பயணத்தின்போது துணி, துண்டு, தொப்பி குடிநீர் எடுத்துச் அணிந்து செல்லவேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான. தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வயது முதிர்ந்தவர்கள் நடந்து செல்லும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும்போது, களைப்பு, தலைவலி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக நிழலுக்குச்செல்லவேண்டும். மேலும், தண்ணீர், எலுமிச்சைப் பழச்சாறு, ஓ.ஆர்.எஸ். பருக வேண்டும். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கவும். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும். சிறுபிரச்சனை என்றாலும் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அனைத்து பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

அதிகரித்துவரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும், அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள். திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்டதூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.