Skip to main content

அடுத்து எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும்... முதல்வர் யார்..? தமிழ்நாட்டு அரசியலும் ஜோதிடமும்!

Published on 08/03/2021 | Edited on 11/03/2021

 

Which party will rule next ... Who is the Chief Minister ..? Tamil Nadu politics and astrology!

 

தொகுதி ஒதுக்கீட்டுக்குப் பிறகு, அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள். அடுத்து, ஒவ்வொரு தொகுதியிலும் எந்தக் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார்? அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியைச் சந்திப்பவர்கள் யார்? என்ற கேள்விகள் எழும். தேர்தல் முடிவுகள் எப்படியிருக்குமோ? என்ற கவலை, சம்பந்தப்பட்ட கட்சிகளைப் போலவே, வேட்பாளர்களையும் ஆட்டிப்படைக்கும். இதற்கான தீர்வு, வாக்காளர்களின் விரல்களில் இருந்தாலும், முடிவுகள் தெரியும் வரை வேட்பாளர்களின் மனம் இருப்பு கொள்ளாது. ஆறுதலான வார்த்தைகளுக்காக, நம்பிக்கையான ஜோதிடர்களிடம் சென்று, பரிகாரம் தேடி, நற்பலனை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். சில ஜோதிடர்கள் அந்த வேட்பாளர்களிடம் “நீங்க நிச்சயம் ஜெயிப்பீங்க.. இத நான் சொல்லல.. உங்க கட்டம் சொல்லுது..” என்று நம்பிக்கை வார்த்தைகளை அள்ளித்தெளித்து, அந்த நேரத்தில் ‘கூல்’ செய்துவிடுவர்.

 

‘ஜோதிடம் என்பது ஒரு கணிதமே! இது அறிவியல்பூர்வமானது என்பதைவிட, விஞ்ஞானபூர்வமானது என்பதே சரி!’ என்று ஒரு தரப்பு கூறி வந்தாலும், ‘ஜோதிடம் முற்றிலும் வணிகமயமாகிவிட்டது. அறிவியல்பூர்வமானதல்ல! வானத்தில் உள்ள நட்சத்திரங்களும் கிரகங்களும் எந்த விதத்திலும் மனிதர்களைக் கட்டுப்படுத்தாது..’ என்ற எதிர் கருத்தும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

 

‘நம் முன்னோர்கள் சூரியக் குடும்பத்தின் அடிப்படையில் வகுத்த சில கணித முறைகளைப் பின்பற்றியே, இந்நாளில் ஜோதிடம் பார்க்கப்படுகிறது. இது ஒரு கணிப்பு! அவ்வளவே! கணிப்புகள் சில சமயங்களில் தவறாகலாம். ஆனாலும், ஜோதிடத்தைக் கற்றுத் தேர்ந்து ஓரளவுக்குத் துல்லியமாகக் கணிப்பவர்களும் உண்டு.’ என்ற பொதுவான கருத்தே ஆன்மிக நம்பிக்கையாளர்களிடம்  பரவலாக வெளிப்படுகிறது. 

 

Which party will rule next ... Who is the Chief Minister ..? Tamil Nadu politics and astrology!

 

சுயமரியாதை, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, இறைமறுப்பு, பெண் உரிமை மற்றும் பெண் கல்வி போன்ற முற்போக்கான கொள்கைகளை வலியுறுத்தும் புரட்சிகரமான சிந்தனையுடனே, திராவிடக் கட்சியான திமுக-வின் ஆட்சி 1967-இல் தமிழகத்தில் மலர்ந்தது. 1977-இல், பகுத்தறிவுக் கொள்கையில் பெரிதாக ஈடுபாடு காட்டாத அதிமுக ஆட்சி அரியணை ஏறியது. 1991-இல் அதே அதிமுக ஆட்சியின் முதலமைச்சரானார் ஜெயலலிதா. அழுத்தமான ஆன்மிக நம்பிக்கையுள்ள அவர், பின்னாளில் ஜாதகத்தைப் பார்த்து வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் நடைமுறையை மேற்கொண்டதும் நடந்தது. அவர் ஆரம்பித்து வைத்ததுதான்! அரசியலும் ஜோதிடமும் தற்போது பிரிக்க முடியாததாகிவிட்டது. சசிகலா, தற்போது அரசியலைவிட்டு ஒதுங்கியிருப்பதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ஜோதிட கணிப்பே பிரதானமாக உள்ளது. 

