Skip to main content

பிளஸ்1 பொதுத்தேர்வில் புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி; அலுவலக உதவியாளர் பணி இடைநீக்கம்

Published on 26/03/2023 | Edited on 26/03/2023

 

nn

 

மேட்டூர் அருகே, பிளஸ்1 பொதுத்தேர்வில் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அனுமதித்ததாக அலுவலக உதவியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

 

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்1, பிளஸ்2 பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. சேலம் மாவட்டத்தில், 155 மையங்களில் தேர்வுகள் நடக்கின்றன. இந்நிலையில், மேட்டூர் அருகே வனவாசியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரு தேர்வு மையத்தில், கடந்த 20ம் தேதி, பிளஸ் 1 மாணவர்களுக்கு பொருளாதார பாடத்தேர்வு நடந்தது.

 

அப்போது மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவியாளராக தேர்வு எழுதியவர்களுக்கு புத்தகத்தைப் பார்த்து எழுத அனுமதித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக இரண்டு பேர் பேசிக்கொள்ளும் 8.30 நிமிட குரல் பதிவு ஒன்று, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.

 

குறிப்பிட்ட அந்த தேர்வு மையத்தின் அலுவலக உதவியாளர் மகாலிங்கம் என்பவரும், தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரான தலைமை ஆசிரியர் ரவி என்பவரும் அந்த குரல் பதிவில் பேசியது தெரியவந்தது.

 

அலுவலக உதவியாளர் மகாலிங்கம், தேர்வுக்கூட விதிகளை மீறி செயல்பட்டதாக தலைமை ஆசிரியர் அவரை கடிந்து கொள்கிறார். புத்தகத்தை பார்த்து எழுத அனுமதித்தது தொடர்பாகவும் இருவரும் காரசாரமாக பேசிக்கொள்வது குரல் பதிவில் இருந்தது.

 

இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் விசாரணை நடத்தினார். தேர்வுக் கூடத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக அலுவலக உதவியாளர் மகாலிங்கத்தை உடனடியாக முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர் ரவி, அந்தப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

 

இதுகுறித்து ஆசிரியர்கள் தரப்பில் கூறுகையில், ''தேர்வை புத்தகத்தை பார்த்து எழுதியதற்கு ஆதாரம் இல்லை. அதேநேரம், சம்பந்தப்பட்ட மையத்தில் பணியில் கவனமாக இருக்காமல் அடிக்கடி மையத்தை விட்டு வெளியே செல்வதும், கண்காணிப்பாளர் சொல்வதை கேட்காமல் இருப்புதும் என மகாலிங்கம் மெத்தனமாக செயல்பட்டார்.

 

இதை கண்காணிப்பாளர் ரவி கண்டித்தார். ஆனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மகாலிங்கமே திட்டமிட்டு, புத்தகத்தைப் பார்த்து எழுத அனுமதித்ததாக பேசி, அந்தப் பதிவை வெளியே கசிய விட்டுள்ளார்,'' என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மேட்டூர் அருகே இருதரப்பினர் மோதல்; போலீஸ் குவிப்பு

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Clash between two sides near Mettur; police presence

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே இரு தரப்பினர் மோதிக் கொண்டதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் காவேரிபுரம் என்ற பகுதியில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் இஸ்லாமியர்கள் தகன பூமி ஒன்று உள்ளது. இந்த நிலப்பரப்பிற்கு அருகே பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் பலர் வசித்து வரும் நிலையில், தங்கள் குடியிருப்பு அருகே உடல்களை அடக்கம் செய்யக்கூடாது எனத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அங்கு சடலம் ஒன்று புதைப்பதற்காக எடுத்து வரப்பட்ட நிலையில், அதைத் தடுத்து நிறுத்திய பொதுமக்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றனர். மேலும் அந்த பகுதி மக்கள் உடனடியாக இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் எனக் கேட்டு சாலை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 22 லட்சம் மோசடி; 5 பேர் மீது வழக்குப்பதிவு!

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
Claiming to buy a job Rs. 22 lakh  Case against 5 people

பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளர் வேலை கிடைத்துள்ளதாக போலி பணி நியமன ஆணை வழங்கி இளைஞரிடம் 22 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பெண் உள்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் புது காலனியைச் சேர்ந்தவர் குணசீலன். இவருடைய மகன் மகாதேவ் (வயது 26). பொறியியல் பட்டதாரியான இவர், சேலம் மாவட்டக் காவல்துறை எஸ்பி அருண்கபிலனிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், “நான் அரசுப்பணிக்காக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை எழுதி வந்தேன். இந்த சூழலில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மேட்டூரைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் அறிமுகம் ஆனார். அவர் பெட்ரோல் பங்க் வைக்க உரிமம் பெற்றுக் கொடுப்பதாகவும், பொதுப்பணித்துறையில் வேலை வாங்கிக் கொடுப்பதாகவும் கூறி, 30 லட்சம் ரூபாய் கேட்டார். அதன்பேரில் பழனிசாமி, அவருடைய நண்பர்கள் சந்தோஷ் பாண்டி, நித்தியானந்தம் ஆகியோரிடம் 22 லட்சம் ரூபாய் கொடுத்தேன்.

இதையடுத்து அவர்கள் எனக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளர் பணி கிடைத்துள்ளதாகக்கூறி, ஒரு பணி நியமன ஆணை கடிதத்தை வழங்கினர். அந்த பணி நியமன ஆணை கடிதத்தை வாங்கிப் பார்த்தபோது அது போலியானது எனத் தெரிய வந்தது. இதனால் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் நான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடும்படி கேட்டேன். ஆனால் பணத்தைத் தர மறுத்து, கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், என்னுடைய பணத்தை மீட்டுத் தர வேண்டும்” எனத்  தனது  புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்தப் புகார் மீது உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கும்படி மாவட்டக் குற்றப்பிரிவுக்கு எஸ்.பி. உத்தரவிட்டிருந்தார். இதன்பேரில் குற்றப்பிரிவு காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பழனிசாமி, கூட்டாளிகள் கந்தபாலன், நித்தியானந்தம், சந்தோஷ்பாண்டி, சுமதி ஆகிய 5 பேரும் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் ஐந்து பேர் மீதும் கூட்டுச்சதி, பண மோசடி, போலி பணி நியமன ஆணை தயாரித்து வழங்கியது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள இவர்கள் 5 பேரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.