Skip to main content

தொடரும் மழை.. பரவுமா டெங்கு? தடுக்கும் வழிகள் ?

Published on 04/11/2017 | Edited on 04/11/2017
தொடரும் மழை... பரவுமா டெங்கு?

டாக்டர் இந்திரா நெடுமாறன் சிறப்புப் பேட்டி



கடந்த சில நாட்களாக சென்னையிலும் தமிழ்நாட்டின் இன்னும் சில  மாவட்டங்களிலும்  தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் பரவி வந்தது.  இப்பொழுது மழையும் தொடர்ந்து பெய்து வரும் நிலையில், இது டெங்கு பரவுவதை  அதிகரிக்குமா, வராமல் தடுக்க என்ன வழிமுறைகள் என்று மருத்துவர் இந்திரா நெடுமாறனிடம்  கேட்டோம்...     


தொடர்ந்து மழை பெய்து வருகிறது... ஏற்கனவே இருந்த  டெங்குக் காய்ச்சல் வாய்ப்பு  அதிகரிக்குமா?   

மழை காலத்துலதான் அதிகமா டெங்கு கொசு உற்பத்தி ஆகுது. மழை பெய்யும்போது  பிளாஸ்டிக் பொருட்கள்,  உடைஞ்ச பாட்டில்கள் அதுலலாம் தண்ணி தேங்குது, தேங்குறதெல்லாம்  அழுக்கு தண்ணி இல்ல, நல்ல மழைத்  தண்ணீர். அதனால டெங்கு கொசு  அதுல வளர வாய்ப்பு அதிகமா இருக்கு.  

டெங்குக்  கொசு எப்படி  உருவாகிறது? எப்படி கட்டுப்படுத்துவது?  

டெங்கு நோய், வைரஸ் தொற்றால் ஏற்படும் நோய். கொசுக்கடியால் பரவக்கூடிய ஒரு  நோய். இப்போ யானைக்கால் நோய் உருவாக்குற கொசு அழுக்கு தண்ணில வளரும்  கொசு.  ஆனா இந்த  ஏடிஸ் கொசு (டெங்கு நோயை உருவாக்க கூடிய) நல்ல தண்ணில வளருது. அந்த  காலத்துல பாத்தீங்கன்னா சிங்கப்பூர்ல டெங்கு அதிகமா இருந்துச்சு. ஏன்னா அங்க எல்லாரும்  தோட்டம் வச்சிருப்பாங்க, டேங்க்(tank) திறந்து வச்சிருக்காங்க, கொசு அதுல முட்டை போட்டு  அதுல இருந்து கொசு உற்பத்தி ஆகி டெங்கு காய்ச்சல் பரவிட்டிருந்தது,  அதனால அப்போ,  சிங்கப்பூர் அரசாங்கம் ரொம்ப ஸ்டிரிக்ட்டா ஆர்டர் போட்டாங்க. தினமும் வீட்டை  பார்வையிடுவது, பாத்திரத்துல யாரும் தண்ணி பிடிச்சு வைக்கக்கூடாது, டேங்க்(tank) மூடி  இருக்கணும், செடி வச்சுருக்கவுங்க அதுல தண்ணி தேங்காம பாத்துக்கணும். இந்த மாதிரியான  முயற்சிகள் எடுத்து கிட்டத்தட்ட 20 வருஷமா கஷ்டப்பட்டு அவுங்க டெங்குவ ஒழிச்சாங்க. நம்ம  ஊர்ல பாத்திங்கன்னா 2000க்கு அப்பறம்தான் நமக்கு டெங்குவ பத்தின அறிகுறிகள் தெரிய  ஆரம்புச்சுச்சு. அப்போதான் அது பரவவும்  ஆரம்பிச்ச காலகட்டம், அப்போ நமக்கு அது என்னனு  தெரியாது. அத கண்டுபிடிக்கவும் முடியல. பொதுவா அந்த காலத்துல நம்ம ஊர்ல அழுக்கு  தண்ணி கொசுக்கள்தான் அதிகமா இருந்துச்சு. அதனால மலேரியா அதுமாரி நோய்கள் வந்துச்சு, ஆனா இப்போ எல்லார் வீட்டுலயும்  டேங்க்(tank) இருக்கு, தண்ணி சப்ளை இருக்கு, ஆனா  எல்லாரும் அத சுத்தமா வச்சுருக்காங்களானு தெரியல. அதுதான் முதல் காரணமா இருக்கு.  






டெங்கு காய்ச்சல் வருவதற்கான அறிகுறிகள் என்ன? 

