Skip to main content

கடற்கொள்ளையர்களின் அட்டூழியம்: காயத்தோடு கரை திரும்பிய வேதாரண்யம் மீனவர்கள்

Published on 24/01/2022 | Edited on 24/01/2022

 

Vedaranyam fishermen return to shore with injuries

 

வேதாரண்யம் கடற்பகுதியில் மீனவர்களைத் தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் செய்ததோடு லட்ச ரூபாய் மதிப்புடைய பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். காயமடைந்த 3 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் நாகமணி. அவருக்குச் சொந்தமான பைபர்படகில் அதே ஊரைச் சேர்ந்த நாகமுத்து, பன்னீர்செல்வம், ராஜேந்திரன் ஆகிய மூன்று பேரும் இன்று அதிகாலை கோடிக்கரைக்கு தென் கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்குவந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மூன்றுபேர் புஷ்பவனம் மீனவர்களின் படகில் ஏறி, மீனவர்களை இரும்புகம்பியைக் கொண்டு தாக்கி அவர்களைத் தண்ணீரில் தூக்கி வீசியுள்ளனர். 

 

Vedaranyam fishermen return to shore with injuries

 

பின்பு படகில் இருந்த 200 கிலோ வலை, ஜிபிஎஸ் கருவி, வாக்கிடாக்கி செல்போன்  உள்ளிட்ட ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். அதோடு, படகில் இருந்த டீசலையும் எடுத்துச் சென்றனர். அடிபட்டதோடு கரைக்குக்கூட வர முடியாமல் தத்தளித்த மீனவர்கள், மீன் பிடித்துவிட்டு அந்த வழியாக வந்த மீனவர்களிடம் 2 லிட்டர் டீசல் வாங்கிக் கொண்டு அவசரம் அவசரமாக ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு  வந்து சேர்ந்துள்ளனர். அதன் பின்னர் ஆறுகாட்டுத்துறையிலிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அவர்களிடம் வேதாரண்யம் கடலோரக் காவல் குழும போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்