Skip to main content

அரசு டாக்டர்களுக்கு கெட்-அவுட்! தனியார் கல்லூரி டாக்டர்களுக்கு கட்-அவுட்! -பின்னணியில் வெடிக்கும் லஞ்ச ஊழல்!

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

அரசு மருத்துவமனைகளில் ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்த சீனியர் டாக்டர்களுக்கு பணியாணை வழங்காமல்… திடீரென்று தனியார்கல்லூரிகளிலிருந்து வந்த ஜூனியர் டாக்டர்களுக்கு அரசுமருத்துவக்கல்லூரிகளில் பணிவழங்கியிருப்பது மருத்துவ வட்டாரத்தில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதோடு பின்னணியில் லஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளும் வெடிக்கின்றன.
 

medical college



இதுகுறித்து, அரசு மருத்துவமனை சர்வீஸ் பி.ஜிக்கள் வெல்ஃபேர் அசோசியேஷன் டாக்டர்கள் நம்மிடம், “2013 ஆம் வருடம் அரசுக்கல்லூரிகளில் 2,000 பேர் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு எம்.ஆர்.பி. தேர்வில் தேர்ச்சிபெற்ற 667 இளநிலை டாக்டர்கள்  அரசு ஆரம்பசுகாதாரநிலையங்கள், அரசு வட்டார மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 2019 மே மாதம் மூன்று வருடப் படிப்பான எம்.டி., எம்.எஸ். முதுநிலைமருத்துவப்படிப்பிலும் தேர்ச்சிபெறும்வரை சுமார் 6 வருடங்களுக்கு மருத்துவசேவை செய்திருக்கிறோம்.  ஆனால்,  இதுவரை தமிழக அரசு சுகாதாரத்துறை பின்பற்றிவந்த நடைமுறையிலும் நீதிமன்றத்தீர்ப்பின்படியும் எங்களுக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பணிவழங்காமல் எந்தவித மருத்துவச்சேவையும் செய்யாமல் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் முதுநிலைமுடித்துவிட்டு வந்த எங்களைவிட சர்வீஸில் ஜூனியர்களான டாக்டர்களுக்கு பணியாணை வழங்கியிருப்பது நீதிமன்ற ஆணையை கேலிக்கூத்தாக்கியிருப்பதோடு அதிகார துஷ்பிரயோகம் மற்றும் லஞ்ச ஊழலின் உச்சக்கட்டத்தையும் வெளிப்படுத்துகிறது.

 

medical college


மருத்துவக்கல்வி இயக்குனர் எட்வின் ஜோவை சந்தித்து நாங்கள் பேசியபோது ‘இனிமேல் இப்படித்தான் நடக்கும்’ என்று மிரட்டும் தொனியில் பேசுகிறார். சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ்ஸை சந்தித்து முறையிட்டபோது, ‘நீங்கள்லாம் ரிசர்வேஷன் சலுகைமூலமா வந்தவங்க. ஆனா, அவங்கள்லாம் மெரிட்ல வந்தவங்க’ என்று அலட்சியமாக பேசி அனுப்பிவிட்டார். அவரிடமிருந்து, இப்படியொரு பதிலை எதிர்பார்க்காமல் அதிர்ச்சியடைந்துவிட்டோம்” என்று குமுறுகிறவர்களிடம், இதில்… லஞ்ச ஊழல் அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளது என்று எப்படி கூறுகிறீர்கள்? என்று நாம் கேட்டபோது, “கடந்த வருடம் டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தபோது எந்தவிதமான இட ஒதுக்கீட்டையும் பின்பற்றாமல் வாக்-இன் இண்டர்வ்யூ மூலம் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் படித்த கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு சர்வீஸ் செய்யாத பி.ஜிக்களான சுமார் 500 க்குமேற்பட்ட டாக்டர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டார்கள்.

 

medical college



அதில், பெரும்பாலான டாக்டர்கள் பணம்- அரசியல் அதிகாரப்பின்னணி கொண்டவர்கள். இதில், மருத்துவக்கல்வி இயக்குனர் எட்வின் ஜோவின்  அக்கா மகன்  ஜேப்ரி நவீன் ராஜும் ஒருவர். மேலும், தனியார்க்கல்லூரிகளில் படித்த டாக்டர்களான பிரசன்னா, அருள் விஜயக்குமார், அஸ்வின், சுதாராணி, ரேணுகா உள்ளிட்ட பலர் டெங்கு வார்டுக்கு பதிலாக  ஜெனரல் சர்ஜரி, காது-மூக்கு-தொண்டை பிரிவு, இதயநலப்பிரிவு, சிறுநீரக சிகிச்சைப்பிரிவு, எலும்பு அறுவைசிகிச்சை பிரிவு என சென்னை எம்.எம்.சி., ஸ்டேன்லி உள்ளிட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்குத்தான், கடந்த ஜூன் -1 ந்தேதி கலந்தாய்வு நடந்திருக்கிறது. ஆனால், இவர்களைவிட அனுபவத்திலும் சேவையிலும் சீனியாரிட்டியிலும் முன்னணியில் இருக்கும் எங்களுக்கு இன்னும் கலந்தாய்வை நடத்தவில்லை”என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.

