Skip to main content

பம்பரத் தாத்தா வர்றாருடோய்... - சிறுவர்களைக் கவர்ந்த வைகோ! - கடந்த காலத் தேர்தல் கதைகள் #3

Published on 08/04/2019 | Edited on 08/04/2019

வைகோ... இன்று வரை இந்திய நாடாளுமன்றம் கண்டுள்ள  முக்கியமான, சிறந்த உறுப்பினர்களில் ஒருவர். அவரது கூட்டணி மாற்றங்கள், கட்சி செயல்பாடுகளில் விமர்சனம் உள்ளவர்கள் கூட அவரது நாடாளுமன்ற செயல்பாடுகளை பாராட்டுவார்கள். அவர் கடைசியாக நாடாளுமன்றம் சென்று பதினைந்து ஆண்டுகளாகிவிட்டாலும் இன்றும் அவரது செயல்பாடுகள் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனதில் இடம் பெற்றிருக்கின்றன. இப்படிப்பட்ட பார்லியமென்டேரியனான வைகோ, இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. திமுக கூட்டணியில் மதிமுக ஈரோட்டில் மட்டுமே போட்டியிடுகிறது. மதிமுகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி உறுதியளித்துள்ளது திமுக. வைகோ மீண்டும் நாடாளுமன்றம் செல்லவேண்டும் என்பது மதிமுக தொண்டர்களையும் தாண்டிய பலரின் எதிர்பார்ப்பு. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார் வைகோ. தமிழகம் முழுவதும் சென்று கூட்டணிக்கட்சிகளுக்கும் பிரச்சாரம் செய்தார். 2014இல் அவரது பிரச்சாரம் எப்படி இருந்தது... கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

 

vaiko



ம.தி.மு.க. பொதுச் செயலாளரும் தேசிய ஜனநாயக கூட்டணியின் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான வைகோ, தானே நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்து வாக்கு கேட்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட சில கிராமங்களில் அப்போது அவர் பிரச்சாரம் செய்தபோது உடன் இருந்தோம். குண்டும் குழியுமான சாலைகளிலும் கூட அவரது பிரச்சார வேன் அசராமல் பயணித்தது. ‘ஏழைகளின் கட்சி’ என அவரே சொல்வது போல, அந்த வேனில் படுக்கை வசதியோ, டாய்லெட் வசதியோ எதுவும் இல்லை. இயற்கை உபாதைகளுக்கும் கூட, சாதாரண கிராமவாசி போல  முட்செடிகள் பக்கம்  அவர் ஒதுங்குகினார். 

 

vaiko



வைகோ செல்லும் ஒவ்வொரு பிரச்சார ஸ்பாட்டிலும் டிரம்ஸ் அடிக்கிறார்கள். 500 வாலா பட்டாசு வெடிக்கிறார்கள். ஊர்த்தலைவரோ, கூட்டணி கட்சி பொறுப்பாளரோ யாராவது ஓரிருவர் சால்வை அணிவிக்கிறார்கள். மற்றபடி, பெரிய அளவிலெல்லாம் ஆட்களைத் திரட்டவில்லை. "பம்பரத் தாத்தா வர்றாரு டோய்..'' என்று பள்ளிச் சிறுவர்கள் பாசமாக ஓடி வந்தார்கள். யதார்த்தமான சூழலில், மெல்லிய குரலில் வெகு இயல்பாகப் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார். கூட்டணி கட்சிகளின் பெயரைச் சொல்லும் போது, 'எனது அருமை சகோதரர் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தே.மு.தி.க. ஆதரவோடு..' என்பதை அழுத்திச் சொல்கிறார். பத்து பேரோ, இருபது பேரோ நிற்கும் இடங்களில் 1 நிமிடத்துக்கும் குறைவாக பேச்சு,  ஐம்பது பேருக்கும் மேல் கூடிவிட்டால், 2 நிமிடங்கள் பேச்சு, எண்ணிக்கை நூறைத் தாண்டிவிட்டால், 8 நிமிடங்கள் வரை பேசினார். 

