Skip to main content

“சாதி மதம் பெண்களை அடிமைப்படுத்தவே... ஆண்களுக்கு விழிப்புணர்வு தேவை” - வனிதா ஐபிஎஸ்

Published on 08/03/2023 | Edited on 08/03/2023

 

 Vanitha IPS  Interview

 

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. புரட்சியாளர்கள் மூலம் எவ்வளவோ விழிப்புணர்வு வந்துவிட்டது. ஆனாலும் சமுதாயத்தில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் இன்னும் அப்படியே தான் இருக்கின்றன. பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள், ஆண்களுக்கு ஏற்பட வேண்டிய விழிப்புணர்வு குறித்து நம்மோடு கூடுதல் காவல்துறை இயக்குநர் வனிதா ஐபிஎஸ் உரையாடுகிறார்.

 

என்னுடைய சொந்த ஊர் ராமநாதபுரம். வளர்ந்த ஊர் மதுரை. இரண்டும் வீரத்திற்குப் பெயர்போன ஊர்கள் தான். ஆனால், வீரம் என்றாலே அது ஆண்களோடுதான் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகிறது. மனதில் அதீத தைரியத்தோடு செயல்படும் பெண்கள் ஒரு காலத்தில் ஆண்களின் வெற்றிக்குப் பின்னால் இருந்தார்கள். இப்போது அவர்களே வெளியே வந்து சாதிக்கிறார்கள். மகாகவி பாரதியாரும், தந்தை பெரியாரும் தான் எனக்கு பெரிய ரோல்மாடல்கள். திருமணம் பல நேரங்களில் பெண்கள் சாதிப்பதற்கு இடையூறாக இருக்கிறது. திருமணம் குறித்த என்னுடைய புரிதலை முற்றிலும் மாற்றியது தந்தை பெரியார் தான்.

 

பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் இயங்குகின்றனர். திருமணமான பிறகு ஆண், பெண் இருவரும் வேலைக்குச் செல்லும் நிலை வரும்போது குடும்பத்தை நிர்வகிப்பதற்காக பெண்கள் தான் தங்களுடைய வேலையை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. குடும்பத்தையும் வேலையையும் ஒன்றாக நிர்வகிக்க முடியும் என்கிற நம்பிக்கை பலருக்கு இல்லை. பெண்களுக்கான சிறை மனதில் தான் இருக்கிறது. சதி, குழந்தைத் திருமணம் போன்றவற்றிலிருந்து விடுபடுவதற்குப் பெரிய போராட்டங்கள் தேவைப்பட்டன. அப்போதுதான் அவர்களுக்கு 'விடுதலை' தேவைப்பட்டது.

 

ஒரு பெண் ஏன் தன்னுடைய சுதந்திரத்தை ஆணிடமிருந்து வாங்க வேண்டும்? ஆண்கள் செய்யும் தவறுகளை நாங்களும் செய்ய வேண்டும் என்பதுதான் தற்போது பெண் சுதந்திரமாகக் கருதப்படுகிறது. மேலைநாட்டு உடைகள் அணிவதிலும் பெண் சுதந்திரம் இருப்பதாக நினைக்கிறார்கள். ஒரு காலத்தில் இன்ஜினியரிங் ஆண்களுக்கான துறையாகத் தான் இருந்தது. மருத்துவப் படிப்பும் அப்படித்தான் இருந்தது. இப்போது நிலைமை மாறி வருகிறது. தங்களுடைய பலத்தை மேலும் அதிகரித்து அதன் மூலம் பெண்கள் வளர வேண்டும்.

 

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெண் குழந்தைகளின் பிறப்பு வீதம், கல்வி கற்பது, வேலைக்குச் செல்வது என அனைத்தும் அதிகம். நம்முடைய அரசாங்கங்கள் தொடர்ந்து சமூகநீதியைத் தூக்கிப் பிடிப்பவையாக உள்ளன. அனைத்து இடங்களிலும் தற்போது பெண்கள் இருக்கின்றனர். அவர்களின் மனத்தடை நீங்கியுள்ளது. பெரியார் சொன்ன பல கருத்துக்கள் அப்போது ஏற்கப்படவில்லை. அதனுடைய மகத்துவம் இப்போது புரிகிறது. தமிழ்நாட்டில் இருந்தது போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் வேறு எங்குமே இல்லை.

 

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து நான் வந்திருக்கிறேன். யாருக்கும் நான் அடிமை இல்லை என்கிற எண்ணம் எனக்கு வந்தது பெரியாரால் தான். பெரியார் எதையும் யார் மீதும் திணித்ததில்லை. திருமணம் என்பதே ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான இலக்கு அல்ல என்று உணர்த்தியவர் பெரியார். கற்பு என்கிற விஷயத்தை வைத்து தான் பெண்களை அடிமைப்படுத்தினர். கலப்புத் திருமணத்தை ஆதரித்தவர் பெரியார். அவர் கூறிய பல விஷயங்கள் ஆண்களை விட, ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு அதிகம் புரியும்.