டெங்குக்  காய்ச்சல் எல்லாருக்கும் ஒரே மாதிரியான பாதிப்புகளை உருவாக்குறது  இல்ல, பொதுவா அதுக்கான அறிகுறிகள்னு பாத்தோம்னா, அதிகமான காய்ச்சல் 103, 104 டிகிரி  இருக்குறது, அடுத்து கண்வலி இருக்கலாம், உடம்புவலி இருக்கலாம், எலும்பு மஜ்ஜைகள்ல வலி  இருக்கலாம், எலும்பு மஜ்ஜைலதான் இரத்தம் உற்பத்தியாகும். இந்த எலும்பு மஜ்ஜை  முதுகுத்தண்டு, இடுப்பு, நெஞ்சுகூட்டுக்கு முன்னாடி இருக்குற எலும்புல இருக்கும். அதனால,  இந்த டெங்கு வைரஸ் அங்கெல்லாம் போயி தொந்தரவு கொடுக்குறதால எலும்பு தெறிக்குற  அளவுக்கு வலி இருக்கும்.  அதை,  பிரேக் போன் ஃபீவர்னு  சொல்லுவாங்க. அந்த வலிய  அனுபவிச்சவுங்களுக்கு மட்டும்தான் தெரியும். அவுங்க சொல்றத நம்மளால நம்ப முடியாது. அந்த அளவுக்கு வலி இருக்குமானு தோனும். அடுத்து 'தேர்ட் ஸ்பேஸ்'ல தண்ணி நிக்கிறது. அதாவது  நுரையீரல் சுருங்கி, விரியும்போது உரசாம இருக்க ஒரு ஸ்பேஸ் இருக்கும். அதுல தண்ணி  நிக்கலாம். அதேமாரி இதயத்தை சுத்தி இருக்குற இடத்துல தண்ணி நிக்கலாம். வயித்துல  தண்ணி கலெக்ட் ஆகலாம். அசைட்டிஸ் வரலாம், அதுதவிர கணையப்பை, பித்தபைக்கிட்ட  தண்ணி கோர்த்திருக்குறது, வலி அந்த மாதிரி இருக்கலாம். அடுத்தது  வாந்தி, சிலருக்கு லேசான வயிறுவலி இருக்கலாம்.  

டெங்குவைத்  தடுப்பதற்கு என்ன வழி?  

அத எப்படி சமாளிக்குறதுனா, வருமுன் காப்பதே சிறந்தது. அது எப்படினா இத அரசாங்கம்  மட்டுமே பண்ண முடியாது. ஒரு நாடு இல்ல ஊரு ஊரு நல்லா இருக்கணும்னா அதுக்கு தனிமனித  ஒழுக்கம்தான் அவசியம். ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை சுத்தி, தன்  குடும்பத்தை சுத்தி, தன் வீட்டை சுத்தி சுத்தமா வச்சுக்கிட்டாலே 90 சதவீத டெங்கு பாதிப்பை  சரிசெய்யலாம். அடுத்தது அரசாங்கத்ததோட வேலை என்னனா, அதற்கான விழிப்புணர்வை  ஏற்படுத்துறது. விழிப்புணர்வை எப்படி ஏற்படுத்தலாம்னா வீடுகள்ல போயி டெய்லி  இன்ஸ்பெக்ஷன் பண்றது,  ஜனங்களுக்கு சொல்லிகுடுக்குறது. அதாவது டெங்கு காய்ச்சல் வந்தா  மட்டும் போய் பேசக்கூடாது, இப்போ செப்டம்பர்ல டெங்கு பாதிப்பு அதிகமா இருக்கும்னா, மே,  ஜூன்லயே அதுக்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆரம்பிச்சோம்னா அத ஓரளவுக்கு  கட்டுப்படுத்த முடியும்.  







டெங்கு காய்ச்சல்  மூலமாக  மரணங்கள் நிகழ்கின்றதே ? 
 
