Skip to main content

OPS மகன்கள் இடையே யுத்தம்... தம்பிக்கு அனுபவமில்லை என அண்ணன் ஆதரவாளர்களின் கருத்தால் பரபரப்பு!

Published on 02/07/2020 | Edited on 02/07/2020

 

opr-ops-pradeep

 

அப்பாவைப் போலவோ, அண்ணனைப் போலவோ அரசியலில் ஆர்வம் காட்டாமல் ஆன்மிகமும், ரியல் எஸ்டேட் தொழிலுமே முதன்மையானது என்றிருந்தார் ஓ.பி.எஸ்.சின் இரண்டாவது மகன் ஜெயபிரதீப். இப்போது அண்ணனுக்குப் போட்டியாக தம்பியும் இறங்கியிருப்பதால் தேனி மாவட்ட அ.தி.மு.க.-வில் பரபரப்பு பற்றிக்கொண்டிருக்கிறது.

 

கரோனா நிவாரண உதவிகளை மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதியில் இருக்கும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வழங்கியதுடன் மட்டுமல்லாமல், கரோனா நிவாரண நிதியாக தனது சொந்தப் பணத்தில் ஒரு கோடியை நிதியாக முதல்வருக்கு அனுப்பி எடப்பாடியிடமே பாராட்டைப் பெற்றிருக்கிறார் ஜெயபிரதீப். இவரின் இந்தத் திடீர் அரசியல் விஜயம் குறித்து மாவட்ட பொறுப்பிலுள்ள சில ர.ரக்கள் நம்மிடம் பேசியபோது, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு முரசொலியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், திருப்பூரில் ஜெயபிரதீப் வீடு கட்டி ரோபோக்களை வேலைக்கு வைத்திருக்கிறார் என்றும், அதிகார துஷ்பிரயோகம் செய்து அரசு கட்டிடத்தில் கம்பெனி நடத்துகிறார் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதைக்கண்டு டென்ஷன் அடைந்த ஜெய பிரதீப், "ஸ்டாலின் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என்றும், ரோபோக்கள் எதுவுமில்லை, சொந்தக் கட்டிடத்தில் தான் கம்பெனி செயல்படுகிறது. யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்து ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது'' என்றும் ஆடியோ வாய்ஸ் மூலம் ஸ்டாலினுக்கு பதில் கொடுத்து, அரசியலில் அச்சாரம் போட்டார்.

 

தேனி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரான சையதுகான், கட்சிக்காரர்களைச் சரிவர மதிப்பது கிடையாது. கட்சியையும் வளர்க்க ஆர்வம் காட்டவில்லை. அதனாலேயே துணை முதல்வர் ஓ.பி.எஸ். நான்கு தொகுதிகளில் உள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம் ஆகிய 3 ஒன்றியங்களை இரண்டாகப் பிரித்து பொறுப்பாளர்களைப் போட்டு கட்சியை வளர்த்து வருகிறார். அதுபோல் தேனி, போடி ஒன்றியத்தையும் இரண்டாகப் பிரித்து பொறுப்பாளர்களை நியமிக்க இருக்கிறார். மாவட்டத்தையும் இரண்டாகப் பிரிக்கப் போகிறார். சையதுகான் ஒரு பகுதிக்கு மாவட்டச் செயலாளராகவும் மற்றொரு பகுதிக்கு இளையமகன் ஜெய பிரதீப்பை மாவட்டச் செயலாளராகவும் போடப்போகிறார் என்ற பேச்சும் அடிபடுகிறது.

 

கட்சியில் பலர் இருக்க, ஜெயபிரதீப்பை முன்னிலைப் படுத்துவதை எதிர்த்து, நாங்களும் ஓ.பி.எஸ்.சிடம் நேரடியாகவே முறையிட்டு இருக்கிறோம்'' என்றனர் ஆதரவாளர்கள்.

 

மேலும், சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த சையதுகானை மாவட்ட செயலாளராக போட்டு இருந்தும் கூட, கடந்த எம்.பி. தேர்தலிலும் இடைத் தேர்தலிலும் முஸ்லிம் ஓட்டுகள் விழவில்லை. முத்தலாக் சட்டத்துக்கு ஆதரவாக எம்.பி. ஓ.பி.ஆர் (ரவீந்திரநாத் குமார்) குரல் கொடுத்தார் என்பதற்காக கம்பம் சென்ற ஓ.பி.ஆரை முஸ்லிம்கள் பலர் காரை தடுத்து நிறுத்தித் தாக்கினார்கள். அதுபற்றி மாவட்டம் முறையிட்டும் கூட முஸ்லிம்கள் கண்டுகொள்ளவில்லை. அதனால்தான் மாவட்டச் செயலாளர் பதவியைப் பறிக்க தலைமை முடிவுசெய்து இருப்பதன் மூலம் அந்தப் பதவியை எனக்குத் தர வேண்டும் எனக் கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், எடப்பாடி வரைகூட மோதி வருகிறார். ஏற்கனவே துணை முதல்வரை எதிர்த்து மாவட்டத்தில் அரசியல் செய்த ஜக்கையன் இப்ப பதவிக்காக பின்னாடியே ஓடி வருகிறார்.