இதுகுறித்து, மருத்துவக்கல்வி இயக்குனர் எட்வின் ஜோவிடம் நாம் கேட்டபோது, “அரசு மருத்துவர்கள் கலந்தாய்வு குறித்து நீதிமன்ற இடைக்காலத் தடை இருப்பதால்தான் இன்னும் கலந்தாய்வு நடத்தவில்லை. தற்போது, குற்றஞ்சாட்டும் 667 மருத்துவர்களும் 2019 ஆம் வருடம்தான் அரசுக்கல்லூரிகளில் முதுநிலைப்படிப்பை முடித்திருக்கிறார்கள். ஆனால், கடந்த வருடம் வாக்-இன் இண்டர்வ்யூ மூலம் பணியமர்த்தப்பட்ட  டாக்டர்கள் 2018 ஆம் ஆண்டே முதுநிலைப் படிப்பை முடித்துவிட்டார்கள். அப்படியென்றால், ஆல்ரெடி பணியமர்த்தப்பட்டவர்கள்  சீனியர்கள்தானே தவிர ஜூனியர்கள் அல்ல. அதனால், சர்வீஸ் பி.ஜி மாணவர்களுக்கு டி.எம்.எஸ். கண்ட்ரோலிள்ள வட்டார மாவட்ட மருத்துவமனைகளில் பணி வழங்கப்படும் என்றால் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ஏற்கனவே, அரசு மருத்துவக்கல்லூரிகளில் பணியமர்த்தப்பட்டவர்களை மாற்றிவிட்டு இவர்களுக்கு மருத்துவக்கல்லூரிகளில் எப்படி பணி வழங்கமுடியும்?” என்று கேள்வி எழுப்புகிறார்.
 

 

medical college


இதுகுறித்து, நம்மிடம் பேசும் சர்வீஸ் பி.ஜி. டாக்டர்களோ, “நாங்கள் அரசுக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். முடித்து எம்.ஆர்.பி. தேர்விலும் தேர்ச்சிபெற்று அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்கள், அரசு வட்டார மாவட்ட மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டு அதற்கேற்றார்போல் ஒவ்வொரு வருட சேவைக்கேற்ப மதிப்பெண்களைப் பெற்று முதுகலைப்படிப்பை படித்தோம். இதனால், முதுகலைப்படிப்பு காலங்களையும் சேர்த்து 6 வருடங்களுக்குமேல் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவை செய்திருக்கிறோம். ஆனால், தனியார் மருத்துவக்கல்லூரிகளில் படித்துவிட்டு எந்தவித அரசு மருத்துவமனையிலும் ஏழை எளிய மக்களுக்கு சேவையும் செய்யாமல் முதுகலைப்படிப்பை முடித்துவிட்டு வந்தவர்களை மருத்துவக்கல்வி இயக்குனர் டிகிரி அடிப்படையில் எங்களைவிட அவர்களை சீனியர் என்கிறார்.

அரசுக்கல்லூரிகளில் இரண்டுவருடங்கள் சேவை செய்யாமல் முதுநிலைப்படிப்பில் சேரவே முடியாது என்பதால் நாங்கள் அப்போது முதுநிலை த் தேர்வை எழுதவில்லை. அப்படி, எழுதியிருந்தால் டிகிரி அடிப்படையிலும் நாங்கள்தான் சீனியர்கள். மேலும், நீதிமன்றமோ சர்வீஸ் அடிப்படையிலும் எம்.ஆர்.பி. தேர்வில் தேர்ச்சிபெற்றதாலும் எங்களுக்குத்தான் பணியில் முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்று தெளிவாக உத்தரவிட்டிருக்கிறது” என்கிறார்கள் தீர்ப்பை சுட்டிக்காட்டி ஆணித்தரமாக.

‘நீட்’ தேர்வுமூலம் ஏற்கனவே ஏழை எளிய மாணவர்கள் டாக்டராக முடியாத நிலையில்… அரசு மருத்துவர்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்காமல் பணம் படைத்த தனியார்க்கல்லூரி மாணவர்களுக்கே வேலைவாய்ப்பை வழங்குவதால் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்குத்தான் ஆபத்து.
 

 

 

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது