தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் இன்று. அவருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்தைத் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் தொண்டர்களைச் சந்தித்து அவர்களது வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டதோடு நன்றியும் தெரிவித்தார். அங்கு வந்திருந்த தொண்டர்களுக்கு மஞ்சப்பையில் மரக்கன்றுகள் வைத்து வழங்கப்பட்டது. விவசாய சங்கத்தின் சார்பில் ஆட்டுக்குட்டி ஒன்றும், அதேபோல் திமுக தொண்டர்கள் சார்பில் ஒட்டகம் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.
முதல்வருக்கு பிறந்தநாள் பரிசாக ஒட்டகத்தை வழங்கிய திமுக தொண்டர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''தமிழகத்தின் முதன்மையான முதல்வருக்கு ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் உயிர் பொருள்களை வழங்கி வருகிறேன். முதலில் ராஜ குதிரை கொடுத்தேன். அதன் பிறகு ஜல்லிக்கட்டு காளை கொடுத்தோம். அதன்பிறகு வரையாடு கொடுத்தோம். அதன் பிறகு வாஸ்து மீன் கொடுத்தோம். அதன் பிறகு புறா கொடுத்தோம். இந்த வருடம் உலகத்திலே யாரும் செய்யாத செயல், இதற்கு விலை மதிப்பு எல்லாம் கிடையாது. இதுவரை உலகத்தில் யாருக்கும் கொடுக்காத ஒரு பொருளை தலைவருக்காக கொடுக்கிறேன். இந்த ஒட்டகத்தை கொடுக்கிறேன். இதன் வயது இரண்டு. மருத்துவச் சான்றிதழ் எல்லாம் பெற்று விட்டோம். இது வீட்டில் வளர்க்கக்கூடிய ஒரு விலங்கு தான்'' எனத் தெரிவித்தார்.