Skip to main content

டீ வியாபாரம் டூ ரபேல் விமான வியாபாரம்?

Published on 09/02/2019 | Edited on 09/02/2019

 

modi

 

மோடியைப் பற்றி பேசும் அவருடைய கட்சிக்காரர்கள் அவர் சிறுவயதில் ரயில் நிலையத்தில் டீ விற்றதை பெருமையாக கூறுவார்கள். மோடியும்கூட இதை அவ்வப்போது கூறிக்கொள்வது உண்டு.

 

தன்னை ஒரு ஏழைத்தாயின் மகனாக காட்டிக்கொண்டு அனுதாபம் பெற விரும்பும் மோடி, குஜராத்தில் கலவரத்தை ஏற்படுத்தி அங்கு நடத்திய படுகொலைகளைப் பற்றி பேசமாட்டார். தனக்கு மனைவி இருந்ததையே மறைத்த அவர், பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் சமயத்தில் உண்மை வெளியானதால் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டார்.

 

சமீப நாட்களாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மோடி ஒரு திருடர் என்று பகிரங்கமாக கூறிவருகிறார். அடிக்கடி இந்த வார்த்தையை மோடியை நோக்கி கூறினாலும் அதற்கு நேரடியாக மறுப்புத் தெரிவிக்க மோடி தயாராக இல்லை. 5 நிமிடம் தன்னுடன் விவாதிக்க தயாரா என்றுகூட ராகுல் கேட்டுவிட்டார். விவாதிப்பதைத் தவிர வேறு எல்லா வகையிலும் கத்திப் பேசுகிறார் மோடி.

 

modi

 

நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கும் மறுக்கிறார். ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி 30 ஆயிரம் கோடி மக்கள் பணத்தை அள்ளி அனில் அம்பானிக்கு வாரிக்கொடுத்துவிட்டார். அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகலை இழுத்து மூட மோடி திட்டமிட்டிருக்கிறார். அம்பானி புதிதாக தொடங்கப்போகிற விமான உதிரிபாக உற்பத்தி நிறுவனத்திற்கு மக்கள் பணம் 30 ஆயிரம் கோடி ரூபாயை அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார் மோடி என்றெல்லாம் ராகுல்காந்தி குற்றம்சாட்டுகிறார்.

 

ராணுவ அமைச்சகத்தை புறக்கணித்துவிட்டு, பிரதமர் அலுவலகமே ரபேல் விமான பேரத்தில் நேரடியாக தலையிட்டிருக்கிறது. பிரான்ஸ் அரசாங்கத்துடன் மோடியே நேரடியாக பேச்சு நடத்தி, யாருக்காக இந்த ஒப்பந்தத்தை ரகசியமாக முடித்துக் கொடுத்தார். முன்னாள் ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் இந்த விவகாரத்தில் எதிர்ப்புத் தெரிவித்தும் அவரை மீறி பிரதமர் அலுவலகம் இந்த பேரத்தை முடித்தது எப்படி என்றெல்லாம் வினாக்கள் எழுப்பினார். இப்போது அதற்கான ஆதாரங்களை தி ஹிண்டு ஆங்கில நாளிதழில் மூத்த பத்திரிகையாளர் என்.ராம் வெளியிட்டு வருகிறார்.

 

இவற்றைப்பற்றி நாடாளுமன்றத்தில் எழுப்பினால் முடிந்த பிரச்சனையை திரும்பத்திரும்ப கிளறுவதாக நிர்மலா சீதாராமன் கூறுகிறார். ஒரு பிரச்சனை முடிந்துவிட்டது என்று எப்படி அவர் கூறுகிறார் என்பதே தெரியவில்லை. ஒருவர் செத்துப் போய்விட்டார் என்று புதைத்துவிட்டாலும், அவருடைய சாவில் சந்தேகம் எழுப்பினால் பிணத்தை தோண்டி விசாரணை நடத்துவதில்லையா? அப்படி இருக்கும்போது, அடுத்தடுத்து ஆதாரங்களும் சந்தேகங்களும் எழும்போது, அதுவும் பிரதமர் மீதே நேரடியாக புகார்கள் எழும்போது விளக்கம் அளிப்பதுதானே சரியாக இருக்கும்? அதைவிடுத்து, பிரச்சனை முடிந்துவிட்டது என்று அமைச்சரே கூறினால் எப்படி சரியாகும்?

 

modi


 

நிர்மலா சீதாராமன் சொல்வதைப் போல ரபேல் விவகாரம் செத்த பாம்பு அல்ல… அது படமெடுத்து சீறும் பாம்பு. அந்த பாம்பு பிரதமரை விடாமல் துரத்துகிறது. அவரும் நிர்மலா, ஜெட்லி போன்றோர் பின்னால் ஒளிந்து தப்ப முயற்சிக்கிறார். இது எங்கே கொண்டுபோய் முடியும் என்பதை நாடு வேடிக்கை பார்க்கிறது.

 

இதனிடையே, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பெருகிவரும் ஆதரவு, மோடியை திணறடிக்கிறது. தனது முதலாளிகளுக்கு சாதகமாக ரபேல் விமான பேரத்தை முடித்து, ஊழல் செய்திருக்கிறார் மோடி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடுமையாக குற்றம்சாட்டியிருக்கிறார்.

 

சுதந்திர இந்தியாவின் எந்த பிரதமரும் இதுவரை மோடியைப் போல நேரடியாக ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டதில்லை. பிரதமரே தனது முதலாளிக்காக பேரம்பேசியதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பது இதுதான் முதல்முறை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.

 

எல்லாவற்றுக்கும் மேலாக, இதுவரை தன்னை சாயா விற்பவராக கூறிவந்த மோடி, இப்போது ரபேல் விமான வியாபாரம் செய்பவராக மாறியிருக்கிறார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி கிண்டல் செய்திருக்கிறார்.

 

 

 

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.