எழுச்சியே இல்லாத கிராமங்களில்  “தமிழகத்தில் மோடி அலை வீசுகிறது; மோடி பிரதமர் ஆவது உறுதி" என்ற சென்ற தேர்தலின் வழக்கமான பிரச்சாரத்தை அவர் மேற்கொள்ளவில்லை. காங்கிரஸ் எதிர்ப்பையும்கூட தீவிரமாகக் காட்டாமல், "நான் அரசியல் கட்சிகளை இப்போது விமர்சிக்க விரும்பவில்லை.." என்று தவிர்த்துவிட்டார். வாக்களிக்கும் வயதினரைக் காட்டிலும் சிறுவர் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் "நான் குழந்தைகளை ரொம்ப பிரியமா நினைக்கிறவன்.. பம்பரம் பிள்ளைகள் விளையாடுறதுன்னு தேர்ந்தெடுத்தேன். இளம் பிள்ளைகள் இங்கே ரொம்பப் பேரு இருக்காங்க.. நீங்கதான் அப்பா, அம்மாகிட்ட சொல்லணும்..'' என்றார். எதிர்ப்படும் பெண்களிடம் "நான் தாய்மார்களை தெய்வமா நினைக்கிறவன்.. சாராயக் கடை, மதுக் கடைகளுக்கு எதிரா வெயில்லயும், மழையிலயும் 1500 கி.மீ. நடந்திருக்கேன்.. நீங்க டிவியில பார்த்திருப்பீங்க..'' என்று உணர்வுப்பூர்வமாகப் பேசினார். 

 

vaiko



அப்போது அங்கிருந்த நந்திரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவர் நம்மிடம், "விஜயகாந்தை பாருங்க.. முக்கியமான ஊருல மட்டும் பிரச்சாரம் பண்ணுறாரு.. எம்புட்டு கூட்டம் கூடுது.. டி.வி.ல பார்க்கிறோம்ல.. நறுக்குன்னு நாலு இடத்துல பேசிட்டு போறத விட்டுட்டு.. ஆளுங்க  இல்லாத நேரத்துல..  பட்டிக்காட்டுல வந்து பிரச்சாரம் பண்ணி.. உடம்பை கெடுத்துக்கிட்டு.. டயத்தை வேஸ்ட் பண்ணுறாரு..'' என்றார் வைகோ மீது உண்மையான அக்கறை உள்ளவராக. 

"ஓட்டு யாருக்கு?'’ என்ற நமது கேள்விக்கு மீனாட்சிபுரம் கருத்தம்மா "இவரு பம்பரத்துக்கு போடச் சொல்லுறாரு. இனிமேதான் யோசிக்கணும், யாருக்கு போடறதுன்னு?'' என்று இழுக்க.. அவரது பக்கத்து வீட்டுக்காரரான முத்து மாரியம்மாளோ "என் புள்ளைக்கு மஞ்சள் காமாலை ஊசி போட்டாரு வைகோ.. அவருக்குத்தான் என் ஓட்டு..'' என்றார்.   

சின்னமூப்பன்பட்டி என்ற ஊரில் அந்த இரவு நேரத்திலும் ஓரளவுக்கு மக்கள் கூடியிருந்தார்கள். ஆரத்தி எடுக்க பெண்கள் ஆர்வம் காட்டினார்கள். கூட்டத்தைப் பார்த்து குஷியாகி "இது மாதிரி எந்த ஊருலயும் நான் கூட்டத்தைப் பார்க்கல.. நான் வெளிப்படையா பேசுறவன்.. என்கிட்ட ஒளிவு மறைவு கிடையாது..  மனசுல நினைச்சதை சொல்லுறவன்..'' என்ற வைகோ, "என்னைப் பத்தி நானே சொல்லிக்கிறதா?'' என்று சங்கோஜப்பட்டவாறே சில விஷயங்களை மக்கள் முன் வைத்தார் - "உங்க மனசுல வைகோ ரொம்ப நல்லவன், நம்மள மாதிரி ஏழைபாழைகள் சொன்னா உடனே செய்வான்ங்கிற நம்பிக்கை இருக்கு.. வெளிநாட்டுல யாராச்சும் விபத்துல மாட்டிக்கிட்டா.. ஏய் வைகோ வுக்கு ஒரு போனைப் போடுங்கிறாங்க.. நான் எந்தப் பதவியிலும் இல்லை. ஆனா.. எப்படியாவது பிரதமர்ட்டயோ, யார்ட்டயோ சொல்லி, அவங்கள காப்பாற்ற முயற்சி பண்ணுறேன். உலகத்துல உள்ள எல்லா தமிழர் களும் நமக்கு ஒருத்தன் இருக் கான்னு நினைக்கிறாங்க இல்லியா?"  