 

இருந்தாலும் ரவீந்திரநாத் குமார் எம்.பி. ஆக இருப்பதால் தொகுதி மக்கள் மற்றும் கட்சிக்காரர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர். நல்லது கெட்டதில் கலந்து கொண்டு வருகிறார். அப்படிப்பட்ட ஓ.பி.ஆரை மாவட்டச் செயலாளராக போட்டால்தான் கட்சியை வளர்க்க முடியும். அதைத்தான் ஓ.பி.ஆரும் விரும்புகிறார். ஏற்கனவே ஆறு தொகுதிகளைக் கொண்ட பிற மாவட்டங்களை இரண்டாகப் பிரித்துப் பொறுப்பாளர்களை நியமித்து இருக்கிறார்கள். தேனி மாவட்டத்தில் நான்கு தொகுதிகளே இருப்பதால் பிரிக்க வாய்ப்பில்லை. அதனால் ஏற்கனவே இருக்கக் கூடிய மாவட்டச் செயலாளர் சையதுகானை மாற்றிவிட்டு எம்.பி. ஓ.பி.ஆரை மாவட்டச் செயலாளராக நியமிக்க வேண்டுமே தவிர, அரசியல் அனுபவம் இல்லாத அவருடைய தம்பி ஜெயபிரதீப் எல்லாம் போடக் கூடாது’என்கிறார்கள் ஒன்றிய பொறுப்பிலுள்ள ஓ.பி.ஆர் ஆதரவாளர்கள் சிலர்.

 

http://onelink.to/nknapp

 

"ரவீந்திரநாத்குமாருக்கு எம்.பி. சீட் கொடுக்கும் போதே ஜெயபிரதீப் பையும் அரசியலில் இறக்கி பதவி கொடுக்க வேண்டும் என்ற பேச்சு ஏற்கனவே இருந்து வந்தது. இந்த நிலையில்தான் திடீரென அரசியல் களத்தில் குதித்த ஜெயபிரதீப்புக்கு மாவட்டச் செயலாளராக வேண்டும் என்ற ஆசையும் இருந்து வருகிறது. அதுபோல் ரவீந்திரநாத்குமார் எம்.பி.யாக இருந்தாலும் கூட, மாவட்டச் செயலாளராக வரவேண்டும் என்ற ஆசையும் அவருக்கு இருக்கிறது'' என்கிறார்கள்.

 

இப்படி ஒரே பதவிக்கு அண்ணன் தம்பிக்கு இடையே போட்டி வெடித்திருப்பதால் அ.தி.மு.க.-வில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.

Next Story

மரத்தடியில் டி.டி.வி. தினகரனுக்காக காத்திருந்த ஓ.பி.எஸ்‌.!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
OPS waiting for tTV Dinakaran on under the tree

தேனி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.ம.மு.க. வேட்பாளரான டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க.வில் நாராயணசாமி, நாம் தமிழக கட்சி சார்பில் மதன் மற்றும் சில கூட்டணி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் இருந்தாலும் கூட நான்கு முனை போட்டி தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்று (27.03.2024) டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்ய மதியம் இரண்டு மணிக்கு மேல் வருவதாக இருந்தது. ஏற்கெனவே ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகனும் எனக்காக இந்த தொகுதியை விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் பிரச்சாரத்தின் போது பேசி இருக்கிறார்.

அதை தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்வதை பார்த்து வாழ்த்து கூற ஓ.பி.எஸ். முடிவு செய்து, தனது தொகுதியான ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 01.15 மணிக்கு தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, மாவட்ட செயலாளர் சையது கானும் இருந்தனர். ஆனால் ஓபிஎஸ் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடியிலேயே நின்று கொண்டு அவர்கள் இண்டு பேரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது ஓ.பி.எஸ் வழக்கத்துக்கு மாறாக அதிமுக கரை வேட்டி இல்லாமல் பாடர் கரை போட்ட வேட்டி கட்டி இருந்தார். உடன் வந்த ஒருவர் ஓ.பி.எஸ்.உட்காருவதற்காக கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று ஒருசேர் எடுக்க முயன்றார். அப்பொழுது அங்குள்ள அதிகாரிகளும் தேர்தல் விதிமுறை மீறி வெளியே சேர் கொண்டு போக கூடாது என்று கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து தான் ஓ.பி.எஸ்.ஸுடன் அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து 02.14 மணி வரை அதாவது ஒரு மணி நேரம் நின்று கொண்டிருந்தனர். ஆனால், தமிழக முதல்வராக இரண்டு முறை ஓ.பி.எஸ். இருந்தும் கூட அதை எல்லாம் மறந்து விட்டு டி.டி.வி. தினகரன் வருகைக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடி நிழலில் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார்.

OPS waiting for tTV Dinakaran on under the tree

அதைத்தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் பிரச்சார வேனில் 02.15 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே வந்த டிடிவியை ஓ.பி.எஸ். வரவேற்று சால்வை அணிவித்தார். ஆனால் டிடிவி தினகரன் ஓ.பி.ஆர். உள்பட சிலர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு வந்தனர். அதுவரை ஓ.பி.எஸ். மரத்தடியிலேயே நின்று கொண்டிருப்பதை கண்டு அதன் அருகில் மக்கள் உட்காருவதற்காக இரும்புச் சேர் போட்டு இருப்பதை பார்த்த கட்சிக்காரர்கள் சிலர் அதை எடுத்து வந்து போட்டனர். அதில் ஓ.பி.எஸ். உடன் இரண்டு பேரும் உட்கார்ந்து இருந்தனர். அதன் பின் வந்த டி.டி.வி. தினகரனை மீண்டும் வாழ்த்தினார். அப்பொழுது டி.டி.வி. தினகரன் நீங்களும் வாங்கள் பேட்டி கொடுக்கலாம் என்று கூறி அழைத்துச் சென்றார். ஆனால் டி.டி.வி. மட்டும்தான் பேட்டி கொடுத்தாரே தவிர அதன் அருகிலேயே ஓ.பி.எஸ். நின்று கொண்டே இருந்தார் அதன் பின் பிரச்சாரவேனில் டி.டி.வி. தினகரன்  ஏறும் வரை அருகிலேயே நின்று வழி அனுப்பி விட்டு தான் திரும்பி சென்றார்.