தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செயல்படுத்தியது.
இந்த திட்டத்திற்காக தமிழ்நாட்டில், திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர், மதுரை, ஸ்ரீரங்கம் மற்றும் சென்னை ஆகிய ஆறு இடங்களில் பயிற்சி மையங்கள் நடந்துவருகின்றன. இங்கு பயிலும் மாணவர்களுக்கு ஒரு ஆண்டில், ஆகமம், பூஜை உள்ளிட்டவை கற்பிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சி மையத்தில் இதுவரை ஆண்கள் மட்டுமே பயிற்சி பெற்றுவந்த நிலையில், இந்த ஆண்டு மூன்று பெண்கள் இணைந்து அர்ச்சகர் பயிற்சி பெற்றனர்.
ஸ்ரீரங்கம் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற ரஞ்சிதா, கிருஷ்ணவேனி மற்றும் ரம்யா ஆகிய மூன்று பெண்கள் ஓராண்டு பயிற்சியை நிறைவு செய்தனர். இவர்களுக்கு பயிற்சி நிறைவுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
2022 - 2023ம் ஆண்டுக்கான அர்ச்சகர் பயிற்சியில் 94 நபர்கள் ஈடுபட்டனர். இவர்களது பயிற்சி நிறைவடைந்ததை அடுத்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பயிற்சி நிறைவு சான்றிதழ்களை வழங்கினார். இதில் அந்த மூன்று பெண்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “94 நபர்கள் இன்று அர்ச்சகர் பயிற்சி முடித்ததற்கான சான்றிதழைப் பெற்றனர். இதில், மூன்று பெண்களும் பயிற்சி நிறைவு சான்றிதழை பெற்றனர். அதேபோல், மூன்று ஆண்டுகள் கொண்ட ஓதுவார் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கும் இன்று சான்றிதழ் வழங்கப்பட்டது” என்றார்.
கடந்த 2021ம் ஆண்டு பெண் ஒருவர் செங்கல்பட்டு மாவட்டம், மாடம்பாக்கம் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை கோயிலில் ஓதுவாராக பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.