நான்காவது காலாண்டில் வேலைவாய்ப்பு உயரும் - கருத்துக்கணிப்பு முடிவுகள்
கடந்த மூன்று காலாண்டுகளில் பின்தங்கிய நிலையில் இருந்த வேலைவாய்ப்பு, நான்காவது மற்றும் கடைசி காலாண்டான அக்டோபர் - டிசம்பரில் உயரும் வாய்ப்புள்ளதாக மேன்பவர் குரூப் எனும் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேன்பவர் குரூப் இந்தியா எனும் நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. இதன் இறுதிமுடிவுகள் மிண்ட் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அதன்படி, கடந்த மூன்று காலாண்டுகளில் வேலைவாய்ப்பானது மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகவும், கடைசி காலாண்டில் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு, வேலைவாய்ப்பு 19%ஆக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் - டிசம்பர் காலாண்டின் வேலைவாய்ப்பு விகிதமான 32%-ஐவிட இது மிகமிக குறைவு.
மேலும், விழாக்காலம் தொடங்கவிருப்பதாலேயே இந்த வேலைவாய்ப்பு விகிதத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து, இணைய வணிகம் உள்ளிட்ட பலதுறைகளில் ஏற்படும் கூடுதல் பணியாட்களுக்கான தேவை அதிகம் இருக்கும் என மேன்பவர் குரூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- ச.ப.மதிவாணன்