 

Which party will rule next ... Who is the Chief Minister ..? Tamil Nadu politics and astrology!

 

சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த  வருமானத்தை மீறி சொத்து சேர்த்த வழக்கில், 1996-இல் கைதானார் ஜெயலலிதா. 1997-இல் தோழி சசிகலா உள்ளிட்ட, ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள் மீதான 47 ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்கு மூன்று சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தது அன்றைய திமுக அரசு. நிலக்கரி இறக்குமதி ஒப்பந்த வழக்கு, ப்ளஸண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு, டான்சி நில ஒப்பந்த வழக்கு என வழக்குகள் துரத்தினாலும், 2001-இல் இரண்டாவது முறையாக முதல்வரானார் ஜெயலலிதா. டான்சி வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால், ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துவிட, முதல்வர் பதவியை இழந்தார். பிறகு, இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, 2002-இல் ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் வெற்றிபெற்று, மீண்டும் முதல்வரானார். ஆனாலும், 2003-இல் திமுகவின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு, சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

 

Which party will rule next ... Who is the Chief Minister ..? Tamil Nadu politics and astrology!

 

மாறி மாறி சோதனைகளை ஜெயலலிதா சந்தித்துவந்த நிலையில், 2006-இல் சட்டமன்றத்துக்கான தேர்தல் வந்தது. அரசியல் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்வதற்கும், வெற்றியைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், தெய்வ வழிபாடுகளும் யாகபூஜைகளும் போதாதென்று, ஜோதிடத்தை முழுமூச்சாக நம்பினார். ‘இந்தத் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்குமா? நான் மீண்டும் முதலமைச்சராக முடியுமா?’ எனத் தன்னைத் துளைத்தெடுத்த சந்தேகத்தை ஜோதிடர்களிடம் முன்வைப்பதற்கு ஆயத்தமானார். தனக்கு வலதுபக்கம் சசிகலாவையும்,  இடதுபக்கம் மகாதேவனையும் வைத்துக்கொண்டு, எதிரே மூன்று மூன்றாக 9 இருக்கைகளில்  ஜோதிடர்களை அமரச் செய்து, கேள்வியை வீசினார். ‘அம்மா.. உங்க ஜாதகப்படி  நீங்கதான் அடுத்த முதல்வர்..’ என்று ஜோதிடர்கள் கோரஸாகக் கூற, அவர்களில் வயதான குருக்கள் ஒருவர் ‘ஜெயலலிதா என்னும் நான் என்று பதவியேற்பீர்கள். இதைப் பகவானே சொல்லிட்டார்..’ என்று சிலிர்க்க, பூரித்துப்போனார் ஜெயலலிதா. 

 

Which party will rule next ... Who is the Chief Minister ..? Tamil Nadu politics and astrology!
                                                        மகாதேவன்


அவர்களில் ஒரு ஜோதிடர் மட்டும் ‘இந்தத் தேர்தலின் மூலம் அதிமுகவால் ஆட்சியமைக்க முடியாது. 60-லிருந்து 65 சீட்கள்தான் கிடைக்கும். நீங்கள் முதலமைச்சராக முடியாது..’ என்று குரலில் அழுத்தம் தந்து பேச, அந்த நொடியே ‘கெட்-அவுட்’ என்று ஜெயலலிதா சீற, போயஸ் கார்டனே அதிர்ந்தது.  மகாதேவனால் அழைத்துவரப்பட்ட அந்த ஜோதிடர் உடனே வெளியேறினார். 

 

யார் அந்த ஜோதிடர்..?

 

தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதா ‘என்னென்ன’ செய்தார்? - தமிழ்நாட்டு அரசியலும் ஜோதிடமும்! #2  

 

 

 

 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.