Skip to main content

ஈஷாவுக்குச் சென்ற அமைச்சர் வேலுமணி... ரகசியமாக நுழைந்த அமரர் ஊர்தி... பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம்!

Published on 13/04/2020 | Edited on 13/04/2020


ஜக்கிவாசுதேவின் கோவை ஈஷா மையத்திற்குள் கடந்த 9ஆம் தேதி ஒரு ஆம்புலன்ஸும், ஒரு அமரர் ஊர்தியும் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது சமூக வலைத்தளங்களில் பரபரப்பான செய்தியானது.

ஈஷா மையத்தில் 150 வெளி நாட்டினர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு கரோனா நோயாளிகளுக்கான தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் எட்டு பழங்குடியினர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மடக்காடு வெள்ளியாச்சி, மாடசாமி, மாடன் உள்பட எட்டு பேர் கடந்த மாதம் ஈஷா யோகா மையத்திற்குச் சென்றவர்கள் திருப்பி அனுப்பப்படவில்லை. இவர்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் மரணம் அடைந்துவிட்டார். அதனால்தான் 108 ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தியும் ஈஷா யோகா மையத்திற்குச் செல்கிறது என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பப்பட்டன.
 

 

 

isha



அதேநேரத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, ஈஷா யோகா மையத்திற்குச் சென்றுள்ளார். இது மேலும் பரபரப்பை உண்டாக்கிவிட்டது. அமைச்சரே நேரில் வருகிறார் என்றால் ஏதோ ஒன்று நடக்கிறது. பொள்ளாச்சி பாலியல் கொடூர விவகாரத்தையே மறைப்பதற்கு ஆளுந்தரப்பு பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டதை கோவை மாவட்ட மக்கள் மனதில் அசைபோட்டதால், மறுபடியும் சமூக வலைத்தளங்கள் பரபரப்பாயின..

உண்மை நிலவரம் குறித்து விசாரித்தோம். ஈஷா அமைந்துள்ள போலுவான்பட்டி காட்டுப் பகுதியில் அமைந்துள்ள நாசேகவுண்டன்புதூர் கிராமத்தில் ஒரு விவசாயி இறந்துவிட்டார். அவரை மத்தூ ராயபுரம் சுடுகாட்டில் இறுதி சடங்குகள் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. மத்தூ ராயபுரம் சுடுகாடு, ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ளது. அந்தச் சுடுகாட்டை ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து புதுப்பித்த அரசு, கடந்த வருடம் ஈஷா யோகா மையத்திடம் ஒப்படைத்து விட்டது. தற்போது ஈஷா யோகா மையத்திடம் அனுமதி பெற்றால்தான் யாரையும் அங்கு புதைக்கவோ, எரிக்கவோ முடியும். அதனால் நாசே கவுண்டன் புதூரில் இறந்த விவசாயிக்காக கொண்டுவரப்பட்ட ஆம்புலன்சும், அமரர் ஊர்தியும் ஈஷா யோகா மையத்திற்குள் சென்றது. ஈஷா யோகா மையத்திற்குப் பக்கத்தில் உள்ள பழங்குடி கிராமத்திற்கு அமைச்சர் வேலுமணி வந்து சென்றார் என அரசு தரப்பு விளக்கம் அளித்தது.

 

admk


 

http://onelink.to/nknapp



அதன்பிறகும், சமூக வலைத்தள பரபரப்பு அடங்கவில்லை. ஈஷா மையத்தில் ஒரு வெளிநாட்டுக்காரர் மர்ம மரணம் அடைந்தார். அதனால் பிரச்சனை ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாது என அமைச்சரும், ஈஷா மையம் அமைந்துள்ள தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ.வுமான வேலுமணி வந்தார் எனச் செய்திகள் பரவியது.

இதற்கு ஈஷா தரப்பிலிருந்தோ ஜக்கி வாசுதேவிடமிருந்தோ எந்தப் பதிலும் வரவில்லை. கரோனா நோய் பற்றியும், அதில் ஈஷாவைச் சேர்ந்த வெளிநாட்டினர்கள் பாதிக்கப்பட்டிருப்பது பற்றியும் அங்கே மலைக்கிராம வாசிகள் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைப் பற்றியும் செய்திகள் வந்த பிறகு, ஈஷா அதற்கு வெள்ளி மாலை வரை ரியாக்ட் செய்யவில்லை. ஜக்கியும் தனது அறையில் இருந்து இதுவரை வெளியே வரவில்லை.

மத்தியப் பிரதேசத்தில் சுகாதாரத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கரோனா நோயால் பாதிக்கப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் ஒரு ஆடம்பர பங்களாவில் வைத்து சிகிச்சை அளித்தார்கள். அதுபோல வி.ஐ.பி.க்களுக்கு கரோனா நோய் சிகிச்சை அளிக்கும் ஆடம்பர பங்களாவாக ஜக்கியின் ஆசிரமம் மாறிவிட்டது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

அதனால்தான் அங்கு வேலைக்குச் சென்ற பழங்குடியின மக்களையும் வெளியே அனுப்பவில்லை. துப்புரவு பணிகளுக்கும் உள்ளூர் பணிகளுக்கும் யாரையும் அழைப்பதில்லை. வட மாநில தொழிலாளர்கள் மட்டும் பணிகளைச் செய்கிறார்கள். அவர்களும் ஆசிரமத்தைவிட்டு வெளியே வருவதில்லை. இப்படி மிகவும் ரகசியமாக இயங்கும் ஈஷா யோகா மையம் கோவை மாவட்ட இணை சுகாதார அலுவலரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவிக்கிறார்.

இந்த நிலையில் ஒரு அமரர் ஊர்தியும், அமைச்சரும், ஆம்புலன்சும் ஈஷா யோகா மையத்திற்கு வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வுகளில் நடந்தது என்ன? என்பதை அரசும், ஈஷா யோகா மையமும் தெளிவுப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைக்கும் அந்தப் பகுதி மலைவாழ்மக்கள், தமிழ்நாடு கரோனா தொற்றில் மூன்றாம் நிலையை அடையக்கூடிய சூழலில் உள்ளது என முதல்வரே தெரிவிக்கும் நிலையில், கோவை ஈஷா மையம்- வேளச்சேரி ஃபீனிக்ஸ் மால்- வழிபாட்டுக்காக கூட்டம் கூடிய மசூதிகள் என பாரபட்சமின்றி அனைத்து இடங்களுக்கு வந்து சென்றவர்களுக்கும்- தொடர்ந்து அங்கு இருப்பவர்களுக்கும் பரிசோதனைகள் மேற்கொண்டு, தொற்று நோய் கூடமாக மாறிவிடாதபடி பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.


 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.