Skip to main content

ஐபிஎல் ஸ்பான்சராக சீன நிறுவனம் 'விவோ' தொடரும் என அறிவிப்பு...!

Published on 03/08/2020 | Edited on 03/08/2020

 

IPL

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் 13வது ஐபிஎல் போட்டிக்கு சீன நிறுவனமான 'விவோ'வின் ஸ்பான்சர்ஷிப் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கரோனா நோய்த்தொற்று காரணமாக இந்தாண்டு மார்ச் மாதம் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஊரடங்கை விலக்காமல் அரசு தொடர்ந்து நீட்டித்து வருகிறது. அதனையடுத்து இந்தாண்டிற்கான ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதனையொட்டி நேற்று நடந்த  ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் போட்டியை செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி இறுதிப்போட்டியை நவம்பர் 10ம் தேதி நடத்தி முடிக்கவும் திட்டமிட்டுள்ளது. போட்டிகள் துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய மூன்று இடங்களில் நடத்தப்படும் என்றும் அனைத்து போட்டிகளும் வழக்கமான போட்டி நேரத்தில் இருந்து அரை மணிநேரத்திற்கு முன்னரே தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 'விவோ' நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தம் 2022 வரை இருப்பதால் ஸ்பான்சர்ஷிப்பில் விவோ நிறுவனம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த ஜூன் மாதம் லடாக் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா - சீனா இராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் பலியாகினர். இதன் எதிர்வினையாக இந்தியாவின் பாதுகாப்பு கருதி சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. அச்சமயத்தில் ஐபிஎல் ஸ்பான்சராக உள்ள சீன நிறுவனமான 'விவோ'வை நீக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் ஐபிஎல் நிர்வாகக்குழு தற்போது அறிவித்துள்ள அறிவிப்பு பல விவாதத்தை கிளப்பியுள்ளது. 

 

 

Next Story

தமன்னாவிற்கு சைபர் கிரைம் சம்மன்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
tamanna summoned by maharashtra cyber crime for ipl telecast issue

கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியது. அதன்படி அந்நிறுவனத்தின் செயலியான ஜியோ சினிமா செயலியில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வந்தது. 2023 முதல் அடுத்த ஐந்தாண்டிற்கு ஐபில் தொடரின் டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஃபேர்பிளே என்கிற சூதாட்ட செயலியில் சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதாக கூறி வியாகாம் நிறுவனம் மகாராஷ்ட்ரா சைபர் கிரைமில் புகார் அளித்தது. அந்த புகாரில், ஃபேர்பிளே செயலில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதால் தங்கள் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஃபேர்பிளே செயலியின் ஊழியர் ஒருவரை கைது செய்தனர். மேலும் அச்செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களை விசாரணை செய்ய முடிவெடுத்தனர். அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பாட்ஷா, சஞ்சய் தத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா உள்ளிட்ட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.  

கடந்த 23 ஆம் தேதி சஞ்சய் தத்துக்கு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால், தான் இந்தியாவில் இல்லாத காரணத்தால் தன்னால் ஆஜராக முடியவில்லை என சஞ்சய் தத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது தமன்னாவிற்கு வருகிற 29ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

Next Story

சென்னைக்கு மீண்டும் தோல்வி; தனி ஒருவனாக வெற்றியைத் தேடித்தந்த ஸ்டாய்னிஸ்!

Published on 23/04/2024 | Edited on 24/04/2024
Chennai super kings again lost to Lucknow team

ஐபிஎல் 2024இன் 39 ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் ரகானேவும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே ரகானே 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து வந்த டாரியல் மிட்செல் 11 ரன்களும் ஜடேஜா 17 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 60 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை சென்னை அணியினர் எடுத்தனர்.

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி. லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குவிண்டன் டி காக்கும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். 3 பந்துகளில் ரன் எடுக்காமல் குவிண்டன் டி காக் ஆட்டம் இழக்க, அவரைத் தொடர்ந்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் மறுமுனையில் 14 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுல் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த படிக்கல் 19 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் நின்று அபாரமாக, ஆடி 63 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஸ்டாய்னிஸ் லக்னோ அணியை வெற்றி பெறச் செய்தார். லக்னோ அணி இறுதியாக 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து வெற்றியைத் தனதாக்கிக்கொண்டனர். கடந்த போட்டியிலும் லக்னோ அணி சென்னை அணியை தோற்கடித்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாகவும் சென்னை அணியை லக்னோ அணி தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.