குழந்தையை அடித்து கொன்ற தாயின் கள்ளக்காதலன் கைது
சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 26). இவருடைய மனைவி ஜமுனாராணி (22), மகள் யாஷினி (4), மகன் சபரீஷ் (3). ஜமுனாராணிக்கும், கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்த விஜய் (24) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. விஜய்க்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவந்தார். ஆனால் ஜமுனாராணியின் கணவர் கோபிநாத் தனது மகன் சபரீஷை அடித்துக் கொன்றுவிட்டார்கள் என்று மனைவி மற்றும் கள்ளக்காதலன் மீது புகார் செய்தார். இதுகுறித்து புழல் போலீசார் விசாரணை செய்துவந்தனர். விசாரணையில் கள்ளக்காதலன் விஜய் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. புழல் போலீஸ் உதவி கமிஷனர் பிரபாகரன் விஜயிடம் தீவிர விசாரணை நடத்தியதில், குழந்தையை கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விஜயை கைது செய்தனர். போலீசாரிடம் விஜய் கூறியதாவது:-
எனக்கு ஜமுனாராணியுடன் 1.5 ஆண்டுக்கு முன்பு கள்ளக்காதல் ஏற்பட்டது. அவரது கணவர் கோபிநாத் வேலைக்கு சென்ற பின்னர் ஜமுனாராணியுடன் அவரது வீட்டில் உல்லாசமாக இருந்துவந்தேன். ஒரு ஆண்டுக்கு முன்பு ஜமுனாராணி தனது மகனுடன் என்னுடன் வந்துவிட்டார். இருவரும் புழல் ஒத்தவாடை தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தோம்.
சம்பவத்தன்று இரவு சபரீஷ் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தான். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவனை சுவரில் அடித்துக் கொலை செய்தேன். மாடி படியில் இருந்து விழுந்து இறந்துவிட்டதாக நாடகமாடினேன். போலீசாரின் தீவிர விசாரணையில் சிக்கிக்கொண்டேன். இவ்வாறு விஜய் தெரிவித்தார்.