அதற்கு முந்திய தேர்தல் தோல்வி ஆறாத ரணமாக உள்ளுக்குள் இருந்ததோ என்னவோ?  பிரச்சாரத்தின்போது தனது உள்ளக் குமுறலை அடிக்கடி வெளிப்படுத்தினார் வைகோ - "போன எலக்ஷன்ல நின்னேன்.. வீட்டுக்கு வீடு பணம் கொடுத்தாங்க. பணத்துக்காக ஓட்டு போட்டு போன தடவை என்னை தோற்கடிச்சீங்க. இந்த தேர்தல்ல அதைவிட அதிக பணம் கொடுக்கப் போறாங்க. உங்க ஓட்டை விலைக்கு வாங்கப் போறாங்க. ஒரு ஓட்டுக்கு ஆயிரம், ரெண்டாயிரம்னு கொடுக்கப் போறாங்க. பணம் வீடு வீடா வரப் போகுது. வந்திரும்.. அதை தடுக்க முடியாது. அதனால.. நீங்க நல்லா யோசனை பண்ணி, எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்'' என்று உருக்கமாகப் பேசினார். 

இடையில் ஒரு முறை பிரச்சாரத்துக்காக விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டைக்கு வைகோ சென்றபோது, அவருடன் வந்த கட்சியினரின் வாகனத்தை பெரிய வள்ளிக்குளம் என்ற இடத்தில் சோதனை செய்ய முற்பட்டது பறக்கும்படை. வாக்குவாதம் உண்டாகி "காரை விட்டு கீழே இறங்குங்கடா'' என்று போலீஸ்  அக்கட்சியினரிடம் ஒருமையில் பேசும் அளவுக்கானது. போலீசாருக்கும் தொண்டர்களுக்குமிடையே பிரச்சினை வலுத்ததைக் கண்ட வைகோ, வேனிலிருந்து கீழே இறங்கி "எதற்கு அநாகரிகமாக நடந்து கொள்கின்றீர்கள்? மரியாதைக் குறைவாக பேசுகின்றீர்கள்?" என்று போலீஸாரிடம் நியாயம் கேட்க, போலீசாரும் "நாங்க என்ன மரியாதைக் குறைவாக நடந்துகொண்டோம்?'' என்று வைகோவின் முகத்துக்கு நேராகக் கேட்டுவிட்டனர். உஷ்ணமான தொண்டர்கள் "தலைவருக்கே அவமரியாதையா?" என்று குரல் எழுப்ப, வைகோவும் "நாங்க கொண்டு வந்த சூட்கேஸை நல்லா செக் பண்ணிக்கோங்க...'' என்று திறந்து காட்டி, கட்சியினருடன் சாலையில் அமர்ந்துவிட்டார். இந்த மறியலால் விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் அப்போது சுமார் 30 நிமிடங்கள் வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த விவகாரம் நடக்கும் முன்பு ஒருமுறை "எங்களை செக் பண்ணுறீங்கள்ல... முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டரை செக் பண்ணுவீங்களா?" என்று தனது வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது வைகோ பேசியதும், அதற்கு தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் "முதலமைச்சரின் ஹெலிகாப்டர் என்றாலும் சோதனையிடுவோம்'’ என்று சொல்லியதும், அ.தி.மு.க. தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்தே, வைகோவின் பிரச்சார பயணத்தில் போலீஸ் இத்தனை கெடுபிடி காட்டியதாம். இப்போது ஜெயலலிதா இல்லை, அதிமுகவும் ஒன்றாக இல்லை. மதிமுக, திமுகவுடன் நிற்கிறது.

சென்ற தேர்தல் பிரச்சாரத்தில் தனது சாதனைகளை மட்டுமல்ல.. வேதனையையும் முன் வைத்தார் வைகோ! எவ்விதச் சலனமுமின்றி கேட்டு வைத்தார்கள் வாக்காளர்கள். ஆனால், மீண்டும் அவருக்கு தோல்வியையே பரிசளித்தார்கள். இந்தத் தேர்தலில், கடந்த இரண்டு முறையாக தன்னை எதிர்த்து நின்று, அதில் ஒரு முறை வென்றும்விட்ட காங்கிரசின் மாணிக் தாகூருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வைகோ. ஆரம்பத்தில் சொன்னதுதான், அவரது கூட்டணி மாற்றங்களில் குறை காணலாம். ஆனால், இன்று வரை இந்திய நாடாளுமன்றம் கண்டுள்ள  முக்கியமான, சிறந்த உறுப்பினர்களில் ஒருவர்.


-சி.என்.இராமகிருஷ்ணன்

படம் : அசோக்

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.