 

அவரைப் போலவே அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரும் பல்வேறு காலங்களில் பெண்களுக்கு உந்துசக்தியாக இருந்திருக்கின்றனர். ஆண்கள் செய்யும் அனைத்தையும் இந்த சமூகம் எளிதாகக் கடந்து செல்லும். ஆண்கள் போலவே ஒரு பெண்ணும் சகஜமாக அனைவரோடும் பேசினால் அவளை ரவுடி என்று சொல்வார்கள். பெண்களை மீண்டும் மீண்டும் அடிமைப்படுத்தவே இந்த சமூகம் விரும்புகிறது. மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் தொடர்ந்து ஒடுக்கப்படுவது பெண்கள்தான். நீயும் நானும் சமம் என்று சொன்னதால் தான் தந்தை பெரியார் ஆதிக்கவாதிகளால் அதிகமாக விமர்சிக்கப்படுகிறார்.

 

ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள் என்று பிரிப்பது தான் தவறு. மனிதரை மனிதராக மதிக்க அனைவருக்கும் கற்றுத் தர வேண்டும். ஆண், பெண் இருவரையும் சமமாக மதித்து வளர்க்க வேண்டும். சமையற்காரராக வேலை செய்பவர்கள் கூட வீட்டில் பெண்களைத் தான் சமைக்கச் சொல்வார்கள். ஆணாதிக்கத்தின் குறியீடு இது. உடல் மீதான உரிமை தங்களுக்கு இருக்கிறது என்று தெரியாமலேயே பல பெண்கள் வாழ்கின்றனர். எதையுமே அடுத்தவருக்காகத் தான் நாம் செய்கிறோம். ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை அனைத்து பெண்களும் உணர வேண்டும்.

 


 

Next Story

ரூ. 4.8 கோடி பறிமுதல்; பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

முன்னதாக கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சுதாகருக்கு நெருக்கமானவர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் பயன்படுத்த இருந்ததாக பறக்கும்படை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சுதாகர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மாதநாயகனள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ராஜேஷ் தாஸ் குற்றவாளி! சரணா? கைதா? - இறுதிக்கட்டத்தில் பாலியல் வழக்கு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police are serious to arrest the accused Rajesh Das

கடந்த அதிமுக ஆட்சியில் சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஷ் தாஸ். அவர், அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் டெல்டா மாவட்ட சுற்றுப்பயணத்தை கவனித்துக் கொண்டார். அப்போதைய முதல்வருடன் டெல்டா மாவட்டத்துக்கு பாதுகாப்பு பணியை மேற்கொள்ள ராஜேஷ் தாஸ் உடன் சென்றிருந்தார். அப்போது, மரியாதை நிமித்தமாக டெல்டா மாவட்டத்தில் பணியாற்றிய பெண் எஸ்.பி ஒருவர் ராஜேஷ் தாஸை சந்தித்துள்ளார். ஆனால், அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ராஜேஷ் தாஸ் காரில் வைத்து பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதைச் சற்றும் எதிர்பாராத அந்த பெண் எஸ்பி புகார் அளிக்க சென்னை சென்றார். அப்போது, வழியில் மறித்த அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி கண்ணன் ராஜேஷ் தாஸுக்கு ஆதரவாக சமாதானம் பேசி பெண் எஸ்பியிடம் கட்டப் பஞ்சாயத்து செய்துள்ளார். இப்படி, பல மிரட்டலையும் மீறி பாலியல் தொல்லைக்கு ஆட்பட்ட பெண் எஸ்பி, அப்போதைய டிஜிபி திரிபாதியைச் சந்தித்து தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து துணிச்சலுடன் புகார் அளித்தார். இதையடுத்து, ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் ராஜேஷ் தாஸுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதில், பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியை தடுத்து புகார் அளிக்க இடையூறு செய்த அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி கண்ணனுக்கு 500 ரூபாய் மட்டும் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றமும் ராஜேஷ் தாஸுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்தது. ஆனால், ராஜேஷ் தாஸ் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும், சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், காவல்துறையினர் குடிமக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், ராஜேஷ் தாஸ் காவல்துறையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறார். இதன் காரணமாக, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதனால், ராஜேஷ் தாஸ் சிறை செல்வது உறுதியானது. இதையடுத்து, வழக்கை விசாரணை செய்து வந்த சிபிசிஐடி போலீஸார் பாலியல் குற்றவாளி ராஜேஷ் தாஸை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, தண்டனை தீர்ப்பு உறுதியான பிறகு ராஜேஷ் தாஸ் வடமாநிலங்களில் தலைமறைவாக இருந்ததாக சொல்லப்பட்டது. அவரை பிடிக்க போலீசார் அங்கு விரைந்தனர். ஆனால், அதற்குள் ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அவரைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது தண்டனை உறுதியானதால் ராஜேஷ் தாஸ் எங்கு இருக்கிறார் என்று தனிப்படை போலீஸார் விசாரணை செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் சரண் அடையலாம் என்றும், அப்படி இல்லை என்றால் உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, ராஜேஷ் தாஸ் வழக்கு குறித்து சட்ட நிபுணர்களுடனும், காவல்துறை உயரதிகாரிகளுடனும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, போலீசாரின் தேடுதல் வேட்டை தீவிரமடைந்திருப்பதால் ராஜேஷ் தாஸ் தலைமறைவாக இருந்தாலும், கைது செய்யப்படுவார் என சிபிசிஐடி காவல் துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.