ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க தமிழக அரசு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இடைக்கால மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார். தொடர்ந்து ஆறு மாதகால இடைவேளையில் அதே சட்ட மசோதா மீண்டும் கொண்டு வரப்பட்டு பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த தடைச் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆன்லைன் தடைச் சட்ட மசோதாவை 4 மாதம் 11 நாட்கள் கிடப்பில் வைத்திருந்த நிலையில் தமிழக அரசிடம் கூடுதலாக விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பியுள்ளார். மீண்டும் சில திருத்தங்களை செய்து அனுப்பும் படி ஆளுநர் மாளிகை அரசுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநருக்கு தடை மசோதாவை அனுப்பியதில் இருந்து தற்போது கூடுதல் விளக்கம் கேட்டு ஆளுநர் அரசுக்கு அனுப்பிய இடைப்பட்ட 4 மாதம் 11 நாட்களில் பலர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.