Father came home drunk; Daughter arrested

மதுபோதையில் வீட்டுக்கு வந்து தந்தையை மகளே கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் கட்டுக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். கூலித்தொழிலாளியான இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. மது பழக்கத்தின் காரணமாகவே அவருடைய மனைவி பிரிந்து சென்று விட்டார். இந்த நிலையில் சுரேஷிற்கும் அவரது மகள் ஆர்த்திக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கல்லூரியில் படித்து வரும் மகள் ஆர்த்தி தந்தை சுரேஷிடம் மது அருந்தக் கூடாது என பலமுறை சண்டை போட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 25ஆம் தேதி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சுரேஷ் வீட்டின் திண்ணையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அடுத்த நாள் காலை மர்மமான முறையில் சுரேஷ் உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக ஆர்த்தி பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். சுரேஷின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சுரேஷ் தலையில் தாக்கப்பட்டதற்கான அடையாளம் இருந்தது தெரியவந்தது.

Advertisment

இது தொடர்பாக புகார் கொடுத்த ஆர்த்தியிடமே போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது குடித்துவிட்டு வீட்டிற்கு வர வேண்டாம் என பலமுறை கூறியும் தந்தை கேட்காததால் ஆத்திரத்தில் கட்டையால் அடித்து தாக்கியதாக அவர் ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஆர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மது போதையால் வீட்டுக்கு வந்த தந்தையை மகளே அடித்துக்கொன்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.