Skip to main content

உயிரை பாதுகாக்க ஒரே ஒரு தடி இருந்தது. அதனை எடப்பாடியும், நானும் வைத்துக்கொண்டு... தங்கமணி பேச்சு...

Published on 27/11/2019 | Edited on 27/11/2019

 

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு பேசினார். 
 

அப்போது, இரண்டு வெற்றிக்குப் பிறகு இந்தக் பொதுக்குழுக் கூட்டம் நடக்கிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில்தான் அதிமுக என்பதை உறுதி செய்து அதற்கு பிறகு நடக்கும் கூட்டம். ஒரு வாரம்தான், ஒரு மாதம்தான் இந்த ஆட்சி இருக்கும் என்று சொல்லி வந்தார்கள். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதற்கு பின்னர் நடக்கும் கூட்டம். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அனைவரும் திரும்பி பார்க்கின்றனர். 2021லும் அதிமுக ஆட்சி என்பதை அந்த வெற்றி சொல்கிறது. 

 

minister


 

ஏதோ ஒரு அதிசயத்தில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்துவிட்டார் என்று சொல்கிறார்கள். இந்த இயக்கத்திற்காக அவர் உழைத்த உழைப்பு என்ன என்பதை கோடிட்டு காட்ட விரும்புகிறேன். திருமங்கலம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. சேலம் புறநகர் மாவட்டத்திற்கும், நாமக்கல் மாவட்டத்திற்கும் பூத்தை ஒதுக்கியிருந்தார் ஜெயலலிதா. இருவரும் ஒன்றாகத்தான் தேர்தல் பணியாற்றினோம். மேலஉரப்பனூர், கீழ்உரப்பனூர், ஊராண்ட உருப்பனூர் பகுதிகளை ஒதுக்கியிருந்தார்கள். நாங்கள் இருவரும் 20 நாட்கள் ஒரு வீட்டில் ஒரே ஒரு அறை எடுத்து தங்கியிருந்து தேர்தல் பணிகளை பார்த்தோம். 
 

அந்த அறையில் பாய்தான் இருக்கும். அந்த பாயில்தான் படுப்போம். பத்து நாள் இருக்கும், திடீரென இரவு இரண்டு மணி இருக்கும், திமுககாரர்கள் சத்தம்போட்டுக் கொண்டு மேலே வருவதை பார்த்த எடப்பாடியார், மணி நாம் உயிரை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றார். பின்னர் நாங்கள் தவழ்ந்து சென்று ஜன்னல் வழியாக பார்த்தோம். 10 பேர் வந்துகொண்டிருக்கிறார்கள். இருப்பது ஒரே அறை, ஒரே கேட்டுதான் இருக்கிறது. தங்களை பாதுகாக்க என்ன இருக்கிறது என்றால் அந்த அறையில் ஒரே ஒரு தடிதான் இருந்தது. அதனை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தோம். விடிய விடிய உயிரை பணயம் வைத்து அன்றைய தினம் தேர்தல் பணியாற்றியவர்தான் எடப்பாடியார். 


 

ஜெயலலிதாவுக்கு பிறகு இந்த இயக்கத்திற்கு பாதுகாப்பு இருக்குமா. தொண்டர்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்று நினைத்தவர்களுக்கு மத்தியில் இன்றைய தினம் நாம் வேட்டியை தைரியமாக கட்டி செல்கிறோம் என்றால் அதற்கு காரணம் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியும்தான். 


 

திடீரென முதலமைச்சரானார். அதிசயம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு புறம் எதிரி, இன்னொரு புறம் துரோகி என்பதை சமாளித்து அதற்கு மேலாக இந்த மூன்று ஆண்டு காலத்தில் இந்த ஆட்சியை எப்படியாவது வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று போராட்டங்கள் அதிகமாக நடந்தன. அனைத்தையும் நிர்வாகத் திறமை, ஆளுமை திறமை காரணமாக முறியடித்து காட்டியுள்ளார் எடப்பாடியார். இவ்வாறு பேசினார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.