Skip to main content

அமைச்சர் பெருமை பேசி என்ன பயன்?  பிரசவத்தில் குழந்தைகள் உயிர் போகிறதே? -ஒரு கிராமத்தின் ஆதங்கம்!

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

 


உயிர்கள் விஷயத்தில்  அரசு மருத்துவமனைகளும் அரசு மருத்துவர்களும், செவிலியர்களும்  அலட்சியமாக நடந்துகொள்கின்றனர் என்பது தமிழகத்தில் பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது. ஐந்து மாதங்களுக்கு முன் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரத்தில் சாத்தூர் அரசு மருத்துவமனையின் பெயர் அல்லோகல்லோலப்பட்டது. இதுவும் உயிர் சம்பந்தப்பட்ட விவகாரம்தான். அதனால்,  சாத்தூரை அடுத்துள்ள ஏழாயிரம்பண்ணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.  

 

s

 

ஏழாயிரம்பண்ணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை 7 மணிக்கு பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார் முனீஸ்வரி. நண்பகல் 12 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு,  குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்றும் மதியம் 1 மணிக்கெல்லாம் குழந்தை பிறந்துவிடும் என்று அரசு மருத்துவர் தெரிவித்துவிட்டு வெளியில் சென்றுவிட்டார்.

 

s

 

அதனால், மருத்துவர் இல்லாத நிலையில் செவிலியர்களே பிரசவம் பார்த்தி ருக்கின்றனர். குழந்தை இறந்துவிட்டது. அதனால் ஆத்திரமடைந்த முனீஸ்வரியின் உறவினர்கள், ஸ்கேன் செய்தபோது ஆரோக்கியமாக இருந்த குழந்தை, பிரசவம் பார்த்த செவிலியர்களின் கவனக்குறைவால்தான் இறந்தது என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.  

 

s

 

குழந்தை இறந்தது குறித்து முனீஸ்வரியின் உறவினர் வெயில்முத்து “இந்த ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் 12 மணிக்கு வந்து பார்த்துட்டு 12.10-க்கெல்லாம் வீட்டுக்கு போயிட்டாங்க. முனீஸ்வரிக்கு பிரசவம் பார்த்தப்ப டாக்டர் இல்ல. நர்ஸ்தான் பிரசவம் பார்த்தாங்க. டாக்டருங்க பெயரளவுக்குத்தான் வர்றாங்க. போறாங்க. அரை மணி நேரத்துக்கு மேல இங்கே இருக்கிறதில்ல. இதே மாதிரி  எங்க ஊருலயும் (மஞ்ச ஓடைப்பட்டி)  4 குழந்தைங்க செத்துப்போச்சு.

 

s

 

  அந்த 4 குழந்தைங்க உசிர திருப்பிக்கொடுக்க முடியுமா? டாக்டர் மீதும் நர்ஸ் மீதும் நடவடிக்கை எடுக்கணும். இனியும் இந்த மாதிரி பிரச்சனை வரக்கூடாது. கோவில்பட்டி மலர் ஸ்கேன்லதான் ஸ்கேன் எடுக்கணும். இல்லைன்னா பிரசவம் பார்க்க முடியாதுன்னு சொல்லுறாங்க. கோவில்பட்டியில் இருக்கிற மலர் ஸ்கேனுக்கும் ஏழாயிரம்பண்ணையில் இருக்கிற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு எதுவும் லிங்க் இருக்கா? இதையெல்லாம் துறை ரீதியா விசாரிச்சு நடவடிக்கை எடுக்கணும்.” என்றார் ஆதங்கத்துடன். 

 

“வளர்ந்த நாடுகளுக்கு இணையான மருத்துவ வசதிகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே தமிழக அரசின் லட்சியம்” என்று பெருமிதமாகப் பேசுகிறார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அமைச்சர் பேச்சில் காட்டும் வேகத்தை,  சுகாதாரத்துறை செயலில் காட்டுவதில்லை என்பதே நிதர்சனம். 

சார்ந்த செய்திகள்

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

அரசு மருத்துவமனையில் வீசும் துர்நாற்றம்; நோயாளிகள் குற்றச்சாட்டு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Bad smell wafting from Vaniyambadi Government Hospital

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியைச்  சேர்ந்தவர் சத்யா (30). கர்ப்பிணியான சத்யாவின் கரு கலைந்துள்ளது. இதனால் கடந்த வெள்ளிகிழமை அன்று மிகுந்த வயிற்று வலி ஏற்பட்டு உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளதாகவும்  மேலும் மருத்துவமனையில்  சேர்ந்து வயிற்றை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.அதே வார்டில் சுமார் 7 நோயாளிகள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தினமும் காலையில் ஒரு ஊசியும் மாலையில் ஒரு ஊசியும் செலுத்தி விட்டு மாத்திரைகள் கொடுத்துவிட்டு செல்வதாகவும் நேற்று வரை வயிற்றை சுத்தம் செய்து உரிய சிகிச்சை அளிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வார்டில் கட்டில்கள் மேலிருக்கும் போர்வைகள் சரியாக சுத்தம்  செய்யப்படாமல் ரத்தக் கரையுடன் இருப்பதாகவும் தங்கியுள்ள அறையின் கழிவறையிலிருந்து அதிகப்படியான துர்நாற்றம் வீசுவதால்,  அறையில் உள்ள அனைவரும்  துர்நாற்றம் தாங்க முடியாமல் இரவு நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து உணவு உண்பதும்  உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.