Skip to main content

வாழும்போது சிரிக்க வைத்தவர், இறந்தபின் திகைக்க வைத்தவர்

Published on 06/03/2018 | Edited on 07/03/2018

மார்ச் – 6  கலாபவன்மணி மறைந்தார்

திரைத்துறைக்கு வந்தபின்பு, அது வழங்கும் சொகுசு வாழ்க்கைக்கு மயங்கும் பலரும் தன் கடந்த கால, கடந்துவந்த பாதையை மறந்துவிடுவார்கள். ஆனால் தென்னிந்திய திரை நட்சத்திரமாக புகழ்பெற்றாலும் இறுதிவரை தன்னை வளர்த்த, தான் ஏற்றுக்கொண்ட இடதுசாரி இயக்கத்தின் உறுப்பினராகவே இருந்து அவர்களின் வெற்றிக்காக மேடையேறிக்கொண்டு இருந்தவர் தென்னிந்திய திரையுலகில் தன் நடிப்பால் புகழ்பெற்று விளங்கிய மிமிக்கிரி கலைஞர் கலாபவன்மணி.

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம், சுற்றுலாத்தலமான சாலக்குடியில் 4 சகோதரிகள், இரண்டு சகோதரர்களுக்கு அடுத்து 7வது மகவையாக ராமன் – அம்மிணி தம்பதியின் மகனாக 1971 ஜனவரி 1ந்தேதி பிறந்தவர் கலாபவன்மணி. சாலக்குடியில் உள்ள அரசு பள்ளியில் 4வது வரை படித்தார்.
 

kalabavan mani


மிமிக்கிரி கலைஞராக தான் தன் வாழ்வை இடதுசாரி மேடைகளில் தொடங்கினார் கலாபவன்மணி. அக்சரம் என்கிற மலையாளப்படத்தில் முதன்முதலாக ஆட்டோ ஓட்டுநராக திரையில் தோன்றினார். அதன்பின் சல்லாபம், வசந்தியும் – லக்ஷமியும் பின்பு நானும் என்கிற திரைப்படங்கள் இவருக்கு பெரிய ஏற்றத்தை மலையாள சினிமாவில் வழங்கின. அந்த படமே 1999ல் கேரள அரசின் விருதை கலாபவன்மணிக்கு வாங்கி தந்தது.

அதேபோல் இளமைப்பருவத்தில் 'நான்' என்கிற இசை ஆல்பத்தை வெளியிட்டார் கலாபவன்மணி. திரைப்படங்களில் நடிக்க தொடங்கியபின் பின்னணி பாடகராக அவரை அறிமுகம் செய்ய 20க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அதன்பின் இரண்டு நாட்டுப்புற பாடல்கள் அடங்கிய பாடல் தொகுப்பை எழுதி, பாடி ஆல்பமாக வெளியிட்டார் மணி.
 

kalabavan mani


2002ல் தமிழில் இயக்குநர் சரண் இயக்கத்தில் வெளிவந்த ஜெமினி திரைப்படத்தில் விக்ரம் நடிப்பை மறந்துவிடமுடியும். கலாபவண்மணி நடிப்பை மறந்துவிட முடியாது. மிமிக்கிரி செய்துக்கொண்டு நடமாடும் பெரும் வில்லன் கதாபாத்திரம் திறமையாக நடித்திருப்பார். அதற்கு முன்பு தமிழ்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்தாலும் இந்த படம்மே தமிழ் திரையுலகில் பெரிய வாய்ப்புகளை உருவாக்கி தந்தது கலாபவண்மணிக்கு.

திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருந்தாலும் இடதுசாரி மேடைகளில் தன் நாட்டுப்புற பாடல்களை தொடர்ச்சியாக பாடி மக்களை அரசியல்படுத்தும் பணியில் ஈடுப்பட்டு வந்தார். அதோடு, இடதுசாரிகளுக்காக தேர்தலில் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வந்தார். 2016ல் நடைபெற்ற கேரள சட்டமன்ற தேர்தலில் தான் சார்ந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டார். ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி தலைமை அவருக்கு தரமறுத்துவிட்டது.

1995ல் மலையாளத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய படங்களில் நடித்து 2016வரை கொடிநாட்டினார். மிக குறுகிய காலத்தில் நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்து சாதனை படைத்த இந்த மிமிக்கிரி கலைஞன் 2016 மார்ச் 6ந்தேதி உடல்நிலை சரியில்லாமல் மருத்துமனையில் சேர்க்கப்பட்டு பின் மறைந்தார்.

1999 செப்டம்பர் 22ந்தேதி நிம்மி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார் மணி. அவருக்கு பெரும் பலமாய் அவரது மனைவி இருந்தார். அவருக்கு ஒரு மகன் லஷ்மி. மருத்துவமனையில் கலாபவன்மணி இறந்ததும் அவரது குடும்பத்தார் அவரது இறப்பில் சந்தேகம் உள்ளது என புகார் தெரிவித்தனர். இதனால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதில் இறந்த கலாபவன்மணி உடலில் வித்தியாசமான விஷம் கலந்துயிருப்பதை கண்டறிந்து அறிக்கை வெளியிட்டனர். அது எப்படி அவரது உடலில் கலந்தது, குற்றவாளி யார் என்பது இன்னும் விடை தெரியாமலே உள்ளது. ஒரு திறமையான கலைஞனின் வாழ்க்கை முற்று பெற வைக்கப்பட்டது, வழக்கு முற்று பெறாமலே உள்ளது. மக்களின் மனதிலும் அவரின் குரல் அழியாமல் உள்ளது, அதுவே அந்த கலைஞனின் வெற்றி.