Skip to main content

அ.தி.மு.க. எம்.பி.க்களின் செயல்பாடு பா.ஜ.க. அரசுக்கு சாதமாக இருக்கிறது: பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணு பேட்டி

Published on 22/03/2018 | Edited on 22/03/2018



 

farmers-suicide



மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி,  2016-ம் ஆண்டு தமிழகத்தில் 381 விவசாயிகள் தற்கொலை செய்து இருப்பது குறித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடிய உள்ளது குறித்தும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோரை தொடர்பு கொண்டு பேசினோம்... 
 

அய்யாக்கண்ணு கூறுகையில், 
 

"விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருளுக்கு லாபகரமான விலை இல்லை, பயிரிட நிலத்தடி நீர் இல்லை, அரசு உரிய நீரை பெற்று தராததால் விவசாயி வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. கடனை தள்ளுபடி செய்யவில்லை. வங்கியில் நெருக்கடி தருகிறார்கள். ஆகையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆனால் தமிழக அரசோ குடும்பப் பிரச்சனையில் தற்கொலை என்று சொல்லுகிறது. மத்திய அரசு தமிழக விவசாயிகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறது என மத்திய அரசு நினைப்பதில்லை. தமிழகம் மிகவும் சீரழிந்து கிடக்கிறது.
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு சுப்ரீம் கோர்ட் சொல்லியிருக்கிறது. இதனை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம். யாரும் தொடரவில்லை என்றால், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம்" என்றார்.
 

 

ayyakkannu prpodiyan 351.jpg

 

பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், 
 

"தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கையை குறைத்து காட்டியிருக்கிறார்கள். தமிழக அரசும் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கைகளை குறைத்து காட்டும் முயற்சிகளை கவுரவுத்துக்காக மேற்கொள்கிறார்கள். உண்மையான பட்டியலை வெளியிட்டு தீர்வு காண முயற்சி எடுப்பதில்லை. எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதால் விவசாயிகள் வளமாக இருப்பதாக நினைக்க முடியாது.
 

தற்போது விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விலைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும். நீர் ஆதார பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும். மழைநீர் சேமிப்புத் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். விவசாயிகளுக்கான சந்தை வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும். இந்த அடிப்படையில்தான் விவசாயிகளை பாதுகாக்க முடியும்.
 

 

cauvery issue 450.jpg


 


தென் மாநிலங்களை சேர்ந்த அரசுகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு சென்றுள்ளனர். இதனால் தென் மாநிலங்கள் ஒன்றிணைய ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக இந்தத் தீர்மானத்திற்கு தமிழக அரசு வலுவூட்டி மத்திய அரசை பணிய வைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடிய உள்ளதை மத்திய அரசுக்கு கண்டிப்போடு தமிழக அரசு சுட்டிக்காட்ட வேண்டும்.
 

அதிமுக பாராளுமன்றத்தை முடக்குவதை பாஜக அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறது. தெலுங்கானா எம்பிக்கள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழியக்கூட அதிமுக எம்பிக்கள் அனுமதிக்கவில்லை. அனுமதிக்காமல் தொடர் போராட்டத்தில் அதிமுக எம்பிக்கள் ஈடுபடுவதால் பாஜகவுக்கு இது சாதகமாக இருக்கிறது. தீர்மானத்தை முன்மொழிந்தால் தென் மாநிலங்கள் ஒன்றுபட வாய்ப்பு உள்ளது. மத்திய பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்படும். அப்போது தமிழகம் பக்கம் அவர்கள் திரும்பி நமது கோரிக்கைக்கு செவி சாய்க்க வாய்ப்பு உள்ளது."
 

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.