Skip to main content

போலீஸ் தாக்கியதில் கால் டாக்ஸி ஓட்டுநர் உயிரிழப்பு; தலைமை காவலர் கைது

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Policeman arrested in case of Call Taxi driver case in Chennai

சென்னை மதுரவாயல் அருகே காவலர் தாக்கியதில் கால் டாக்ஸி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கால் டாக்ஸி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வானகரம் சர்வீஸ் சாலையில் ஒரு பெண்ணுடன் ராஜ்குமார் பேசிக் கொண்டு நின்றுள்ளார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மதுரவாயல் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் ரிஸ்வான் ஓட்டுநர் ராஜ்குமாரிடம் விசாரித்துள்ளார்

அப்போது காவலர் ரிஸ்வானுக்கும் ஓட்டுநர் ராஜ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்பு வாக்குவாதம் முற்றிய நிலையில் காவலர் ரிஸ்வான் ஓட்டுநர் ராஜ்குமாரின் நெஞ்சில் மிதத்தாக தெரிகிறது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜ்குமார் மயங்கி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ராஜ்குமாருடன் பேசிக்கொண்டிருந்த பெண் காவல் கட்டுபாட்டு அறைக்கு தொலைபேசியின் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் மயங்கி விழுந்த ராஜ்குமாரை ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வைத்துள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே ஓட்டுநர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.  ஆனால், ராஜ்குமார் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்த ராஜ்குமாரின் குடும்பத்தார் மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் மதுரவாயல் தலைமை காவலர் ரிஸ்வானை போலீசார் கைது செய்துள்ளனர். ஓட்டுநர் ராஜ்குமார் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், காவலர் ரிஸ்வான் தாக்கியதால்தான் ஓட்டுநர் ராஜ்குமார் இறந்த்து தெரியவந்ததையடுத்து, தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.