                       டெங்கு காய்ச்சல் வந்து எல்லாருக்கும்  உயிருக்கு ஆபத்தாவது  கிடையாது. அதுலயே  இரண்டு, மூனு வகையான வைரஸ் இருக்கு. அதனால ஒவ்வொருத்தவுங்களுக்கும் ஒவ்வொரு  விதமான பாதிப்புகள் இருக்கும். எல்லாருக்கும் ஒரே மாதிரியான பாதிப்புகள் வருவது  கிடையாது. டெங்குல இப்போ நிறைய இறப்புகள் நடக்குது, அதுக்கு நீர்ச்சத்து  குறைபாடுகள்தான் காரணம். நீர்ச்சத்து குறையும்போது கிட்னி,கணையம் ஆகியவற்றில்  பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கு. அத தடுக்குறதுக்கு என்ன பண்ணலாம்னா யாருக்கு  காய்ச்சல்  இருக்கோ அவுங்களோட நீர்ச்சத்து குறையாம பாத்துக்கணும்.  இளநீர், எலுமிச்சை  ஜூஸ், சாப்பாட்டுக்  கஞ்சி கொடுக்கலாம். அதுலயும் சாப்பாட்டுக்  கஞ்சிக்கு ஈடான ஒரு உணவு  இல்லவே இல்ல. காரணம் என்னன்னா, அதுல கார்போஹைட்ரேட்சும் இருக்கும், எல்லா  விட்டமின்ஸும் இருக்கும். இது தவிர சூப் குடிக்கலாம்.  காய்ச்சல் இருக்குறவங்க ஒரு நாளைக்கு    நாலுல இருந்து அஞ்சு லிட்டர் வரைக்கும் திரவ உணவ எடுத்துக்கிட்டாலே மோசமான  நிலையிலிருந்து தப்பிக்கலாம். காய்ச்சல் ரெண்டு நாளைக்கு மேல போகும்போது மருத்துவர  பார்த்து அதற்கான பரிசோதனையை மேற்கொள்ளனும். குறிப்பா இரத்தத்துல இருக்க இரத்த  தட்டணுக்கள்  அளவ பாப்பாங்க. இந்த இரத்த தட்டுகள்தான் அடிபடும்போது இரத்தம் அதிகம்  போகாமா தடுக்கும். டெங்கு வைரஸ் இதைத்தான் பாதிக்கும். நூத்துல ஒருத்தர்,  ரெண்டுபேரத்தான் இது பாதிக்கும், மீதி 98, 99  பேருக்கு பாதிக்க வாய்ப்பில்ல. காய்ச்சல் ரெண்டு  நாளைக்கு மேல இருந்தா நாம பரிசோதனை செய்யணும். இது எல்லா அரசு மற்றும் தனியார்  மருத்துவமனைகளிலும் பண்ணுறாங்க.
 
டெங்கு காய்ச்சலை குணப்படுத்த நிலவேம்பு குடிநீர் மட்டும் போதுமா?

நிலவேம்புக் குடிநீர் டெங்குக் காய்ச்சலின்  ஆரம்ப கட்டத்தில் பயனுள்ளதாக  இருக்கும். ஆனால், இரண்டு மூன்று நாட்களாகி,  நீர்சத்து குறைபாடு, வாந்தி வரும்போது அதைக்  கொடுத்து  குணப்படுத்த முடியாது. மருத்துவமனைல உள்நோயாளியா அனுமதிச்சு, பாக்க  வேண்டிய சூழ்நிலை இருக்கும். அந்த நிலை வந்ததுக்கு அப்புறமும்  நிலவேம்புக்  கசாயம்  கொடுத்துட்டு குணமாகிரும்னு காத்துட்டு இருக்கக்கூடாது.    






டெங்குவால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்களே?

டெங்கு அனைவருக்கும் வரக்கூடிய நோயென்றாலும், குழந்தைகள் அதிகமாகவும்  எளிதாகவும்  பாதிக்கப்படக் காரணம், நோயெதிர்ப்பு சக்தி மற்றும் நீர்ச்சத்துள்ள உணவுகளை  எடுக்கத் தவறுவது தான். அதிகமா நீர்ச்சத்து உள்ள உணவு சாப்பிடணும். குழந்தைகள்  தேவையான அளவு சாப்பிட மாட்டார்கள். கர்ப்பிணிகளுக்கு டெங்கு வந்தாலும் ரொம்ப ஆபத்து  தான். பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி சற்று குறைவா இருக்கும். அதனால்  டெங்குவின் பாதிப்பு இன்னும் வேகமாக இருக்கும். டெலிவரி நேரத்தில் ரத்தப்போக்கை மிக  அதிகமாக்கிவிடும், தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்து.  அதனால் மிகுந்த  முன்னெச்சிரிக்கையுடன் இருக்க வேண்டும். காய்ச்சல் லேசாக இருக்கும்போதே மருத்துவரை  சந்திச்சு சிகிச்சையைத் தொடங்கவேண்டும். 

சந்திப்பு : மனோ சௌந்தர் 
      

சார்ந்த செய்திகள்