Skip to main content

கட்டாய திருமணத்தால் வீட்டைவிட்டு வெளியேறிய பெண்... ஏழு ஆண்டுகளுக்குப் பின் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி...

Published on 16/09/2020 | Edited on 16/09/2020

 

Girl who fled home to avoid marriage cracks UP PCS exam

 

 

கட்டாய திருமணத்தைத் தவிர்க்க வீட்டைவிட்டு வெளியேறிய பெண், ஏழு ஆண்டுகளுக்குப் பின் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று வீடு திரும்பிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.

 

உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டை சேர்ந்த சஞ்சு ராணி வர்மா என்பவர், தனக்கு நடக்கவிருந்த கட்டாய திருமணத்தை தவிர்ப்பதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறினார். கடந்த 2013 ல் சஞ்சுராணியின் தாயார் இறந்த பிறகு, அவரது குடும்பத்தினர் சஞ்சுராணிக்கு கட்டாய திருமணம் செய்துவைக்க முயன்றுள்ளனர். ஆனால், திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாத சஞ்சுராணி, வீட்டிலிருந்து வெளியேறி டெல்லியில் குடியேறியுள்ளார். படிப்பதற்கு பணமும், குடும்பத்தினரின் ஆதரவும் இல்லாத சஞ்சுராணி பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து, அதன்மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து தனது பட்டப்படிப்பை முடித்ததோடு, சிவில் சர்வீஸ் தேர்வுக்கும் தயாராகி வந்துள்ளார்.

 

இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேச சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்ற அவர் தற்போது அதில் வெற்றியும் பெற்றுள்ளார். தேர்வில் வெற்றிபெற்று உத்தரப்பிரதேச வணிகவரித்துறை அதிகாரியாக தனது வெற்றிக்கு அவர் திரும்பியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், "நான் 2013 ல் என் வீட்டை விட்டு வெளியேறியது மட்டுமல்லாமல், எனது படிப்பையும் கூட விட்டுவிட்டேன். என்னிடம் சுத்தமாக பணம் இல்லை. பின்னர் நான் குழந்தைகளுக்கு டியூஷன் கற்பிக்க ஆரம்பித்தேன். தனியார் பள்ளிகளில் பகுதிநேர கற்பித்தல் வேலையும் கிடைத்தது. இவற்றின் மூலம் எனது சிவில் சர்வீஸ் தயாரிப்பை தொடர முடிந்தது

 

என் அம்மா காலமான பிறகு, திருமணம் செய்து கொள்ளும்படி என் குடும்பம் என் மீது அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தது. எனது கனவைப் பற்றி அவர்களுக்கு விளக்க முயன்றேன், ஆனால் அனைத்தும் வீணானது. எனவே, நான் சொந்தமாக வாழ முடிவு செய்தேன்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எழுதிய மாணவர்கள்; ஆசிரியர்களின் செயலால் அதிரடி நடவடிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Action by teachers on Students wrote 'Jai Sri Ram' in the answer sheet

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் பகுதியில் வீர் பகதூர் சிங் புர்வன்சால் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பல்கலைக்கழத்தில் பி-பார்ம் பயின்ற முன்னாள் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்கள் எழுதிய தேர்வில் அவர்களை தேர்ச்சி பெற வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பான புகாரை, பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், முன்னாள் மாணவர்கள் முதலாமாண்டு தேர்வில் எழுதிய விடைத்தாள்களின் நகலை எடுத்து சரி பார்த்துள்ளார். அதில், ஜெய் ஸ்ரீ ராம் என்றும், ஜெய் ஹனுமான் என்றும், கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா என்ற வார்த்தைகளை மட்டும் எழுதி விடைத்தாள்களை நிரப்பியுள்ளனர். அந்த விடைத்தாள்களுக்கு 56% மதிப்பெண்களை ஆசிரியர்கள் மூலம் பெற்றுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், இந்த விடைத்தாள்களை முறைப்படி மீண்டும் திருத்த சொன்ன போது, அதில் அனைவருக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனையடுத்து, விடைத்தாள்களின் நகலையும், முறைப்படி திருத்தப்பட்ட விடைத்தாள்களையும் எடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், இந்த முறைகேட்டில் 2 ஆசிரியர்களுக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. அதன் பேரில், மாணவர்களிடம் பணத்தைப் பெற்று கொண்டு அவர்களை தேர்ச்சி பெற வைத்த அந்த 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான், கிரிக்கெட் வீரர்கள் பெயரை மட்டுமே எழுதி வைத்த மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.